திரைப்படத்தில் குழந்தைகளும் போர்காலமும்


maxresdefault

உலக திரைப்படங்களில் போர்கால சூழலை அதன் அழிவை விவரிக்கும் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய மதிப்பிருக்கிறது. இயக்குனர்கள் சமூகத்தின் மனசாட்சியாக இவற்றை ஆவணமாக பதிவு செய்திருப்பார்கள். நிறைய குறிப்பிடத்தகுந்த படங்கள் இந்த வகைமையில் இருந்தாலும் சில படங்கள் சாகாவரம் பெற்றவை. அவற்றில் போர்கால சூழ்நிலையை ஒரு குழந்தையில் பார்வையில், புரிதலில் சொல்லும் படங்கள் அதிக நெகிழ்ச்சியையும், மனபாரத்தையும் ஏற்படுத்துபவை. இந்த வகை படங்களை யோசிக்கும் போது எனக்கு சட்டென நினைவுக்கு வரும் படங்கள் விட்டோரிய டி சிகாவில் Bi Cycle Thieves (1948), ராபர்ட்டோ பெனிக்னியின் Life is Beautiful (1997), குயுல்லர்மோ டெல்டோராவின் Pan’s Labyrinth (2006). இந்த படங்கள் மறக்கவே முடியாத அனுபவத்தை தந்துள்ளன.

அதே போல Schindler’s List (1993) படத்தின் ஒரு காட்சியில் 4 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை சுற்றிலும் நாஜி படைகளால் மக்கள் சுட்டு சாகடிக்கும் சூழலில் தனியாக நடந்து சென்று, யாருமற்ற வீட்டில் கட்டிலுக்கு கீழ் சின்ன சிரிப்புடன் பதுங்கிக்கொள்வதும், பிறகு வேறொரு காட்சியில் அந்த குழந்தை சாகடிக்கப்பட்டு வண்டியில் கொண்டுசெல்லப்படுவதும் காட்டப்படும். இயக்குனர் ஸ்பீல்பெர்க் இந்த படத்தை முழுவதும் ப்ளாக் அன்ட் வொயிட்டில் எடுத்திருப்பார். ஆனால் குறிப்பிட்ட அந்த பெண் குழந்தையை மட்டும் சிகப்பு உடையுடன் காண்பித்திருப்பார். பார்ப்பவரின் மனதை கரையச்செய்யும் காட்சி அது. எப்போது இந்த காட்சியை பார்த்தாலும் போர் குறித்த அந்த குழந்தையின் அறியாமையும், சமூக அவலத்துக்கு அவர் பலியாவதும் என்னை அழசெய்யும். (தமிழில் இதுபோன்ற படமாக கன்னத்தில் முத்தமிட்டால் முயற்சிக்கப்பட்டது. ஆனா, வழமையான மணிரத்தின மேதைமையினால் கதையின் அடிப்படை கரு சிதைந்து, அழகியல் துருத்திக்கொண்டது.)

இந்த வகை படங்களின் உச்சம் என Grave of the Fireflies (1988) படத்தை சொல்லலாம். ஹிஷோ டகஹாட்டா இயக்கிய ஜப்பானிய படமான இது அனிமேஷன் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். ஓரளவுக்கு வசதியான குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் அண்ணன், தங்கை ஆகியோர் போரினால் தனித்துவிடப்படுகின்றனர். அண்ணனுக்கு 14 வயதிருக்கும். தங்கைக்கு 4 வயதிருக்கும். இவர்கள் இருவருக்குமே போர் சூழல், அதன் தாக்கம் ஆகியவற்றை புரிந்துகொள்ளமுடியவில்லை. கடைசியில் போரின் மிகக்கோர விளைவுகளால் அவர்கள் இருவரும் இறந்து போவார்கள். மிக அழுத்தமான காட்சிகளால் நிரம்பிய படம். எனக்கு மிகவும் பிடித்த ஆனால் இன்னொறுமுறை பார்க்க விரும்பாத படம் என இந்த படத்தை குறிப்பிடுவேன். பார்க்கும் போது பல இடங்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அதிகாரம், ஆட்சியாளர்களின் ஈகோவினால் நிகழ்ந்த போர்களால் அந்த போட்டியில் எந்த தொடர்பும் இல்லாத எத்தனை எத்தனை எளிய மக்கள் விட்டில் பூச்சிகளை போல மடிகிறார்கள் என்பதை உணரமுடிகிறது.

இந்த வகை படங்களை பெரிய அளவில் மக்கள் பார்க்கவேண்டும். அப்போது இயல்பாகவே மிருக குணம் குறைந்து அன்பு பெருக்கெடுக்கலாம். சகமனிதத்தை போற்றவும் வார்த்தெடுக்கவும் இந்த வகை படங்கள் மிகப்பெரிய கருவியாய் இருக்கக்கூடும்.

Suspect X (2008) – ஜப்பானிய த்ருஷ்யம்.


Comparativeஆ பிசிக்ஸ், கணிதம் படித்தவர்களிடையே logical reasoning வலிமையா இருக்கும். ஆனா, thinking processல் பிசிக்ஸ் படிச்சவங்களுக்கும் கணிதம் படிச்சவங்களுக்கும் அடிப்படை வித்தியாசம் உள்ளது. பிசிக்ஸ் படிச்சவங்க, நிகழ்வுகளை கவனிப்பாங்க. அதிலிருந்து ஹைபொதிஸிஸ் டிரைவ் பண்ணுவாங்க. அந்த ஹைபோதிஸிஸ உறுதி செய்ய ஆய்வுகள் மேற்கொள்ளுவார்கள். ஆனா கணித பின்னணி இருப்பவர்கள் தாம் கவனிக்கும் விஷயங்களின் சாத்தியமாகக்கூடிய எல்லா விளைவுகளையும் ஒவ்வொன்றாக தமது மனசுக்குள் சிமுலேஷன் செய்து ஓட்டிப்பார்ப்பார்கள். ஒவ்வொன்றின் தவறு சரியும் மனசுக்குள் விரிந்து அதனடிப்படையில் இறுதி விளைவினை வரையறுப்பார்கள். கணிதத்தை நேசிப்பவருடைய மனசு + மூளை ஆய்வக லேபைப் போல வேலை செய்யும்.

இப்படி ரெண்டு ஜீனியஸ். ஒருத்தர் பிசிக்ஸ் ப்ரொபஸர் (யுக்கவா). இன்னொருத்தர் அவரது கல்லுரி கால ப்ரெண்ட் கணிதம் சொல்லித்தரும் பள்ளி ஆசிரியர் (இஷிகாமி). இந்த ரெண்டு பேருக்கும் நடக்கும் கேட் அன்ட் மவுஸ் கேம் தான் ஸஸ்பெக்ட் எக்ஸ். இந்த படத்துக்கு இன்னொறு ஸ்பெஷல் இருக்கு. மலையாளத்தில் மரண ஹிட் அடிச்ச த்ருஷ்யம் படத்தோட அடிப்படை கரு இந்த படத்தில் இருந்து துவங்குவதை படம் பார்க்கும் போது உணரமுடியும். நோ. நிச்சயம் இந்த படத்த பாத்து த்ரிஷ்யம் காப்பியடிக்கப்பட்டது என்று சொல்லக்கூடாது. அது மகாஅபத்தம். இந்த படத்துக்கு செய்யும் துரோகம். ஆனா, மெமண்டோவுக்கும் கஜினிக்கும் உள்ள தொடர்பு போல இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கணவனை பிரிந்து தனது டீன்ஏஜ் வயது மகளுடன் வாழும் பெண். அப்பப்ப அவரது கணவன் வந்து அவர்களுக்கு தொந்தரவு கொடுத்து, பணம் பிடுங்கி செல்கிறான். ஒரு நாள் அது போன்ற தருணத்தில் அவனை இந்த பெண்ணும் அவரது மகளும் தற்செயலாக கொலை செய்து விடுறார்கள். பக்கத்து வீட்டில் தனிமையே துணையாக குடியிருக்கும் கணித ஆசிரியர் இஷிகாமி. அவருக்கு அந்த பெண்ணின் மீது ஒருவித அன்பு. அவர்களுக்கு உதவிசெய்ய ஆரம்பிக்கிறார். அந்த பிணத்தை அப்புறப்படுத்தி, அவர்களுக்கு சமாதானம் சொல்லி போலிஸ் வந்தால் எப்படி பதில் சொல்லவேண்டும் என்று பயிற்சி அளிக்கிறார். மறுபக்கம் போலிஸ் பிசிக்ஸ் ப்ரொபசரின் துணையுடன் இந்த கொலையினை துப்பறிய இறங்குகிறார்கள். (இவரோட இன்ரோ சீனே சூப்பர் ஸ்டார் அறிமுகம் போல அத்தன மிரட்டலாக அமைந்திருக்கும்).

யுக்கவாவுக்கும் இஷிகாமிக்கும் இடையிலான பழைய கால நட்பு, அதனை தாண்டி இந்த சம்பவத்தில் அவர்கள் இருவரும் ஒருத்தரை ஒருத்தர் போட்டு வாங்குவது, ஆகியவற்றை சார்ந்து நிகழும் உரையாடல்கள் ரொம்ப டைட்டா, க்ரிஸ்ப்பா ஆணியடிப்பது போல இறங்கும்.

ஒரு கொலை. அதில் தொடர்புடைய சில கதாபாத்திரங்கள். இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு ஆடியன்சுக்கு தண்ணி காட்டும் ஹிட்ச்காக் ஸ்டைலில் இந்த படம் இயங்குகிறது. ஆனா, இதனை வெறும் சஸ்பென்ஸ் திரில்லராக மட்டும் பார்க்கமுடியவில்லை. அதையும் தாண்டி தனது திறமைக்கு உரிய அங்கீகாரமின்மை, அன்புக்கு ஏங்கும் மனதின் ஏக்கம் ஆகியவை எந்த அளவுக்கு ஒருவரை ஆதிக்கம் செய்யும் என்பதை இயக்குனர் (ஹிரோஷி நிஷிதானி) அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.

சினிமாடோக்ராபி க்ரிஸ்டல் தூய்மையுடன் இருக்கும். கடைசி சில காட்சிகளில் இந்த படம் முற்றிலும் வேறொரு தளத்துக்கு சென்றுவிடும். இதன் சுவாரசியத்துக்கும், ப்ரசென்டேஷனுக்கும், பேசுகின்ற முக்கிய பொருளுக்காகவும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.suspect-x-02

தமிழ் சினிமா 2012: பறவைப் பார்வையில்….


2012

சினிமா வெறும் என்டர்டெய்ன்மெண்டுக்காக தான் என எளிதில் கடந்து சென்றுவிடமுடியாது. வருடத்துக்கு 1000 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் புழங்கும் துறை. தமிழக அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகளில் தவிர்க்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்தும் அதிசக்தி வாய்ந்த ஆயுதம். சினிமா பேசும் செய்தியை வெகுஜனமக்களின் ரசனையையும் சமூகப்போக்கையும் வெளிப்படுத்தும் கண்ணாடியாகத் தான் காணமுடிகிறது. இந்தியாவில் வங்காள, மராத்தி மற்றும் மலையாள சினிமாக்களைப் போல தமிழ் சினிமா இன்னும் தனித்துவம் பெறவில்லை என்றாலும் அதற்கான வெளிச்சக்கீற்றுகள் இந்த ஆண்டு தென்பட்டிருப்பது பெரிய ஆறுதல்.

வழக்கம் போல இந்த வருடமும் தமிழ் சினிமாவில் 150க்கும் மேற்பட்ட படங்கள் வெளியானது. இது தவிர ஆங்கில மற்றும் பிறமொழி டப்பிங் திரைப்படங்களின் வருகை இதே அளவுக்கு இணையாக இருக்கும். அப்படிப் பார்த்தால் சராசரியாக மாதத்துக்கு 20க்கும் மேற்பட்ட திரைப்படங்கள். கடல் அலையைப் போல சினிமா ரசிகனை அடுத்தடுத்து கனவுகளின் கடலுக்குள் இழுத்துக்கொண்டே சென்றிருக்கிறது. 10 வருடத்துக்கு முன்பு போல தமிழில் எந்த படமும் 100 நாள் 150 நாள் ஓடக்கூடிய சாத்தியம் இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. இந்த வெள்ளிக்கிழமை வெளிவரும் படம் அடுத்த வெள்ளிக்கிழமை வரை தாங்கினாலே போட்ட பணத்தை எடுத்துவிடலாம். இரண்டு வெள்ளிகளை கடந்து ஓடினால் பெரிய ஹிட் என பெருமிதப்பட்டுக்கொள்ளலாம்.

நேர்மையுடனும், சுவாரசியத்துடனும் சொல்லப்பட்ட எந்த கதையையும் தமிழ் ரசிகன் ஏமாற்றவே இல்லை எனும் போக்கு உருவாகிவருகிறது. நாலு சிப்ஸை காற்றடைத்த பையில் போட்டு அநியாய விலைக்கு விற்கும் லேஸ், குர்குரே பாக்கெட்டுகளை போல ஸ்டார் வேல்யுவின் கவர்ச்சியான அம்சங்களை மட்டுமே ஆதாரமாக கொண்ட குப்பைகளை புறக்கணித்தலும் கடந்த ஆண்டில் ஆரவாரத்துடன் நிகழ்ந்தேறியிருக்கிறது மகிழ்ச்சி தருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டில் என்னை ஆச்சரியப்படுத்திய, பொருளாதார ரீதியில் வெற்றி பெற்ற, மரண மொக்கை அனுபவம் தந்த படங்களை வரிசைப்படுத்தி பார்க்கிறேன்.

thuppakki

இந்த வருடம் ரஜினி, கமல் ஆகிய ஹெவிடுயூட்டி நடிகர்களின் படங்கள் ஏதும் வரவில்லை என்றாலும் 50 கோடிக்கும் மேலாக செலவு செய்து தயாரிக்கப்பட்ட படங்கள் குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் இருந்தன. பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்றி, தந்திரத்துடன் மார்க்கெட்டிங் செய்யப்பட்ட பெரிய நடிகர்கள் நடித்த மெகா பட்ஜெட் படங்களான வேட்டை, சகுனி, பில்லா-2, முகமூடி, 3 (மூன்று), தாண்டவம், மாற்றான், போடாபோடி, நீஎபொவ என ஏறக்குறைய சோ கால்ட் மெகாநடிகர்களை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள் மிகப்பெரிய தோல்வியை தழுவின. இந்த வரிசையில் தப்பிய ஒரே மெகா பட்ஜெட் படம் துப்பாக்கி மட்டுமே. ஆனா, துப்பாக்கியின் வெற்றிக்கு விஜயின் அன்டர்ப்ளே ஆக்டிங்கும் மிக முக்கிய காரணம். அவர் தனது வழக்கமான பஞ்ச்சை இந்த படத்திலும் தூவியிருந்தால் துப்பாக்கி இன்னொறு “சுறா”வாகியிருக்கும்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமாக, குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு, பெரிய நடிகர் பட்டாளம் இல்லால் வெளியான சில படங்கள் தமிழ் சினிமாவின் பெருமிதமாக அடையாளமாகியிருக்கிறது. இவை அனைத்தும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றிருப்பது ஆரோக்கியமானது. காதலில் சொதப்புவது எப்படி, அம்புலி, தடையறத் தாக்க, நான் ஈ, அட்டகத்தி, சாட்டை, சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், கும்கி ஆகிய படங்கள் இந்த லிஸ்டில் வந்திருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான படங்கள் அவற்றின் இயக்குனர்களுக்கு முதல் படமாகும்.

Karnan-Stills-202002

சென்ற ஆண்டில் போட்ட முதலீட்டை சார்ந்து மிக அதிக லாபம் ஈட்டிய படம் “கர்ணன்” என்பது இனிய ஆச்சரியம். நடிகர் திலகத்தின் முத்திரைப் படமான இது கடந்த ஆண்டு டிஜிடலஸ் செய்யப்பட்டு ரீரிலிஸ் செய்யப்பட்டது. இது முதலீட்டை விட சுமார் 15 மடங்கு இலாபம் ஈட்டியதாக கூறப்படுகிறது. இது புதிய சினிமாக்களில் தற்போது இருக்கும் கதை சொல்லல் முறையில் இருக்கும் பஞ்சத்தையே காட்டுகிறது. கர்ணன் வெற்றி, தமிழ் சினிமாவுக்கு புதிய வாய்ப்புகளை திறந்து விட்டிருக்கிறது. இனி வரும் வருடங்களில் இதே வரிசையில் தில்லானா மோகனாம்பாள், உலகம் சுற்றும் வாலிபன், திருவிளையாடல், அடிமைப்பெண் போன்ற காலத்தை வென்ற பசுமையான பொழுதுபோக்கு படங்கள் டிஜிட்டலில் ரசிகர்களை மகிழ்விக்கும் எனலாம். இதன் நீட்சியாக சூப்பர் ஸ்டாரின் “சிவாஜி 3D”யில் மறு வெளியீடு செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்க ஒன்று.

Aravaan-Stills-23

வேறு சில படங்கள் நல்ல கண்டென்ட்டுடன், சிறப்பாக தயாரிக்கப்பட்டிருந்தாலும் சரியான முறையில் மக்களிடம் போய் சேரவில்லை. பெரிய படங்களின் போட்டி, சரியான மார்க்கட்டிங் இல்லாதது, திரையங்க உரிமையாளர்களின் முன்முடிவுகள் போன்றவை முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. இது நல்ல சினிமாவை எதிர்பார்க்கும் கலாச்சாரத்துக்கு எதிரானது என்று மட்டும் புரிகிறது. வழக்கு எண் 18/9, மதுபானக்கடை, அரவான், தோனி, மெரினா, ஆரோகணம், வெங்காயம், ராட்டினம், லீலை, நீர்பறவை போன்ற படங்களை இந்த வரிசையில் குறிப்பிடலாம். இவற்றில் அரவான், மெரினா, நீர்பறவை ஆகிய படங்களுக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்திருந்தாலும் சின்னச்சின்ன திரைக்கதை சறுக்கல்களால் வெற்றிக்கோட்டிற்கு சில அடிகளுக்கு முன்பே சுருண்டு விழுந்தது பரிதாபம்.

ஊருக்கு கருத்து சொல்கிறேன் என்று ஷாட் பை ஷாட் டெரராக கருத்துமழை பொழிந்தோ,  பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் பேசி தமிழ்நாட்டையே காக்க வந்த சூப்பர் ஹீரோவாகவோ இல்லாமல் சொல்லவந்த கதையை நறுக்காக, நாலு பேர் மனம்விட்டு சிரிக்கும் படி கொடுத்த, நண்பன், ஒருகல் ஒரு கண்ணாடி, கலகலப்பு, மனம் கொத்தி பறவை போன்ற படங்கள் உள்ளடக்கத்தில் பெரிய ரிஸ்க் எடுக்காமல் பாதுகாப்பாக காமெடி மற்றும் எளிய சென்டிமெண்ட்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டதால் மக்கள் விரும்பிய என்டர்டெய்னராகவும் வியாபார ரீதியாக பெரிய வெற்றியும் பெற்றுள்ளது.

“என்னதான் ஆயிரம் படங்கள் வந்தாலும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த “யாருக்கு யாரோ” புகழ் சாம் ஆண்டர்சன், “லத்திகா” புகழ் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோரின் அமர காவியங்கள் இந்த வருடம் வராதது தமிழ் சினிமாவுக்கு சூனியம் வைத்தது போலாகி விட்டது”  என தீவிர மொக்கை சினிமா ரசிகர்களின் வருத்தம் அடுத்த வருடம் நீங்கிவிடும் என நம்புவோம். 🙂

மொத்தமாக கடந்த ஆண்டின் தமிழ் சினிமா சூழலை தொகுத்துப்பார்க்கும் போது கலவையான உணர்வுகள் வெளிப்படுகின்றது. நாலில் மூன்று பங்கு படங்கள் வந்த அடையாளமே தெரியாமல் தொலைந்து போனதும், மிச்சமிருந்த எதிர்பார்ப்பு மிகுந்த படங்களுக்கு அந்த எதிர்பார்ப்பே வில்லனாக மாறியதும், சாலையோரத்தில் நம்மை கடந்து செல்லும் பேருந்தில் இருந்து குழந்தைகள் நாம் எதிர்பார்க்காத தருணத்தில் உற்சாகமாய் நம்மைப் பார்த்து கையசைத்து புன்னகைக்கச் செய்வது போல புதிய இயக்குனர்களின் படங்கள் தமிழ் சினிமாவின் உற்சாகத்துக்கு காரணமாய் அமைந்திருக்கின்றன.

kumki (9)

இந்த வருஷத்தில் வடிவேலு இல்லாத காமெடிக்கு மக்கள் பழக்கப்பட்டு விட்டார்கள், திரிஷா, ஷிரேயா, நயன்தாரா என சுற்றி வந்து இந்த வருடத்தின் கனவுக்கன்னிகளாக காஜல் அகர்வாலும் அனுஷ்காவும் பொறுப்பை சரி விகிதத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள் (சரி சரி, சமந்தாவை அடுத்த வருஷ ஆட்டதுல சேர்த்துப்போம்), வருடத்தின் கடைசி மூன்று மாதங்களில் மாதத்துக்கு ஒரு சூப்பர் ஹிட் கொடுத்த விஜய் சேதுபதி காட்டில் நல்ல மழை அடித்துப் பொழிந்துள்ளது, எப்பவுமே நான் ராஜா என்று இசைஞானியின் நீஎபொவ பாடல்கள் புத்துணர்ச்சி தந்துள்ளது, கலைஞர் டீவியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கெடுத்த பங்கேற்பாளர்களில் ஒவ்வொறுவராக பெரிய அளவில் ஜெயிக்கத் துவங்கியிருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக 2012 தமிழ் சினிமா : மழைக்கால தூறலில் கிடைத்த சூடான இஞ்சி டீ போல சர்ப்ரைசிங்காக இருக்கிறது.

************************

Gold top 10 winner

இப்ப என்னுடைய பார்வையில் கவுண்ட் டவுன் லிஸ்ட்:     

டாப் 10 தமிழ் திரைப்படங்கள் 2012:

  1. வழக்கு எண் 18/9: சொந்த ப்ரெஷ்ஷான சிந்தனையுடன் படங்கள் வருவது குறைந்து போன காலகட்டத்தில் மிகவும் சின்சியராக எடுக்கப்பட்ட படம். படத்தின் நடிகர்கள் பற்றி இன்று வரை தெரியாது. ஆனால் பாலாஜி சக்திவேலின் உழைப்பும் டீடெயில்ஸ்சும் படத்தை உச்சாணிக்கொம்பில் நிறுத்தியிருக்கிறது. கிளைமேக்ஸ் தவிர்த்து பார்த்தால், இந்த படம் உலக சினிமாவுக்கான தமிழின் பங்களிப்பு எனலாம்.
  2. காதலில் சொதப்புவது எப்படி?: நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் குறும்படமாக எடுக்கப்பட்ட படம். அதுவே முழுநீளப்படமாக சுவாரசியம் கெடாமல், மாறுபட்ட பிரசன்டேஷனுடன் வந்து பிரமாதமான பாராட்டை பெற்ற படம். சித்தார்த் மற்றும் அமலா பாலின் எளிமையான யதார்த்தமான நடிப்பு அழகு.
  3. நான் ஈ: தெலுங்கிலும் தமிழிலும் தயாரிக்கப்பட்ட படம். தெலுங்கு சினிமா உலகின் ஷங்கர் என்று கொண்டாடப்படும் ராஜமவுலியின் முதல் தமிழ்படம். அனிமேஷன் தொழில்நுட்பத்தின் உச்சமாக வந்து அசத்திய படம். வழக்கமான காதல், மோதல், பழிவாங்கல் தான் கதை என்றாலும் சொன்னவிதத்தில் கவனத்தை ஈர்க்கிறது.
  4. பிட்சா: தமிழின் டிரென்ட் செட்டர் படம். ஹாரர் படங்கள் பெரும்பாலும் தியேட்டரில் காமெடியாக முடியும். கடைசியாக யாவரும் நலம் நல்ல பய அனுபவத்தை கொடுத்தது. இந்த படத்தின் ஹாரர் ஃபீலிங் மிக வலிமையானது. இடைவேளை வரை தியேட்டரில் ரசிகர்களின் நடுநடுக்கமே இந்த படத்தின் வெற்றி. க்ளைமாக்ஸ் யூகிக்கமுடியாத படி, கண்ணாமூச்சி காட்டியது ரசிக்கப்படவேண்டியது.
  5. நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்: என்னாச்சி? தமிழ் சினிமாவுக்கு? என்று கேட்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம். கடைசி ப்ளாக் வரை ஹீரோயினையே காட்டவில்லை. வில்லன் கிடையாது, ஆலமரம், நசுங்கிபோன சொம்பு, ஊர்பஞ்சாயத்து கிடையாது, சும்மா பத்து கேரக்டர்களை வைத்துக்கொண்டு சுவாரசியமான படத்தை கொடுத்து, இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை படமாக பெயரை தக்கவைத்துக்கொண்டார் இயக்குனர்.
  6. தடையற தாக்க: மகிழ்திருமேனியின் முதல் படம் கைவிட்டுவிட, இந்த படத்தில் விட்டதையும் சேர்த்து பிடித்துவிட்டார். ஒரு ஆக்ஷ்ன் படத்துக்கு உரிய மிக தெளிவான திரைக்கதை. கடைசிவரை ஏறிய டெம்போகுறையாமல் சென்றது படத்தின் பெரிய பலம். அருண் விஜய்க்கு நல்ல திருப்பம் அளித்த படமாகவும் அமைந்தது.
  7. சாட்டை: மெகா சீரியல்கள் போல பிழிய பிழிய சென்டிமெண்ட்டும் நாடகத்தனமான காட்சிகளும் நிரம்பியிருந்த படமென்றாலும் அரசு பள்ளிகளின் கான்டெம்பொரரி நிலை நிதர்சனமாய் காட்டியதற்கும், அதை திருத்துவதற்குறிய வாய்ப்புகளையும் கோடுபோட்டு காட்டியுள்ளது நிச்சயம் கவனம் கொள்ள வேண்டியது.
  8. கும்கி: பிரபு சாலமனுக்காக பெரிதும் எதிர்பார்த்த படம். நிச்சயம் ஏமாற்றவில்லை. ஆனால் இன்னும் மெருகேற்றியிருக்கலாம் என்று தோன்றியது. நான் ஈ போலவே அன்புக்காக தன் உயிரை தியாகம் செய்யும் ஒரு மிருகத்தின் கதை. கதைக்களன் தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதிது. பளிங்கு கண்ணாடி போல ஒவ்வொறு ஃப்ரேமும் அவ்வளவு அழகு, சுத்தம், பசுமை.
  9. சுந்தர பாண்டியன்: சசிகுமாருடைய டெம்ப்ளேட் படம். கிராமிய நட்பு, நட்பின் துரோகம், பழிவாங்கல், நட்பை மன்னித்தல் என்ற அவருக்கு வாகான ஏரியாவில் நின்னு விளையாடியிந்தார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்ததால் கதை சீராகவும், சுவாரசியமாகவும் சென்றது.
  10. துப்பாக்கி: படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் படம் பார்த்து முடிக்கும் வரை அதைப்பற்றியே சிந்தனை எழாமல் படத்துடன் ஒன்றவைத்தது திரைக்கதையின் வெற்றி. ரொம்ப க்ரிஸ்பான திரைக்கதையும் எடிட்டிங்கும் படத்தின் பலம். முருகதாஸ் துப்பாக்கியின் குறி ரமணாவுக்கு பிறகு இந்த முறை தான் தப்பாமல் சுட்டிருக்கிறது.

ஆகச்சிறந்த டாப் மொக்கைத் திரைப்படங்கள் 2012

மொக்கை படங்களுக்கு காரணங்கள் தேவையில்லை. இவை அனைத்தும் ஒரு வகையில் தமிழ் ரசிகர்களை லகுடபாண்டிகளாக நினைத்துக்கொண்டு, பெரிய நடிகரின் கால்ஷீட்டும், நல்ல டெக்னிகல் டீமும் இருந்தால் பணத்தை சுலபமாக அள்ளிவிடலாம் என்ற மதப்பில் எடுக்கப்பட்டவை.

  1. சகுனி
  2. தாண்டவம்
  3. மாற்றான்
  4. பில்லா 2
  5. வேட்டை

அவர்களை குற்றம் சொல்வதற்கு எனக்கு தகுதியில்லை என்றாலும் ரசிகர்களின் ரசனையை மதித்து குறைந்தபட்ச நேர்மையையாவது படத்தில் செலுத்துங்கள் என சொல்வதற்கு உரிமை இருக்கிறது.

டிஸ்கி: இந்த தரப்படுத்துதல் சாதாரண திரைப்பட ரசிகனான எனது பார்வையின் புரிதலில் அமைந்த பட்டியல் மட்டுமே. இது தான் அல்டிமேட் தமிழ் சினிமா என எல்லாரும் ஏற்றுக் கொள்ளவேண்டிய கட்டாயம் இல்லை.

பாலாஜி சக்திவேலின் படைப்புலகம்


எப்பவாவது படத்தை எடுத்தாலும் எப்பவுமே என்னளவில் நெருக்கமாக இயக்குனர் பட்டியலில் பாலாஜி சக்திவேலுக்கு தனித்த இடம் கண்டிப்பாக இருக்கும். 2002ல் ஆரம்பித்து 2012 வரை நான்கே நான்கு படங்கள். சாமுராய், காதல், கல்லுரி மற்றும் வழக்கு எண் 18/9. இவை அனைத்துமே ஒருவகையில் சமூக பிரச்சனைகள் பற்றி பேசிய படங்கள்.

வழக்கமான தமிழ் சினிமா கலாச்சாரத்தின் படி, ஹீரோ என்ட்ரி, ஹீரோயினோட கெமிஸ்ட்ரி, வில்லனோ பிசிக்ஸ் என்ற டெம்ப்லேட்டில் இல்லாமல், எளிய மக்களின் போராட்ட வாழ்வின் மறுபக்கத்தை முகத்திலடித்தாற்போல சொல்லக்கூடியவை இவரது படங்கள். இதில் சாமுராய் மட்டும் கொஞ்சம் ஹீரோயிச பாணியில் சொல்லப்பட்ட கதை.

தமிழ் சினிமா உலகில் எத்தனை பெரிய அப்பாடக்கர் இயக்குனர் என்றாலும், எடுக்கிற படம் நல்லா வியாபாரமாக வேண்டும். தயாரிப்பாளர் காசு சம்பாதிப்பது ரொம்ப அவசியம். அதிலும் இயக்குனருடைய முதல் படம் அவரது வாழ்வின் தலையெழுத்தை நிர்ணயிப்பது. ஆனால் இவரது சாமுராய் படம் நல்ல காஸ்டிங், மேங்கிங்கில் வந்திருந்தாலும் சரியாக ஓடாததால் சினிமா உலகத்தில் இவரது அடையாளம் வெளிப்படாமலேயே இருந்தது. திரும்பவும் ஷங்கருடன் பணியாற்றினார். வணிக ரீதியாக வெற்றிபெற முடியாததாலேயே இவரது திறமையை வெளிக்காட்ட அடிக்கடி தீக்குளிக்கவேண்டியிருந்தது. அப்படியிருந்தும் வாழ்வாதாரத்துக்காக கமர்ஷியல் சினிமா சூழலில் இவர் விழுந்துவிடாமல் இருந்தது தமிழ் சினிமாவின் புண்ணியம்.

அதற்கப்புறம் ஷங்கரின் தயாரிப்பில் காதல் படம் வெளிவந்தது. இந்த முறை படத்தில் பெரிய ஸ்டார்கள் யாரும் இல்லை. ஏறக்குறைய அனைவரும் புதுமுகங்கள். மிக வலிமையான கதைசொல்லலால் இந்த படத்தில் பங்கெடுத்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என எல்லாருக்கும் மிகப்பெரிய வாழ்வினை அளித்தது. இந்த முறை பாலாஜி தன் கேரியரின் பெரிய ஸிக்சரை அடித்தார். தன்னை மிகச் சரியாக வெளிப்படுத்திக் கொண்டார்.

அதற்கடுத்து இவரது இயக்கத்தில் நடிக்க, படத்தை தயாரிக்க நிறைய பேர் காத்திருந்தாலும், ஒரு பெரிய இடைவெளி விட்டு அதே ஷங்கர் பிக்சர்சுக்காக கல்லுரி படம். அந்த படமும் சமூகத்தில் நல்ல அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. தமன்னாவிற்கு பெரிய ரீஎன்ட்ரி கொடுத்தது. அந்த படத்தில் ஒரு சிறு நகரத்தில் இருக்கும் அரசு கல்லுரிகள், அங்கு படிக்கும் மாணவர்களின் பின்புலம் பற்றி முன்பு சொல்லப்படாத பல செய்திகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கடைசி காட்சிகள், அரசியல் கேவலத்தின் வெட்கக்கேட்டினை உணர்த்தியிருந்தது.

அதற்கடுத்து வழக்கு எண் 18/9. இந்த படத்தை தமிழ் சினிமாவில் நிகழ்ந்த முக்கியமான அற்புதம் என்று கூட சொல்லலாம். ஆரண்ய காண்டதுக்குப் பிறகு புதிய போக்குப் படமாக அமைந்திருந்தது. ஸ்டில் கேமிரா, மிக எளிமையான தொழில்நுட்ப வசதிகள், அதிக செலவில்லாத தயாரிப்பு என லோ புரொபைலில் படம் எடுக்கப்பட்டிருந்தாலும் கதையில் கனத்திலும், திரைக்கதையில் மெனக்கெடலிலும், பாத்திர உருவாக்கத்தின் நுணுக்கத்திலும் இன்றைக்கு பாடல் காட்சிக்கு எந்த வெளிநாடு போகலாம் என்று திட்டமிடும் பல இயக்குனர்களுக்கு மிகப் பெரிய படிப்பினையாக அமைந்துள்ளது.

மகேந்திரனின் பாத்திரப்படைப்பு, பாலுமகேந்திராவின் உள்ளடக்க டீடெயில்ஸ் என்று கலந்துகட்டிய அற்புத இயக்குனராக பாலாஜி சக்திவேல் இருக்கிறார். இவரது படங்களில் எல்லாம் சில அடிப்படை அம்சங்கள் / அவரது நம்பிக்கைகள் திரும்பத்திரும்ப வருவதை கவனிக்க முடியும்.

  1. ஆட்சி அதிகாரம் மற்றும் பணபலம் இருப்பவர்கள் செய்யும் தவறுகள் அநியாயங்கள் எளிமையான மக்களை பாதிக்கிறது. (சாமுராயில் தவறு செய்யும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், காதல் படத்தில் சாதிய ஆதிக்கவெறி, கல்லுரியில் பஸ்ஸை எரிக்கும் கட்சிக்காரர்கள், வழக்கு எண்ணில் பணபலம் மிக்க மேட்டுகுடி)
  2. உயர்தட்டு குடும்ப பிள்ளைகள் பாலியல் ஒழுக்ககேட்டை சந்திக்கின்றனர் (சாமுராயில் அனிதா கேரக்டர் மீதான பாலியல் வன்முறையும், வழக்கு எண் படத்தின் அடிப்படை பிரச்சனையும் ஒரே வகையில் அமைந்திருப்பது)
  3. எளிமையான மக்களை ஏமாற்ற செயல்படும் நயவஞ்ச, தந்திரக்காரர்கள் (காதல் படத்தில் சித்தப்பா கேரக்டர், வழக்கு எண்ணில் இன்ஸ்பெக்டர்)

இவை எல்லாவற்றையும் விட, முதல் படமான சாமுராயைத் தவிர, மற்ற மூன்று படங்களின் கிளைமேக்ஸ் காட்சிகள் பெரிய ஒற்றுமையை கொண்டுள்ளதை கவனிக்கமுடியும். அவை அனைத்திலுமே ஹீரோ எதிரிகளை பரந்து பரந்து அடித்து, பத்து சுமோக்களை பறக்கவிட்டு, அழித்து துவம்சம் செய்து நீதியை நிலைநாட்டுவதில்லை. எல்லாவற்றிலும் எளிய மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களின் அவலநிலைக்கு மகிழ்ச்சிகரமான, நம்பமுடியாத முடிவைத் தராமல், யதார்த்தத்தை ஒட்டி என்ன நிகழக்கூடுமோ அதையே உண்மைக்கு அருகில் தர முயற்சித்திருக்கிறார். இந்த காரணத்தால் எனக்கு பாலாவின் படைப்புகளை விட இவரது படைப்புகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

கடைசியில் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் பார்வையாளர் குறைந்த பட்சம் அடுத்த வேளை உணவை உண்ணும் வரையாவது அதன் தாக்கத்தில் இருப்பான். சினிமா வெறும் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் வெகுஜனமக்களின் சிந்தனைப் போக்கை ஒரு மில்லிமீட்டர் அளவுக்காகவாவது வளர்க்க முயற்சிக்கவேண்டும். அந்த வகையில் பாலாஜி சக்திவேல் தொடர்ந்து நம்பிக்கையளித்து வருகிறார். மனமார பாராட்டுவோம்.

கரடி குட்டி


வாழ்க்கை தான் எவ்வளவு எதிர்பாராமைகள் நிறைந்தது. நமக்கான மகிழ்ச்சியும் ஆபத்தும் அடுத்தடுத்த வினாடிகளில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதே வாழ்வை இன்னும் சுவாரசியமாக்குகிறது.  இது மனிதருக்குத் தான் என்றில்லை. உலகின் எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். இந்த காணொளியில் ஒரு கரடிக்குட்டியின் உயிர் போராட்டம், பதைபதைப்பை தாண்டி பல படிப்பினைகளை நமக்கு தருகிறது. இது முழுமையான ஒரே வீச்சில் அமைந்த காணொளியாக இல்லாமல் சின்னச் சின்ன எடிட்டிங் மற்றும் சில டிங்கரிங் வேலை செய்யப்பட்டாலும் உணவுக்கான போராட்டத்தை விட உயிருக்கான போராட்டம் வலிமை மிக்கது என்பதை பலமாக நிறுபிக்கிறது. கடைசி சில வினாடிகள் மனதை நெகிழச்செய்பவை.

தமிழின் இயக்குனர்களும் ரசிகர்களும்


15 வருஷத்துக்கு முன்பு குமுதத்தில் வந்த கட்டுரை ஞாபகத்துக்கு வருகிறது. சென்னையையே பார்க்காத கிராமத்து மனிதரை சென்னைக்கு கூட்டிவந்து, ஊர் சுற்றிக்காட்டி அவருடைய ரியாக்ஷன்களை பதிவுசெய்திருந்தார்கள். அதில் ஒரு அங்கமாக சினிமா படபிடிப்பினை பார்வையிடவைத்திருந்தனர். அந்த டைரக்டரை தயங்கித் தயங்கி கிராமத்தவர், “சினிமாவை எப்படி 3 மணி நேரத்தில் எடுக்கமுடியுது?” என்று கேட்ட அவரின் கேள்வி நமது மக்கள் எவ்வளவு அப்பாவியாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது. பொதுஜனங்களிடையே சினிமா பற்றி இருக்கும் இது போன்ற மாயவியப்பின் விளைவாகவே சினிமாவின் கதாநாயகர்கள் நம்மை ஆள்வதும், கடவுளாகுவதும் நிகழ்கிறது. ஆனால் காலம் எல்லா மாயத்தையும் கட்டுடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. நிச்சயம் இன்றைய தேதிக்கு தமிழ் ரசிகன் இவ்வளவு அப்பாவியாக இல்லை. அவன் சினிமா எது நிஜம் எது என்பதை குறைந்தபட்ச அளவிலாவது புரிந்து வைத்துள்ளான். சினிமா தரும் குச்சிமிட்டாய்க்கும் குருவிரொட்டிக்கும் மயங்குவதில்லை. இதற்க்கெல்லாம் அடிப்படை காரணம், உலகமயமாக்கலால் பெருமளவில் அன்னிய மொழிப்படங்களின் பரிட்சயம் ஏற்பட்டதும் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் ஏற்பட்ட இண்டர்நெட்டின் வீச்சும் தான். இது சராசரி ரசிகனுக்கு சினிமா பற்றிய பலவித சாய்ஸ்களை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையான கதை, திறமையான பிரசன்டேஷன் இல்லாத திரைப்படங்கள் குப்பைக்குத் தள்ளப்படும் போக்கு நம் காலத்தில் நிகழ்ந்துவருவதை ஆமோதித்துத்தான் ஆகவேண்டும்.

பொல்லாதவன் படம் வெளிவந்த நேரம். விஜய் டீவியின் மதன் திரைப்பார்வையில், இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன் படம் பற்றி பேசிக்கொண்டிருந்தார். “இந்தப்படத்தை பைசைக்கிள் தீவ்ஸ் படத்தின் தழுவல் என்று பேசிக்கறாங்களே…” என்ற மதனுடைய கேள்விக்கு வெற்றிமாறன் சற்றுத் தடுமாறித்தான் போனார். தொடர்ந்து பேசிய மதன், “இல்ல… இந்த படத்துக்கும் அதுக்கும் தொடர்பிருப்பதாக நான் நினைக்கல” என்று சொன்னபிறகு, ஆசுவாசமான வெற்றிமாறன், “சார். பொல்லாதவன் படமும் பைசைக்கிள் தீவ்சும் வேற வேற. அந்த படம் கிளாசிக். அப்படி அந்த படம் போல இது இருக்குன்னு சொன்னாங்கன்னா நான் கொடுத்துவைச்சவன்” என்று சிறு புன்னகையுடன் சொன்னதாக ஞாபகம். பைசைக்கிள் தீவ்சில் சைக்கிள் காணமல் போகிறது. பொல்லாதவனில் பைக் காணாமல் போகிறது. இந்த ஒரு முடிச்சை மட்டும் வச்சிக்கிட்டு அதோட காப்பி தான் பொல்லாதவன் என்று சொல்லும் தமிழின் திரைவிமர்சனக் கலைஞர்களின் ரசனை பயப்படவைக்கிறது. அதே போலத்தான் கஜினி படம் வந்த போது, அது மெமொண்டோவோட காப்பின்னு அடிச்சுவிட்டாங்க. சமீபத்தில் வெளிவந்த யுத்தம் செய் படத்தையும் மெமரிஸ் ஆப் மர்டர் படம்ன்னு சொல்லிக்கிழிக்கிறாங்க. இது போன்ற புரிதலற்ற விமர்சனங்கள் நம்முடைய சினிமா ரசனையின் மொன்னைத்தன்மையையே வெளிப்படுத்துகிறது.


அதே நேரத்தில் நந்தலாலாவுக்கு கிகுஜிரோவிலிருந்து சீன்-பை-சீன் அப்படியே அளவெடுத்து ஜெராக்ஸ போட்டுவிட்டு இது என்னுடைய சொந்தகதை என்று சண்டித்தனம் செய்த மிஷ்கின், டீரெயில்ட் படத்தை அச்சாக தமிழுக்கு பச்சைக்கிளி முத்துச்சரமாக எடுத்துவந்த கௌதம், செல்லுலார் என்ற படத்தை ரெண்டு மூனு பேர் வேறுவேறு நடிகர்களைப் போட்டு தமிழ்படுத்திய விதம் (ஒரு வெர்ஷனில் ரித்திஷ், இன்னொரு வெர்ஷனில் எஸ்.வி.சேகர் மகன் நடித்ததாக ஞாபகம்) ட்சோட்சி படத்தை தமிழ் படுத்திய யோகி படம் (இப்போதைக்கு இவ்வளவு படங்கள் தான் என் ஞாபகத்தில் வருகிறது) போன்றவை சகித்துக்கொள்ளமுடியாதது. இதில் மூலப்படத்துக்கு எந்த கிரெடிட்டும் கொடுக்காமல், என்னமோ, தாங்கள் முட்டுச்சந்தில் மொட்டுவலைய பாத்துப்பாத்து யோசிச்சு எழுதியது போல, a flim byன்னு தன்னோட பெயரை போட்டுக்கொள்வது அயோக்கியத்தனம்.

 

இந்த பிரச்சனைகளை தவிர்ப்பதற்காகவே வெற்றிமாறன் ஆடுகளத்தில் பிளிமோகிராபியை வைத்து கேச்சி, அமரோஸ்பெராஸ் என்று ஒரு நீளமான படலிஸ்டை கொடுத்துவிட்டார் என நினைக்கிறேன். கண்டிப்பா அமரோஸ் பெராஸின் நாய்ச்சண்டையை ஆடுகளத்தோடு தொடர்புபடுத்தி எழுதும் வாய்ப்பு குறைவென்றாலும் வாலண்டரியாக தன்னுடைய இன்ஸ்பரேஷன்களை வெளிப்படையாக ஒத்துக்கொண்டது தமிழ்சினிமாவின் பாசிட்டிவ் போக்காகவே பார்க்கத் தோன்றுகிறது. ஒருவகையில் இதை வருங்காலங்களில் தவிர்க்கமுடியாது. இப்பல்லாம் உலகப்படங்கள் பர்மாபாஜாரிலும், டோரண்டிலும் கொட்டிக்கிடக்கிறது. சாதாரண ரசிகர்கள்கூட உலகப்படங்களை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இனிமே நம்ம இயக்குனர்கள் உலகப்படத்தை உல்டா செய்வதை ரொம்ப சுலபமாக கண்டுபிடித்துவிடமுடியும்.
மாறிவரும் சமூக-தொழில்நுட்பச்சூழலில் தமிழ் இயக்குனர்கள் சொந்த கதையை வைத்து படமெடுப்பது மட்டுமே அவர்களை நிலைக்கச்செய்யும் . சொந்த சரக்கு இல்லை, ஜெராக்ஸ் தான் எடுக்கமுடியும்னா முன்கூட்டியே கன்பெஷன் செய்துவிடவேண்டியிருக்கும்.

2000ம் ஆண்டுக்கு பிறகு வெளிபட்டு வரிசை கட்டி வரும் புதிய தலைமுறை இயக்குனர்கள்,  மிஷ்கின், வெற்றிமாறன், கௌதம், சுசீந்திரன், சசிகுமார், அமீர், சமுத்திரகனி, ராம், வசந்தபாலன், பிரபுசாலமன், ராதாமோகன், சற்குணம், பாண்டிராஜ், ராசுமாதவன், செல்வராகவன், பாலாஜி சக்திவேல்  (இந்த வரிசை தரமதிப்பீட்டில் அமைந்ததல்ல, எழுதும் போது மனதில் தோன்றிய ரேண்டம் பெயர்கள்) எல்லாரும் தமிழ்சினிமாவின் மிகப் பெரிய நம்பிக்கைகளாக தெரிகிறார்கள். அதற்கான உழைப்பும், தகுதியும் நிச்சயம் இவர்களுக்கு இருக்கிறது. ஆனால், மாறிவரும் சூழலின் தன்மையறிந்து வேற்று மொழிப்படங்களை பிரதியெடுப்பதற்கு பதிலாக நமது மண்ணிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் கதைகளைச் சொல்லத்துவங்கவேண்டும்.

சமீபத்தில் நடுநிசிநாய்கள், யுத்தம் செய், ஈசன் ஆகிய 3 படங்களை தொடர்ச்சியாக பார்க்கநேர்ந்தது. இந்த மூன்று திரைப்படங்களின் கதையின் தளம் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தது. நகரச்சூழலில் இளம்பெண்களுக்குக்கெதிரான பாலியல் வன்முறை, அதைச்சார்ந்த பழிவாங்கல் என்று கதையின் வடிவம் குறுகியிருந்தது. ஆனால் இந்த மூன்று படங்களின் இயக்குனர்னர்களின் இதற்கு முந்தைய படங்கள் வி.தா.வ, நந்தலாலா, சுப்ரமணியபுரம் வெவ்வேறு கதைத்தளத்தில் சொல்லப்பட்டவையாக இருந்தது சுவாரசியம். தொழில்நுட்பமும் திரைமொழிபற்றிய புரிதலும் விரிந்து செல்லச்செல்ல, நமது கதைத் தளத்துக்கான கரு பழிவாங்கல், காதல், வன்முறை என குறுகிக்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சினிமாவின் வியாபாரத்தைத் தாண்டி, ரசிகனின் ரசனையை அடுத்தநிலைக்கு எடுத்துச் செல்வது சினிமா பிழைத்திருப்பதற்கான கட்டாயமும் ஆகும். தமக்கான பார்வையாளர்களும் வியாபாரமும் மிகக்குறுகிய அளவே இருந்தாலும் சமரசம் செய்யாத ஆகச்சிறந்த படங்கள் மராத்தி, மலையாளம், வங்காளம் ஆகிய மொழிகளில் வரும் போது, ஒரு தமிழ் சினிமாவுக்கான வியாபார சாத்தியம் 300, 400 கோடிகள் அளவில் இருக்கும் போது (உபயம்: எந்திரன்) அதன் முழுவீச்சை நாம் இன்னும் பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. எப்படி, ஈரானிய, கொரிய திரைப்படங்கள் தம்முடைய தனித்துவமான திரைமொழியால் தமக்கென தனிஇடத்தை உலகத்திரை அரங்கில் பிடித்ததோ, அதே காலம் தமிழுக்கும் வரவேண்டும். இதற்கான பொறுப்பு இயக்குனர்கள், ரசிகர்கள் என இருவருக்குமே இருக்கிறது.

எந்திரன்: சாரி ஷங்கர்


வீட்டுக்காரம்மாவோட தொந்தரவு தாங்காமல் நேற்று மாலை எந்திரன் போகவேண்டியிருந்தது. எங்க ஊரில் எந்திரன் ஃபீவர் ஒரு வாரத்துக்குள்ளேயே குறைஞ்சிடுச்சு. ஈவினிங் ஷோ, 50ரூபாய்க்கே கோல்டன் மினியில் டிக்கட் கிடைத்தது. (ஆனா, 20 நாள் கழித்தும், நான் மகான் அல்ல படத்துக்கு 60 ரூபாய் கொடுத்துப் போனேன்.)

படத்தில் ஷங்கர், ரஜினி, ரத்தினவேலு மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் கடினமான உழைப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. தமிழக தொழில்நுட்ப கலைஞர்களின் திறமையை உலகுக்கு வெளிப்படுத்தியதில் நிச்சயம் எந்திரன் பாராட்டப்படவேண்டிய முயற்சி. ஆனால் ஒரு படத்தின் உன்னதத்தன்மையை அதில் செலுத்தப்பட்டுள்ள உழைப்பை மட்டும் வைத்து தீர்மானிக்கக்கூடாது. அந்த வகையில் இராவணனுக்குப் பிறகு இந்த படமும் ஏமாற்றம் தான்.

பொதுவாக ஷங்கர் படம் திரையில் முதல்முறை பார்க்கும் போது, மிகப்பெரிய காட்சிவிருந்தாக அமைந்திருக்கும். ரசிகனை எதையும் யோசிக்கச்செய்யாமல், அடுத்தடுத்த காட்சியின் பிரம்மாண்டத்தில் கரைந்து போகச்செய்யும். பின்னால் கொஞ்சம் சாவகாசமாக யோசிக்கும் போது, அந்த காட்சியமைப்புகளின் அபத்தமும் லாஜிக்கில்லாத தன்மையும் தெரியவரும். எந்திரன் படத்தில் வரும் சிந்தனையற்ற ரோபோக்களாக ரசிகர்கள் இருந்தால் ஷங்கர் படத்தை வியந்து ரசிக்கமுடியும்.

இந்த படத்திலும் இதே போக்கு வலிமையாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இப்ப படத்தின் ஆதார சிக்கலை எடுத்துக்கொள்வோம். வசீகரன் உருவாக்கிய ரோபோ, உணர்வுகளைப் பெறுகிறது. அதனைத்தொடர்ந்து வசீகரனின் காதலி மீது, காதல் கொள்கிறது. இதன் தீவிரத்தை அறிந்த வசீகரன், ஒரு கட்டத்தில் அதனை அக்குவேறு ஆணி வேராக பிரித்து குப்பையில் வீசிவிடுகிறான். அதன் பின் கதையின் போக்குக்கு இந்த நிகழ்வு ஆதாரமாக அமைகிறது. இதை திரைக்கதையில் நியாயப்படுத்துவதில் தான் படத்தின் கலைப்பூர்வமான வெற்றி அமைந்திருக்கிறது.

உண்மையில் 10 ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய ஒரு ரோபோவில், காதல் உணர்வு தோன்றி, தனக்கே ஆபத்தாகும் என்றால், அதற்கடுத்த காட்சியமைப்புகள் லாஜிக்காக

1.  தன்னுடைய காதலியின் மீதான மையலை, சகோதரி பாசமாக மாற்றும் கமேண்டை வசீகரன் சிட்டியின் உள்திணிப்பது

2.  முடியவில்லை என்றால், ஐஸ்வர்யா ஸ்கின்னுடன் இன்னொறு ரோபோவை உருவாக்கி ஜோடி சேர்ப்பது

3.  அதுவும் முடியவில்லை என்றால், மிக ஆபத்தான ரோபோ கருவியை கவனத்துடன் லேப்பிலேயே டிஸ்மேன்டில் செய்து, முழுமையாக செயலிழக்கச்செய்வது

ஆகிய 3 செயல்களுக்கான வாய்ப்புகள் தான் யதார்த்தத்தில் அமையும். இதை விட்டுவிட்டு, கட்டையால் கைகாலை உடைத்து, குப்பைத் தொட்டியில் குவிக்கும் அபத்தம், வசீகரன் என்ற கேரக்டரை பொறுப்பற்ற கேனைப்பையனாக ஆக்கிவிடுகிறது. அந்த ஸீனிலேயே, படத்தின் திரைக்கதை ஓசோன் ஓட்டையை விட பெரிய ஓட்டையுடன் வந்துவிடுகிறது.

அதே போல, சில சின்னச் சின்ன ஷாட்கள் காட்சிக்கட்டமைப்பை இல்லாஜிக்காக ஆக்கியிருப்பது படம் பார்க்கும் போதே தெரிந்தது.

ரயில் சண்டையின் போது, அடித்து வெளியே போடப்பட்ட ரோபோ, இல்லாத டிரான்ஸ்பார்மரில் கரண்ட் ஏற்றிக்கொண்டு, தண்டவாளத்தில் வேகமாக வரும்போது, ஒரு மாடு இருப்பதை பார்த்து, அடுத்த தண்டவாளத்துக்கு மாறும். அந்த நேரத்தில், ரோபோவுக்கு உணர்ச்சிகள் என்பது இல்லை என்றால், ஏன் மாட்டை காப்பாற்ற அடுத்த தண்டவாளத்துக்கு மாற முடியும்?

மனித உணர்ச்சிகள் பெற்றதன் அடையாளமாக, ரோபோ, பிரசவம் பார்க்கும் சீன் வைத்திருப்பார்கள். அந்த சீன் கூட, ரோபோவின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்குமே தவிர, அதில் மனித உணர்வை ரோபோ வெளிப்படுத்துவதாக காட்சியமைக்கப்பட்டிருக்காது. இந்த காட்சிக்கும்,  தீவிபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் காட்சிக்கும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை.

கடைசியில், பல வடிவங்களில் உருமாறும் பவர் ரேஞ்சர்ஸ், காட்டூன் நெட்வொர்க் காட்சியமைப்புகளில், அவ்வளவு பெரிய உருவம் கட்டமைக்கும் அளவுக்கு, அத்தனை ரோபோட் பிரதிகள், பரேட் காட்சியில் காட்டப்படவில்லை. கடைசியில், வசீகரன் இந்த பிரச்சனையை எப்படி அறிவுப்பூர்வமாக தீர்ப்பான் என்று எதிர்பார்த்தால், சும்மா பொட்டிய தட்டிவிட்டு, செயலிழக்கச்செய்கிறான். இதையெல்லாம் நாங்க, அம்புலிமாமா புத்தகத்திலேயே படிச்சாச்சு ஷங்கர். மகா மொக்கை.

கடைசியில் படத்தை எப்படா முடிப்பாய்ங்கன்னு ஆயிடுச்சி. அப்புறம், கால்மணி நேரத்து மேல ஓடும் படைப்பாளிகளின் பட்டியல், அதில் 70% பேர், வெளிநாட்டுக்காரர்கள் என்றால், நான் கூட காசு கொடுத்து, கேமரூனை அசிஸ்டண்ட்டா வைச்சி எதாவது ஒரு படத்தை எடுத்து, உலக சாதனை செஞ்சேன், தமிழனுக்கு வாழ்நாள் பெருமை கொடுத்தேன்னு சொல்லிக்கலாம் போலயிருக்கு.

சாரி ஷங்கர். சயின்ஸ் ஃபிக்ஷன்ன்னா ஏலியன்ஸ், கால எந்திரம், ரோபோடிக்ஸ் எனும் இந்த 3 வெரைய்டியை மாத்தி மாத்தி துவைச்சு காயப்போட்டு ஹாலிவுட்டில் எடுத்திட்டிருக்காங்க.(இன்செப்ஷன் விதிவிலக்கு) நீங்க கொஞ்சம் வேறமாதிரி யோசிச்சிருக்கலாம். சரி விடுங்க சட்டியில இருந்தா தானே அகப்பையில வரும். அப்புறம், எந்திரன்னு படத்தோட பெயரை தமிழில் வரிவிலக்குக்காக வைச்சிட்டு, படத்தில் எந்த ஒரு இடத்திலும் வசனத்தில் எந்திரன் என்று பயன்படுத்தவில்லையே? டைட்டிலை மக்கள் மனதில் ஸிங்க் பண்ண மட்டும் பாட்டில் பயன்படுத்தியிருக்கிறீர்கள். இது போன்ற, குறுக்குபுத்தி ரெட் சிப்பை, எப்ப உங்க மனதில் இருந்து மாற்றப்போகிறீர்கள்?

மற்றபடி, அடுத்தடுத்த காட்சிகள், உண்மைத்தமிழன் அண்ணாச்சியின் நீண்ட ஆய்வில் சொல்லியிருப்பது போல மகா மொக்கையாகவும், காலிப்பிளவரை படம் பார்ப்பவர் காதில் வைத்துவிடுவது போலவும் உள்ளது.

ஆனா, இந்த படத்திலும் ஊழலை ஒழிக்கறேன், நாட்டை திருத்துறேன்னு இறங்காம இருந்ததுக்கு ரொம்ப நன்றி.

சுறா – முன்கதையோட்டம்


சுறா படம் சூறாவளியாக தியேட்டர்களை சுழற்றி அடிக்கப்போகிறது. படத்தின் ஆரம்ப காட்சியே இது வரை உலக திரைப்பட வரலாற்றில் யாரும் யோசிக்கக் கூட முடியாத அளவுக்கு வெறித்தனமாக இருந்து பட்டையை கிளப்புகிறது.

ஆரம்பக் காட்சியில் கடற்கரை. ஒலிப்பெருக்கி சுனாமி வருகிறதென எச்சரிக்கை அலறுகிறது. மக்கள் அனைவரும் அடித்துப்பிடித்து கரையை நோக்கி ஓடுகிறார்கள். இளைய தளபதி ஒருகையில் கட்டுமரத்தைப் பிடித்துக்கொண்டு கடலை நோக்கி வீர நடை போட்டு வருகிறார். ஒரு வழிப்போக்கர், “தம்பி கடலுகிட்ட போகாதீங்க சுனாமி வருது” என்று சொல்ல… “…சுனாமிய பாத்து பயப்பட நான் ஒன்னும் புறா இல்லடா அந்த சுனாமியே பாத்து பயப்படும் சுறா!” (அப்பாடா டைட்டிலுக்கும் கதைக்கும் லிங்க் கிடைச்சுடுச்சி) என்கிறார்.

அந்த கட்டுமரத்தில் தனியாளாக ஏறி சுனாமி அலையை தனது துடுப்பால் ஒரு அடி அடிக்க சுனாமி சிக்கன்குனியா காய்ச்சல் வந்தது போல் சுருண்டு விழுகிறது. பிறகு கரையேறி வரும் இ.தளபதியை இதற்காகவே காத்திருந்த கூட்டம் ஆலம் எடுத்து, குலவை போட பாட்டு ஆரம்பம்.

நான் தான் பச்ச மஞ்ச பிங்க் கலரு தமிழன், உன்னோட ஒன்னுவிட்ட அண்ணன், ஏழை எல்லாம் முன்னேறனும், உழைச்சு சாப்பிடனும், 3011ல நாம தான் அமெரிக்க அதிபர் – அண்டார்டிக்கா பிரதமர் என்று தத்துவப்பாட்டை பாடிச்செல்கிறார். பின்னாடியே ஒரு 20,30 பேர் ஒரே கலர் சட்டையை போட்டு (எங்கிட்டிருந்து தான் வந்தாய்ங்களோ) சொல்லி வெச்சாப்புல ஒரேவிதமான டான்ஸ் மூவ்மெண்ட்டை கொடுக்கிறார்கள்.

ஆரம்பக் காட்சியின் கிலி அடங்குவதற்காக அடுத்த காட்சியில் தமண்னா வந்து குளுமைப் படுத்துகிறார். வடிவேலுவும் இ.தளபதியும் சேர்ந்து சில சீன்களில் தமண்ணாவை கலாய்க்க, தமண்ணா சில சித்து வேலைகள் செய்ய இடையே இரண்டு மூன்று டூயட் பாடல்கள் வேறு ஓட இருவருக்கும் இடையே அமரக்காதல் முளைக்கிறது. அநியாயம் செய்யும் முதலாளிகளை இ.தளபதி தட்டிக்கேட்க ரவுடிகள் பெரிய அலப்பரையுடன் என்ட்ரி கொடுக்கிறார்கள். சில பல சவால்கள் சவடால்களுக்குப் பிறகு இ.தளபதியிடம் அடி வாங்கி அடக்கமாகிறார்கள்.

இதனிடையே மானே தேனே என்று போட்டுக்கொள்வது போல் வடிவேலு காமெடி, குடும்ப பாசம், இ.தளபதியோட வீரபராக்கிரமங்கள் வந்து செல்கின்றன. மொத்தத்தில் இந்த படத்துக்கு சுறா என்று பெயர் வைத்ததைவிட தமிழ்படம் பார்ட் 2 என்று வைத்திருக்கலாம்.

ஆஆவ்… நினைக்கும் போதே கண்ண கட்டுதே… படத்தோட டிரெய்லர சன்டீவியில் பாத்ததுக்கே எனக்கு இந்த எபக்ட்னா, கத்தரி வெயிலில் ரிலிசாகப்போகும் முழு சுறா படத்தை பாக்கும் தைரியம் யாருக்கு இருக்கு? ஓடுங்க.. ஓடுங்க.. அது நம்மளை குறிபாத்து ஓடி வந்திட்டு இருக்கு…

தீரா விருப்பங்கள்…


வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு தொழில் என்ற நிலை மிகவும் கொடியது. தனக்குப் பிடிக்காத செயலை நிர்பந்தத்துக்காக செய்வதே நரகம் என்று ஸ்பார்டகஸ் படத்தில் ஒரு வசனம் வரும். நிர்பந்தம் குடும்பத்தால், நண்பர்களால் வரலாம். வேறு வழியில்லாமல் நாமே கூட அதைக் கைக்கொண்டிருக்கலாம். நமது தேசத்தின் மிகப்பெரிய பிரச்சனை இதுவாகத் தான் இருக்கும். நமக்கு நாம் விரும்பிய செயல்களை செய்வதற்கு வாய்ப்புகள் அமைவதில்லை.

எ பக்கெட் லிஸ்ட் என்று ஒரு படம். ஜாக் நிக்கல்சன்னும் மோர்கன் ப்ரீமேனும் நடித்தது. அதில் எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் பெற்ற ஒரு பெரும்பணக்காரர், எதுவுமே இல்லாத குடும்பத்துக்காக வாழ்க்கையைத் தொலைத்த சாதாரண கார் மெக்கானிக் ஆகிய இருவர் தமது வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் கேன்சர் நோய் பாதிக்கப்பட்டு ஓர் மருத்துவமனையில் சந்திக்கின்றனர். நோய் இருவருக்கும் பாரபட்சம் காட்டாமல் ஒரேவித வலியை தருகிறது. இதில் பணக்காரருக்கு நோயின் தீவிரத்தை சகித்துக்கொள்ள முடியவில்லை. வாழ்க்கையில் கஷ்டங்கள் மட்டுமே சந்தித்த ஏழையால் நோயை சகித்துக்கொள்ள முடிகிறது. இது பணக்காரரின் கவனத்தை ஈர்க்கவே, இருவரும் நண்பர்களாகிறார்கள். தமது பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அப்போது, வாழ்க்கையில் பொருள் ஈட்டுவதற்காக தாம் தொலைத்த பல நிறைவேறாத விருப்பங்களை இருவரும் பட்டியலிட்டுக்கொள்கிறார்கள். இமயமலைப் பனிச்சிகரத்தில் ஏறுவது, அமேசான் காட்டில் வேட்டையாடி உணவுண்பது, பிரியமான கால்பந்தாட்ட வீரரை சந்திப்பது, ஓடும் விமானத்தில் அழகான பெண்ணைப் புணர்வது என அவர்களின் தீரா விருப்பங்களை தமது எஞ்சியிருக்கும் வாழ்நாளில் தீர்த்துக்கொள்வதென தீர்மானித்து பணக்காரரின் அளவில்லா நிதியுடனும், ஏழையின் வழிகாட்டுதலுடனும் பயணத்தை ஆரம்பிக்கின்றனர். அவர்களின் எல்லா விருப்பமும் நிறைவேறி, மரணத்தை முழுத்திருப்தியுடன் எதிர்கொள்ளும் இறுதிக்காட்சி நெகிழ்ச்சியானது.

நமது வாழ்க்கையிலும் இது போல நம்மால் நிறைவேற்ற முடியாத விருப்பங்கள், நமது பணி மற்றும் குடும்பச்சுமையினால் நீண்டு கொண்டுதான் இருக்கின்றன. நமது மரணத்துள்ளாவது அதில் சிலவற்றை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தால் நாம் பாக்கியவான்கள்.