திரைப்படத்தில் குழந்தைகளும் போர்காலமும்


maxresdefault

உலக திரைப்படங்களில் போர்கால சூழலை அதன் அழிவை விவரிக்கும் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய மதிப்பிருக்கிறது. இயக்குனர்கள் சமூகத்தின் மனசாட்சியாக இவற்றை ஆவணமாக பதிவு செய்திருப்பார்கள். நிறைய குறிப்பிடத்தகுந்த படங்கள் இந்த வகைமையில் இருந்தாலும் சில படங்கள் சாகாவரம் பெற்றவை. அவற்றில் போர்கால சூழ்நிலையை ஒரு குழந்தையில் பார்வையில், புரிதலில் சொல்லும் படங்கள் அதிக நெகிழ்ச்சியையும், மனபாரத்தையும் ஏற்படுத்துபவை. இந்த வகை படங்களை யோசிக்கும் போது எனக்கு சட்டென நினைவுக்கு வரும் படங்கள் விட்டோரிய டி சிகாவில் Bi Cycle Thieves (1948), ராபர்ட்டோ பெனிக்னியின் Life is Beautiful (1997), குயுல்லர்மோ டெல்டோராவின் Pan’s Labyrinth (2006). இந்த படங்கள் மறக்கவே முடியாத அனுபவத்தை தந்துள்ளன.

அதே போல Schindler’s List (1993) படத்தின் ஒரு காட்சியில் 4 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை சுற்றிலும் நாஜி படைகளால் மக்கள் சுட்டு சாகடிக்கும் சூழலில் தனியாக நடந்து சென்று, யாருமற்ற வீட்டில் கட்டிலுக்கு கீழ் சின்ன சிரிப்புடன் பதுங்கிக்கொள்வதும், பிறகு வேறொரு காட்சியில் அந்த குழந்தை சாகடிக்கப்பட்டு வண்டியில் கொண்டுசெல்லப்படுவதும் காட்டப்படும். இயக்குனர் ஸ்பீல்பெர்க் இந்த படத்தை முழுவதும் ப்ளாக் அன்ட் வொயிட்டில் எடுத்திருப்பார். ஆனால் குறிப்பிட்ட அந்த பெண் குழந்தையை மட்டும் சிகப்பு உடையுடன் காண்பித்திருப்பார். பார்ப்பவரின் மனதை கரையச்செய்யும் காட்சி அது. எப்போது இந்த காட்சியை பார்த்தாலும் போர் குறித்த அந்த குழந்தையின் அறியாமையும், சமூக அவலத்துக்கு அவர் பலியாவதும் என்னை அழசெய்யும். (தமிழில் இதுபோன்ற படமாக கன்னத்தில் முத்தமிட்டால் முயற்சிக்கப்பட்டது. ஆனா, வழமையான மணிரத்தின மேதைமையினால் கதையின் அடிப்படை கரு சிதைந்து, அழகியல் துருத்திக்கொண்டது.)

இந்த வகை படங்களின் உச்சம் என Grave of the Fireflies (1988) படத்தை சொல்லலாம். ஹிஷோ டகஹாட்டா இயக்கிய ஜப்பானிய படமான இது அனிமேஷன் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். ஓரளவுக்கு வசதியான குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் அண்ணன், தங்கை ஆகியோர் போரினால் தனித்துவிடப்படுகின்றனர். அண்ணனுக்கு 14 வயதிருக்கும். தங்கைக்கு 4 வயதிருக்கும். இவர்கள் இருவருக்குமே போர் சூழல், அதன் தாக்கம் ஆகியவற்றை புரிந்துகொள்ளமுடியவில்லை. கடைசியில் போரின் மிகக்கோர விளைவுகளால் அவர்கள் இருவரும் இறந்து போவார்கள். மிக அழுத்தமான காட்சிகளால் நிரம்பிய படம். எனக்கு மிகவும் பிடித்த ஆனால் இன்னொறுமுறை பார்க்க விரும்பாத படம் என இந்த படத்தை குறிப்பிடுவேன். பார்க்கும் போது பல இடங்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அதிகாரம், ஆட்சியாளர்களின் ஈகோவினால் நிகழ்ந்த போர்களால் அந்த போட்டியில் எந்த தொடர்பும் இல்லாத எத்தனை எத்தனை எளிய மக்கள் விட்டில் பூச்சிகளை போல மடிகிறார்கள் என்பதை உணரமுடிகிறது.

இந்த வகை படங்களை பெரிய அளவில் மக்கள் பார்க்கவேண்டும். அப்போது இயல்பாகவே மிருக குணம் குறைந்து அன்பு பெருக்கெடுக்கலாம். சகமனிதத்தை போற்றவும் வார்த்தெடுக்கவும் இந்த வகை படங்கள் மிகப்பெரிய கருவியாய் இருக்கக்கூடும்.

மினி குடியரசு – எடவகா பஞ்சாயத்து: ஓர் அனுபவம்


“இது நம்முடைய கிராம சபை. இதில் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கும் யாருக்கோ நாம் ஏன் நேரம் ஒதுக்கவேண்டும்? அவர்கள் எப்படி நமது கிராமசபையில் கலந்துகொள்ளலாம்?” என்று எங்களைப் பார்த்து கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்திலிருக்கும் எடவகா பஞ்சாயத்தின் 19வது வார்டு கிராமசபை கூட்டத்தில் ஒரு பொது குடிமகன் கேள்வி எழுப்பியபோது கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன்.

கேரளத்தின் பஞ்சாயத்து அமைப்புகள் பற்றி எமது அகடமி மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக நான் அவர்களை எடவகா பஞ்சாயத்துக்கு பட்டறிவு பயணமாக கூட்டிச் சென்றிருந்தேன். அந்த பஞ்சாயத்தின் மூலமாக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை பார்வையிட்டு, மக்களின் மேம்பாட்டில் அடித்தள அரசின் பங்களிப்பை அறிந்துகொள்வது எங்கள் திட்டம்.

அந்த பஞ்சாயத்தின் தலைவர் திரு.பிரதீப் கேரளத்தின் குறிப்பிடத்தகுந்த பஞ்சாயத்து தலைவர்களில் ஒருவர். என்னுடைய நண்பரும் கூட. அந்த உரிமையில் நாங்கள் சென்றிருந்த அன்று நிகழவிருந்த 19ம் வார்டுக்கான கிராம சபையில் எங்களை பிரதானமாக பங்கெடுக்கவைத்தார். அன்று தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மீதான சமூகத் தணிக்கை நிகழ்த்த திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது தான் இந்த கட்டுரையின் துவக்கத்தில் எழுப்பப்பட்ட கேள்வி எழுந்தது. திரு.பிரதீப், அந்த குடிமகனுக்கு பதில் அளிக்கையில், “தமிழ்நாட்டில் இருந்து இவர்கள் நம்முடைய பஞ்சாயத்தின் விருந்தினர்களாக வந்திருக்கிறார்கள், இந்த மாணவர்கள் நமது பணிகளைப் பார்த்து கற்றுக்கொண்டு, அந்த படிப்பினையை இந்தியாவெங்கும் பரப்ப திட்டமிட்டுள்ளார்கள்” என்று நமது நிறுவனத்தின் தன்மையை விளக்கினார். பிறகு, “அவர்கள் விருந்தினர்கள் என்றால் தாராளமாக வரவேற்கிறோம். ஒரு பார்வையாளராக நமது கிராமசபையில் பங்கெடுக்கலாம்” என்று மகிழ்வுடன் அதே குடிமகன் எங்களின் வருகையை அங்கீகரித்தார்.

கேரளத்தின் மக்கள் சக்தி!

எனக்கு பெருமிதமாக இருந்தது. கேரளத்தின் அபரிமித வளர்ச்சிக்கு இதுதான் ஆணிவேர். விஷயமறிந்த மக்கள். தமது சந்தேகங்களை மற்றும் தேவைகளை துணிச்சலுடன் கேட்கும் கலாச்சாரம். இதனால் அங்குள்ள அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அதிகம் ஏமாற்றமுடியாது. மக்கள் கண்காணிக்கிறார்கள் என்ற உணர்வு இருப்பதாலேயே நல்ல பல செயல்கள் நிதமும் நடக்கின்றன. இந்தியாவின் மற்ற எந்த மாநிலத்தையும் விட கேரளா ஐந்து ஆண்டுகள் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வேறொரு சமயத்தில், அந்த பஞ்சாயத்தின் அலுவலர் ஒருவர், சராசரியாக ஒரு நாளைக்கு அந்த பஞ்சாயத்தில் மூன்றிலிருந்து ஐந்து விண்ணப்பங்கள் தகவல் கேட்கும் சட்டத்தின் கீழ் தகவல் கேட்கப்படுகிறது என்று சொன்னபோது உண்மையான மக்களாட்சி இப்படித்தான் இருக்கும் என்ற புரிதல் எங்களுக்கு ஏற்பட்டது.

கேரளாவில் பஞ்சாயத்துகளுக்கு அதிகபட்ச அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு பாராளுமன்ற / சட்டமன்ற உறுப்பினருக்கு சராசரியாக ஆண்டுக்கு இரண்டு கோடிகள் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்பட்டு வரும் நிலையில் கேரளத்தின் பஞ்சாயத்துகளுக்கு மேம்பாட்டு பணிகளுக்காக சராசரியாக ஆண்டுக்கு ஆறு கோடி ரூபாய் நிதி தரப்படுவது அதிகாரப்பரவலின் உச்சம் எனலாம். கல்வி, சுகாதாரம், நல்வாழ்வு, ஊரக வளர்ச்சி என ஏறக்குறைய எல்லா வளர்ச்சி அமைப்புகளின் மொத்த நிர்வாகமும் கேரள பஞ்சாயத்து அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நாங்கள் சென்றிருந்த முப்பதாயிரத்து சொச்சம் மக்கள்தொகையுள்ள எடவகா பஞ்சாயத்து அலுவலகத்தில் சுமார் 15 முழு நேர அலுவலர்கள். அலுவலகம் முழுமையும் கணினி மயமாக்கப்பட்டு ஒரு கார்பரேட் அலுவலகம் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மகளிர் நலத்துக்கான பொருளாதார சுதந்திர திட்டம்:

எங்கள் பயணத்தின் அங்கமாக பஞ்சாயத்தால் செயல்படுத்தப்படும் இரண்டு சிறப்புத் திட்டங்களை பார்வையிட்டோம். அங்குள்ள பழங்குடியின பெண்களை சுய உதவிக்குழுக்களாக ஒருமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்துக்காக குடைகள் தயார் செய்யும் சிறுஉற்பத்தி கூடத்தை பஞ்சாயத்து ஏற்படுத்தி தந்திருக்கிறது. இதன் மூலம் 50 பெண்கள் அவர்கள் இருக்கும் இடத்திலேயே வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள். குமரப்பாவின் சப்சிடியாரிட்டி பொருளாதாரக் கொள்கையின் படி, உள்ளுர் பயன்பாட்டுக்கான பொருள்களை அவர்களே உற்பத்தி செய்வதால், அவர்களின் பண சுழற்சி அவர்கள் அளவிலேயே கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் வெளிச்சந்தையை சார்ந்திருக்கும் தன்மை குறைந்து தன்னிறைவு சுலபமாக எட்டமுடியும். அடுத்த கட்டமாக இந்த பஞ்சாயத்தில் மற்ற எல்லா வித நுகர்வுப் பொருட்களுக்கான உற்பத்தியையும் இவர்களே தயார் செய்ய முயற்சிகள் எடுக்குமாறு கூறியுள்ளோம்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்:  

அடிப்படையில் எனக்கு தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பெரிய நம்பிக்கை இல்லை. தமிழ்நாட்டில் அது செயல்படும் விதத்தைப் பார்த்து, சோம்பேறிகளையும் ஊழலையும் பெரிய அளவில் உற்பத்திசெய்யும் திட்டமாகத் தான் நான் புரிந்துகொண்டுள்ளேன். ஆனால் எடவகா பஞ்சாயத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மக்களின் தேவையை அறிந்து அதனை ஒட்டி செயல்படுவது மிகப்பெரிய ஆறுதல். இந்த பஞ்சாயத்தானது மாவட்ட அளவில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டதை சிறப்பாக நடத்தியதற்காக நடப்பு ஆண்டில் விருது பெற்றுள்ளது.

இவர்கள் இந்த திட்டத்தின் மூலம் வார்டுக்கு ஒரு தாவர  நாற்றாங்கால் என 19 நாற்றாங்கால்களை ஏற்படுத்தியுள்ளனர். இதில் சராசரியாக ஒரு பருவத்துக்கு 25000 நாற்றுகள் தயார்செய்யப்பட்டு ஒரு நாற்று ஒரு ரூபாய் என்ற விகிதத்தில் விவசாயிகளுக்கு விற்கப்படுகிறது. இதில் சுவாரசியமான அம்சம், இந்த நாற்றாங்கால் பண்ணையில் பணிபுரிவோர் கட்டாயம் வயதானவராகவோ, நலிவுற்ற பிரிவினராகவோ இருக்கவேண்டும் என்பது தான். நாற்றாங்கால் வேலை ஒப்புமை ரீதியில் குறைந்த உடலுழைப்பு உள்ளது. இதில் நலிவுற்ற பிரிவினருக்கும் மட்டும் வேலை தரப்படுவதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. அவர்களும் கண்ணியமான வாழ்க்கை வாழ வழி ஏற்படுகிறது. அதே சமயம், உழைக்கும் சக்தி உள்ளவர்களின் உழைப்பும் தேவையில்லாமல் இது போன்ற திட்டங்களில் வீணடிக்கப்படுவதில்லை. தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகளுக்கு பெரிய எதிரியாய் உருவெடுத்திருக்கும் இத்திட்டம், பஞ்சாயத்து அமைப்பின் சரியான அணுகுமுறையால் விவசாயத்துக்கு உறுதுணையாகவும், நலிவுற்றப் பிரிவினரின் நலம் காக்கும் திட்டமாகவும் மாறியிருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

வனச்சூழல் மீதான அக்கறை மற்றும் பாதுகாப்பு:

கேரளத்தின் வயநாடு பகுதி இயற்கை எழில் கொஞ்சும் அற்புதமான பகுதி. ஆரோக்கியமான சுற்றுச்சூழலால் இங்கு வாழ்பவர்களின் சராசரி ஆயுட்காலம் நம்மை விட நிச்சயம் பத்து வருடம் அதிகமாகத் தான் இருக்கும். இத்தகைய சூழலை பாதுகாக்க பஞ்சாயத்து அமைப்புகள், இயற்கை வளங்களை போற்றிப் பாதுகாத்து வருவதும், வியாபாரத்துக்காக இயற்கையை அழித்து கட்டிடக்காடுகளை ஏற்படுத்தாததும் மகிழ்ச்சி தருகிறது. இந்த பஞ்சாயத்தை ஒட்டியிருக்கும் கருவா தீவினை காண்பதற்காக காத்திருந்தோம். ஆற்றினால் ஏற்படுத்தப்பட்டத் தீவு அது. கட்டுமரத்தில் தான் அந்த தீவுக்கு செல்லவேண்டியிருக்கும். நாங்கள் சென்ற சமயத்தில் அந்த தீவினில் யானை கூட்டம் இறங்கியிருப்பதால் எங்களுக்கான பயண அனுமதி மறுக்கப்பட்டது. ஏமாற்றத்துடன் திரும்பினாலும், வன மிருகங்களை கம்பி வேலிக்குள் அடைத்து அந்த இடத்தில் பத்து விடுதிகள் கட்டி, சுற்றுலாத் தளம் என்ற பெயரில் இயற்கையை சிறை பிடித்து வியாபாரம் நடத்தாமல், இயல்பான சூழலில் மக்களும் மற்ற விலங்குகளும் வாழ வழிசெய்திருப்பது, கேரளத்தில் மக்களுக்கு மட்டுமில்லை, எல்லா உயிரினங்களுக்கும் பூரண சுதந்திரம் இருக்கிறது என்று பூரிப்படைய தோன்றியது.

பாலாஜி சக்திவேலின் படைப்புலகம்


எப்பவாவது படத்தை எடுத்தாலும் எப்பவுமே என்னளவில் நெருக்கமாக இயக்குனர் பட்டியலில் பாலாஜி சக்திவேலுக்கு தனித்த இடம் கண்டிப்பாக இருக்கும். 2002ல் ஆரம்பித்து 2012 வரை நான்கே நான்கு படங்கள். சாமுராய், காதல், கல்லுரி மற்றும் வழக்கு எண் 18/9. இவை அனைத்துமே ஒருவகையில் சமூக பிரச்சனைகள் பற்றி பேசிய படங்கள்.

வழக்கமான தமிழ் சினிமா கலாச்சாரத்தின் படி, ஹீரோ என்ட்ரி, ஹீரோயினோட கெமிஸ்ட்ரி, வில்லனோ பிசிக்ஸ் என்ற டெம்ப்லேட்டில் இல்லாமல், எளிய மக்களின் போராட்ட வாழ்வின் மறுபக்கத்தை முகத்திலடித்தாற்போல சொல்லக்கூடியவை இவரது படங்கள். இதில் சாமுராய் மட்டும் கொஞ்சம் ஹீரோயிச பாணியில் சொல்லப்பட்ட கதை.

தமிழ் சினிமா உலகில் எத்தனை பெரிய அப்பாடக்கர் இயக்குனர் என்றாலும், எடுக்கிற படம் நல்லா வியாபாரமாக வேண்டும். தயாரிப்பாளர் காசு சம்பாதிப்பது ரொம்ப அவசியம். அதிலும் இயக்குனருடைய முதல் படம் அவரது வாழ்வின் தலையெழுத்தை நிர்ணயிப்பது. ஆனால் இவரது சாமுராய் படம் நல்ல காஸ்டிங், மேங்கிங்கில் வந்திருந்தாலும் சரியாக ஓடாததால் சினிமா உலகத்தில் இவரது அடையாளம் வெளிப்படாமலேயே இருந்தது. திரும்பவும் ஷங்கருடன் பணியாற்றினார். வணிக ரீதியாக வெற்றிபெற முடியாததாலேயே இவரது திறமையை வெளிக்காட்ட அடிக்கடி தீக்குளிக்கவேண்டியிருந்தது. அப்படியிருந்தும் வாழ்வாதாரத்துக்காக கமர்ஷியல் சினிமா சூழலில் இவர் விழுந்துவிடாமல் இருந்தது தமிழ் சினிமாவின் புண்ணியம்.

அதற்கப்புறம் ஷங்கரின் தயாரிப்பில் காதல் படம் வெளிவந்தது. இந்த முறை படத்தில் பெரிய ஸ்டார்கள் யாரும் இல்லை. ஏறக்குறைய அனைவரும் புதுமுகங்கள். மிக வலிமையான கதைசொல்லலால் இந்த படத்தில் பங்கெடுத்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என எல்லாருக்கும் மிகப்பெரிய வாழ்வினை அளித்தது. இந்த முறை பாலாஜி தன் கேரியரின் பெரிய ஸிக்சரை அடித்தார். தன்னை மிகச் சரியாக வெளிப்படுத்திக் கொண்டார்.

அதற்கடுத்து இவரது இயக்கத்தில் நடிக்க, படத்தை தயாரிக்க நிறைய பேர் காத்திருந்தாலும், ஒரு பெரிய இடைவெளி விட்டு அதே ஷங்கர் பிக்சர்சுக்காக கல்லுரி படம். அந்த படமும் சமூகத்தில் நல்ல அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. தமன்னாவிற்கு பெரிய ரீஎன்ட்ரி கொடுத்தது. அந்த படத்தில் ஒரு சிறு நகரத்தில் இருக்கும் அரசு கல்லுரிகள், அங்கு படிக்கும் மாணவர்களின் பின்புலம் பற்றி முன்பு சொல்லப்படாத பல செய்திகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கடைசி காட்சிகள், அரசியல் கேவலத்தின் வெட்கக்கேட்டினை உணர்த்தியிருந்தது.

அதற்கடுத்து வழக்கு எண் 18/9. இந்த படத்தை தமிழ் சினிமாவில் நிகழ்ந்த முக்கியமான அற்புதம் என்று கூட சொல்லலாம். ஆரண்ய காண்டதுக்குப் பிறகு புதிய போக்குப் படமாக அமைந்திருந்தது. ஸ்டில் கேமிரா, மிக எளிமையான தொழில்நுட்ப வசதிகள், அதிக செலவில்லாத தயாரிப்பு என லோ புரொபைலில் படம் எடுக்கப்பட்டிருந்தாலும் கதையில் கனத்திலும், திரைக்கதையில் மெனக்கெடலிலும், பாத்திர உருவாக்கத்தின் நுணுக்கத்திலும் இன்றைக்கு பாடல் காட்சிக்கு எந்த வெளிநாடு போகலாம் என்று திட்டமிடும் பல இயக்குனர்களுக்கு மிகப் பெரிய படிப்பினையாக அமைந்துள்ளது.

மகேந்திரனின் பாத்திரப்படைப்பு, பாலுமகேந்திராவின் உள்ளடக்க டீடெயில்ஸ் என்று கலந்துகட்டிய அற்புத இயக்குனராக பாலாஜி சக்திவேல் இருக்கிறார். இவரது படங்களில் எல்லாம் சில அடிப்படை அம்சங்கள் / அவரது நம்பிக்கைகள் திரும்பத்திரும்ப வருவதை கவனிக்க முடியும்.

  1. ஆட்சி அதிகாரம் மற்றும் பணபலம் இருப்பவர்கள் செய்யும் தவறுகள் அநியாயங்கள் எளிமையான மக்களை பாதிக்கிறது. (சாமுராயில் தவறு செய்யும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், காதல் படத்தில் சாதிய ஆதிக்கவெறி, கல்லுரியில் பஸ்ஸை எரிக்கும் கட்சிக்காரர்கள், வழக்கு எண்ணில் பணபலம் மிக்க மேட்டுகுடி)
  2. உயர்தட்டு குடும்ப பிள்ளைகள் பாலியல் ஒழுக்ககேட்டை சந்திக்கின்றனர் (சாமுராயில் அனிதா கேரக்டர் மீதான பாலியல் வன்முறையும், வழக்கு எண் படத்தின் அடிப்படை பிரச்சனையும் ஒரே வகையில் அமைந்திருப்பது)
  3. எளிமையான மக்களை ஏமாற்ற செயல்படும் நயவஞ்ச, தந்திரக்காரர்கள் (காதல் படத்தில் சித்தப்பா கேரக்டர், வழக்கு எண்ணில் இன்ஸ்பெக்டர்)

இவை எல்லாவற்றையும் விட, முதல் படமான சாமுராயைத் தவிர, மற்ற மூன்று படங்களின் கிளைமேக்ஸ் காட்சிகள் பெரிய ஒற்றுமையை கொண்டுள்ளதை கவனிக்கமுடியும். அவை அனைத்திலுமே ஹீரோ எதிரிகளை பரந்து பரந்து அடித்து, பத்து சுமோக்களை பறக்கவிட்டு, அழித்து துவம்சம் செய்து நீதியை நிலைநாட்டுவதில்லை. எல்லாவற்றிலும் எளிய மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களின் அவலநிலைக்கு மகிழ்ச்சிகரமான, நம்பமுடியாத முடிவைத் தராமல், யதார்த்தத்தை ஒட்டி என்ன நிகழக்கூடுமோ அதையே உண்மைக்கு அருகில் தர முயற்சித்திருக்கிறார். இந்த காரணத்தால் எனக்கு பாலாவின் படைப்புகளை விட இவரது படைப்புகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

கடைசியில் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் பார்வையாளர் குறைந்த பட்சம் அடுத்த வேளை உணவை உண்ணும் வரையாவது அதன் தாக்கத்தில் இருப்பான். சினிமா வெறும் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் வெகுஜனமக்களின் சிந்தனைப் போக்கை ஒரு மில்லிமீட்டர் அளவுக்காகவாவது வளர்க்க முயற்சிக்கவேண்டும். அந்த வகையில் பாலாஜி சக்திவேல் தொடர்ந்து நம்பிக்கையளித்து வருகிறார். மனமார பாராட்டுவோம்.

கரடி குட்டி


வாழ்க்கை தான் எவ்வளவு எதிர்பாராமைகள் நிறைந்தது. நமக்கான மகிழ்ச்சியும் ஆபத்தும் அடுத்தடுத்த வினாடிகளில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதே வாழ்வை இன்னும் சுவாரசியமாக்குகிறது.  இது மனிதருக்குத் தான் என்றில்லை. உலகின் எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். இந்த காணொளியில் ஒரு கரடிக்குட்டியின் உயிர் போராட்டம், பதைபதைப்பை தாண்டி பல படிப்பினைகளை நமக்கு தருகிறது. இது முழுமையான ஒரே வீச்சில் அமைந்த காணொளியாக இல்லாமல் சின்னச் சின்ன எடிட்டிங் மற்றும் சில டிங்கரிங் வேலை செய்யப்பட்டாலும் உணவுக்கான போராட்டத்தை விட உயிருக்கான போராட்டம் வலிமை மிக்கது என்பதை பலமாக நிறுபிக்கிறது. கடைசி சில வினாடிகள் மனதை நெகிழச்செய்பவை.

கரைந்து போகும் பெண் குழந்தைகள்


சில மாதங்களுக்கு முன் திருவண்ணாமலை பகுதியில் அலுவல் ரீதியாக ஒரு மருத்துவரிடம் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பற்றி பேசிக்கொண்டிருந்த போது, இன்னமும் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படும் அவலம் மறைமுகமாக நடந்து வருவதாக குறிப்பிட்டார். அரசு, கர்ப்பகாலத்தில் கருவிலிருக்கும் குழந்தைகள் ஆணா பெண்ணா என்பதை அறிய சட்டபூர்வ தடை செய்து, அவ்வாறு கருவின் பாலினத்தை வெளிப்படுத்தும் ஸ்கேனிங் மையங்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று அறிவித்திருக்கிறது. ஆனாலும் நகரத்தைத் தாண்டி உட்பகுதியில் உள்ள  மையங்கள் இவற்றை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும் கிராமங்களில் இருந்து வரும் ஏழைக்குடும்பங்கள் தங்களது வறுமையை முன்வைத்து ஸ்கேன் மூலம் குழந்தையின் பாலினத்தை அறிந்து பெண் குழந்தையாயிருந்தால் அதனை கருவிலேயே அழிப்பது நிகழ்கிறது என்றும் கவலைபட்டார். அது எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், அப்போது நான் அதை அவ்வளவு சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் சமீபத்தில் 2011 ம் ஆண்டின் சென்செஸ் கணக்கெடுப்பின் முதற்கட்ட புள்ளிவிவரங்களைப் பார்த்தபோது அந்த ஆபத்து நடந்திருக்குமென்று ஊகிக்கமுடிகிறது. அவர் சொன்ன அந்த பயங்கரத்தின் விளைவு புள்ளிவிவரங்களாக வெளிப்பட்டிருந்தது. தமிழ்நாட்டளவில் 14 மாவட்டங்களில் 2001ம் ஆண்டு இருந்ததை விட ஆறு வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகளின் எண்ணிக்கை இப்போது குறைந்துள்ளது. குறிப்பாக கடலுர், அரியலுர், பெரம்பலுர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் முன்னெப்போதும் விட ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் சராசரியாக 1000க்கு 25 என்ற அளவில் குறைந்துள்ளது.

தமிழ்நாடளவில் மொத்த மக்கள்தொகையின் பாலின விகிதம் 1000ம் ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற நிலையில் இருந்தாலும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அளவில் 1000 ஆண்களுக்கு 946 பெண்கள் என்றுள்ளது கவலைக்குறியது. பெண் சிசுவதை அதிகம் இருப்பதாக கருதப்படும் தர்மபுரி, சேலம், தேனி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரளவுக்கு பெண்குழந்தை விகிதம் கடந்த பத்து ஆண்டுகளில் அதிகரித்திருந்தாலும் அங்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மாநில சராசரிக்கும் குறைவாகவே இருக்கின்றன.

இந்தியாவில் 2001 ம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்சஸ் அறிக்கைப்படி, குழந்தைகள் அளவில் பாலின விகிதம் 927 ஆக இருந்ததது. அது இப்போது 10 புள்ளிகள் குறைந்து இப்போது 917 ஆக பிரதிபளிக்கிறது. இந்த புள்ளிவிவரம், கடந்த 60 ஆண்டுகளாக இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு எடுக்கப்பட்ட எல்லா சென்சஸ் புள்ளிவிவரங்களிலும் பதிவாகிய மிகக்குறைந்த அளவு என்பது மிகவும் வேதனை தரக்கூடிய விஷயம். இதன்மூலம், இந்திய சமூகத்தில் முன்னெப்போதையும் விட இந்த காலகட்டத்தில் பெண்குழந்தைகள் பெரிய ஆபத்தை சந்தித்து வருகிறார்கள் என்றே புரிந்து கொள்ளமுடிகிறது.

இதன்படி, இந்தியாவில் பிறக்கும் 1000 ஆண் குழந்தைகளுக்கு 83 பெண் குழந்தைகள் காணாமல் போகிறார்கள் என்று புரிந்துகொள்ளலாம். ஒரு பெண் குழந்தைக்கு அடிப்படையான பிறப்புக்கான உரிமை மறுக்கப்பட்டுவருவது மிகக்கொடுமையான செய்தி. பொதுவாக இயற்கையின் நியதி படி, 1000 ஆண் குழந்தைகளுக்கு 1036 பெண் குழந்தைகள் பிறப்பதாக அறிவியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளில் அதிகபட்ச பெண்குழந்தை பிறப்பு துத்துக்குடியில் 970ஆகவும் நீலகிரியில் 982ஆகவும் இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் தமிழ்நாட்டில் பெண்குழந்தைக்கான முழுபாதுகாப்பு உறுதிசெய்யப்படவில்லை என்று தெரியவருகிறது.

1997களில் சராசரியாக தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் ஒரு மாதத்துக்கு 160 பெண் குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்று ஓர் ஆய்வறிக்கை சொல்கிறது. தற்போது இந்த விகிதம் குறைந்திருந்தாலும் பெண் சிசுவுக்கு முழுமையான பாதுகாப்பு ஏற்படவில்லை. தற்போதய மருத்துவத்துறை தொழில்நுட்ப ரீதியில் பெரிதும் வளர்ந்திருப்பதால் பெண் குழந்தை பிறந்த பிறகு இறக்கும் விகிதம் குறைந்து, கருவிலேயே அழிக்கும் போக்கு அதிகமாகியிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ஒருவகையில் இதனை வெறும் சமூகப்பிரச்சனை மட்டுமாக எடுத்துக்கொள்ளமுடியாது. பேறுகாலத்தின் நான்காவது மாதத்தில் கருவின் பாலினம் கண்டறியப்பட்டு கருச்சிதைவு நிகழ்த்துதல் தாயின் உயிருக்குக் கூட ஆபத்தாக அமையும் என மருத்துவர்கள் எச்சறிக்கிறார்கள்.

வறுமை மற்றும் சமூக கட்டமைப்புகள் இதற்கு காரணமாக சொல்லப்பட்டாலும் மிக முக்கியமான காரணமாக கருதப்படுவது, விதிமீறலாக நிகழும் செலக்டிவ் அபார்ஷனும் முன்னேற்றப்படவேண்டிய பேறு கால கவனிப்பும் தான். எப்படி பார்த்தாலும் உயிர் கொண்ட ஒரு சிசுவிற்கு தன் வாழ்க்கையை முழுமையாக வாழ சகல உரிமையும் இருக்கிறது. அதனை பாலினக்காரணங்களுகாக கரைப்பது பாவம். இது மூன்று வித உரிமை மீறலாக கருத்தப்படவேண்டும். 1.மனித உரிமை மீறல், 2. குழந்தை உரிமை மீறல், 3. பெண்ணுரிமை மீறல். இந்த நிலைக்கு அரசாங்கமும் பொறுப்பெடுக்கவேண்டும். முதலமைச்சராக, ஜனாதிபதியாக பெண்கள் இருப்பது மட்டும் பாலின சமத்துவத்துக்கான குறியீடாகாது. இந்தியா உலக அளவில் வல்லரசாவது ஒரு பக்கம் இருக்கட்டும், முதலில் நமது பூமியில் பூக்கும் ஒவ்வொறு பெண்குழந்தையும் முழுமையாக, ஆரோக்கியத்துடன் மலரவழி செய்யட்டும்.

இந்திய அளவில் தனிநபர் வருமானம் மிக அதிகம் இருக்கும் மாநிலங்களான பஞ்சாப் (846), ஹரியானா (830) ஆகிய மாநிலங்களில் தான் பெண் குழந்தை பாலின விகிதம் மிகக்குறைவாக இருக்கிறது. அதே போல வளர்ச்சி அடையாத, பிரச்சனைகள் மிகுந்த மாநிலங்களாக கருதப்படும் மிசோரம் (971), மேகாலயா (970) ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் அதிக பாலின விகிதத்தை கொண்ட முதல் இரண்டு மாநிலங்களாக நிலைபெற்றுள்ளன. இந்த புள்ளிவிவரம், வளர்ச்சி என்பது வெறும் ரிசர்வ் வங்கி அச்சடிக்கும் காகிதம் மட்டும் தானா அல்லது சமநிலைச்சமுதாயமா என்ற அடிப்படை கேள்வியை நம்முன் வைக்கிறது.

இதன் தாக்கம் அடுத்த 20 ஆண்டுகளில் தெரியவரும். பாலினம் சமநிலையில் இல்லாத சமூகம் நிச்சயம் நொண்டியடிக்கும். அப்போது நாம் செய்த தவறு தெரியவரும். கலர் டீவி, மிக்ஸியை விட பெண் குழந்தைகள் முக்கியம் என்று உணர ஆரம்பிப்போம்.

குறிப்பு: மேலுமதிக விவரங்களுக்கு: http://www.census.tn.nic.in/whatsnew/ppt_total2011.pdf

அவர்கள் அறியாமையிலேயே இருக்கட்டும்.


(புகைப்படத்தில் இருப்பவர் – வடிவேல் அய்யா)

திருத்தணிக்குப் பக்கத்தில் பனப்பாக்கம் என்ற கிராமத்திலிருக்கும் விவசாயி வடிவேலு அய்யா.  ஒருமுறை இவரது கிராமத்தில் ஏரி மதகை சரி செய்வதற்காக 1.5 இலட்சம் ரூபாயில் காண்ட்ராக்ட் விட்டிருக்கிறார்கள். காண்ட்ராக்ட் எடுத்தவர் பெயருக்கு வேலை செய்துவிட்டு மிச்ச பணத்தை சுருட்டியிருக்கிறார். இதை கேள்வி பட்ட வடிவேலு அய்யா, அவருடன் சண்டை போட்டிருக்கிறார். முதலில் அவர்கள் கொஞ்ச பணத்தை இவருக்கு லஞ்சமாக கொடுப்பதற்கு பேரம் பேசியிருக்கிறார்கள். இவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு மிரட்டியும் பார்த்திருக்கிறார்கள். இவர் மசியவில்லை. ஒரு புகார் மனு தயாரித்து, ஊரில் இருக்கும் 130 விவசாயிகளிடம் கையெழுத்து வாங்கி கலெக்டரிடம் கொடுக்க போனார். கலெக்டரின் உதவியாளர், “இப்போது கலெக்டரை பார்க்கமுடியாது. வேண்டுமானால் என்னிடம் கொடுத்துவிட்டு போங்கள்” என்று சொல்ல, இவர் மறுத்து பிடிவாதமாக கலெக்டரை பார்க்கவேண்டும் என்று வலியுருத்தியிருக்கிறார்.

கலெக்டர் அலுவலகத்தில் இருந்தவர்கள் போலிஸை கூப்பிட்டு ஜெயிலில் போடுவேன் என்று சொல்லி இவரை மிரட்டியிருக்கிறார்கள். இவர், “இந்தியா சுதந்திரம் அடைவதற்காக காந்தி, நேரு போன்றவர்கள் ஜெயிலுக்கு போயிருக்கிறார்கள். நான், என்னுடைய கிராமத்து ஏரிக்காக ஜெயிலுக்கு போகவேண்டியிருந்தால் சந்தோஷமாக போகிறேன்” என்ற சொல்லிவிட்டு அங்கேயே உட்கார்ந்து விட்டார். இந்த சச்சரவை உள் அறையிலிருந்து கேட்ட கலெக்டர், அவரைக் கூப்பிட்டு விவரம் கேட்டு பிறகு அந்த காண்ட்ராக்டர் மீது உரிய நடவடிக்கை எடுத்தார். இப்போது அந்த மதகு, அந்த ஊரில் உள்ள 150 விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு பயன்பட்டுவருகிறது.

ஆள் பலம், பண பலம் என எதுவும் இல்லாத எளிமையான விவசாயியான வடிவேலு அய்யா ஊர் நலத்துக்காக தனி ஆளாக போராடிய குணம் என்னை ஆச்சரியப்படுத்தியது. இது போல ஊர் நலனுக்கான பல விஷயங்களில் யாருடைய உதவியும் இல்லையென்றாலும் அவர் தனியாளாக தன்னால் முடிந்தததை மனமாற செய்துவருகிறார். இதை அவர் தம்பட்டம் அடித்துக்கொள்வதும் இல்லை தான் பெரிய சமூக சேவகன் என்று கூறிக்கொள்வதுமில்லை.

இதேபோல தேனி மாவட்டம், கடமலைக்குண்டு கிராமத்தின் கிராமக் கமிட்டி பொருளாளராக இருந்தவர் வண்டப்புலி நாடார். (வண்டப்புலி நாடார் என்பது அவரது பெயர் அல்ல.  வண்டப்புலியிருருந் இடம் பெயர்ந்தவர்). சிறிய அளவில் பலசரக்கு கடையும் வைத்திருந்தார்.  கிராம கமிட்டி சார்பாக இவரிடம் ஒப்படைக்கப்பட்ட பணம் அப்படியே இருக்கும்.  ரூபாய் நோட்டுகளின் எண்ணை கூட சரிபார்த்துக் கொள்ளலாம். பல்வேறு சாதியினரும் மதத்தவரும் வசிக்கும் கடமலைக்குண்டில் நாடார் சமூகத்தின் எண்ணிக்கை குறைவு. இருப்பினும் தொடர்ச்சியாக பொருளாளராக இருந்தவர்.

திருவிழாவிற்கு கிராமத்தின் சார்பாக பலசரக்கு வாங்குவதாக இருந்தால் கூட தனது கடையில் வாங்குவதை தவிர்த்தவர். தேனியில் இந்தக் கடையில் வாங்குங்கள். இங்கு விலை குறைவாக இருக்கும் என்று தகவல் சொல்லிவிட்டு கண்ணியமாக ஒதுங்கிக் கொள்வார். வருடந்தோறும் திருவிழா முடிந்ததும் கணக்கு ஒப்படைப்பது வழக்கம். ஒருமுறை இதுபோல திருவிழா முடிந்து ஊர்மக்களிடம் கணக்கு ஒப்படைக்கும் நாளில், குடிகாரன் ஒருவன் போதையில் “வண்டப்புலி நாடார் புது வீடு கட்டுறாரே! எப்படி ‘எல்லாம் கிராமத்துப் பணம் தான்’ “ன்னு கேட்டுட்டான். அந்தக் கணமே தனது பதவியைத் துறந்தார். (தன்தரப்பு நியாயத்துக்காக வருடக் கணக்கில் விவாதிக்கவில்லை, வாய்தா வாங்கவில்லை) கணக்கினை பைசா சுத்தமாக ஊர் மக்களிடம் ஒப்படைத்தார்.

அடுத்த நாள் கிராமத்து பெரியவர்கள் எல்லாம் வீட்டிற்கு சென்று நீங்கதான் பொருளாளராக இருக்கனும் ‘அவன் என்னமோ தண்ணியைப் போட்டு ஒலறிட்டான்’எவ்வளவோ சமதானம் சொன்னாங்க. முன்பு குற்றம் சுமத்தியவனும், “நான் ஏதோ நேத்து தெரியமா போதையில அப்படி கேட்டுட்டேன், என்னை மன்னிச்சிருங்க நீங்கதான் பொருளாளராக வரனுமு”ன்னு அவர் காலில் விழுந்தான். இருந்தும் இவர் சம்மதிக்கவில்லை. “நீ சந்தேகப் படும்படி என்னுடைய ஏதோ ஒரு செயல் உனக்கு தெரிந்திருக்கிறது. அதனால்தான் நீ அப்படி கேட்டாய். சந்தேகப்படும்படியான ஆள் பொறுப்பில் இருப்பது அவ்வளவு நல்லதில்லை” என அனைவரையும் இன்முகத்தோடு அனுப்பிவிட்டார்.

இரண்டொரு நாள் அதே வேதனையில் இருந்தவர் இறந்துவிட்டார்.  இறப்பிற்கு முன் வண்டப்புலி நாடார் தம்குடும்பத்தாருக்கு சொன்ன வார்த்தைகள் “நம் குடும்பத்தில் இருந்து யாரும் கிராமப் பொறுப்பிற்கு வரக்கூடாது. ஆனால் கிராமத்திற்கு செலுத்த வேண்டிய முதல் வரி நம்முடையதாகத்தான் இருக்க வேண்டும்”.  இதனால் தான் அவர் இறந்து 10 வருடங்களாகியும் உள்ளுர் மக்களால் உதாரணமாய் வாழ்கிறார். இன்றைக்கு பொது வாழ்வில் ஈடுபடுவர்களுக்கு எத்தனை பெரியவர் வண்டப்புலி நாடார்.

இல்லாதவர்கள், ஏதுமற்றவர்கள் நேர்மையாகத்தான் இருக்கின்றனர்.  ஒரு ஏழையோ, கிராமத்து விவசாயியோ எளிதாக பொய் சொல்வதில்லை. நீதி நூல்களை படித்தவர்கள், நீதிகளை மேடைகளில் முழங்குபவர்கள்தான் திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் நமக்கு முன்னே போலிகளாய் நிற்கிறார்கள். மிக எளிமையாக, தன்னைச்சுற்றி நல்லது நடக்கப் போராடும் இவருக்கு ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், ஆகாஷ் குடியிருப்பு ஊழல்கள் பற்றியோ, தேசிய அரசியலின் விளையாட்டுகள் பற்றியோ அதிகம் தெரியாது. அது தெரியாமல் இருப்பதாலேயே அவருடைய ஆன்ம பலம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அவர்கள் அறியாமையிலேயே இருக்கட்டும்.

(வண்டப்புலி நாடார் பற்றிய தகவல் பகிர்ந்துகொண்ட திரு.கண்ணனுக்கு நன்றி)

டீ பிரேக் 1


[டீ பிரேக் என்பது, ஒரு தொகுப்புப் பதிவு.

எனக்குத் தெரிந்த, படித்த பல சின்னச்சின்ன விஷயங்கள் பற்றி

உங்களுடன் பகிர்ந்து கொள்ள கிடைத்த வாய்ப்பு.

வாரம் ஒருமுறை எழுதலாம் என்றிருக்கிறேன். பார்க்கலாம். ]

 

ஒரு கதை…

புத்தரும் அவருடைய சீடரும் ஒரு ஊரைத் தாண்டி சென்றுகொண்டிருந்தனர். அந்த ஊரில் உள்ளவர்கள் புத்தரை கண்டபடி திட்டிக்கொண்டிருந்தனர். அவரை அசிங்கப்படுத்தினர். ஆனால் புத்தர் எந்த எதிர்வினையும் செய்யாமல் அமைதியாக சென்றுகொண்டிருந்தார். அவருடைய சீடருக்கு இது அடங்காத கோபத்தை ஏற்படுத்தியது. அவர் மக்களை பார்த்து பதிலுக்குத் திட்டினார். புத்தரிடம், ”ஏன் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள், தப்பான மக்களை ஏன் சகித்துக்கொள்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே வந்தான். புத்தர் பதிலேதும் சொல்லாமல், அமைதியாக அந்த சீடனைப்பார்த்து, சிறு புன்முறுவலுடன் தன் உடலில் இருந்த மேல்துண்டை அந்த சீடனுக்கு போர்த்திவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

இப்போது, மேல்துண்டை தன் மீது புத்தர் ஏன் போர்த்தினார் என்ற குழப்பம் சீடனை ஆக்ரமித்தது. அதிலிருந்து புத்தர் என்ன செய்தியைச் சொல்கிறார் என யோசிக்க ஆரம்பித்தான். யோசித்துக்கொண்டே இருந்தான். அன்று இரவு உறக்கம் கூட அவனுக்கு வரவில்லை. நேராக புத்தரிடம் சென்று இது பற்றிக் கேட்டான். புத்தர், “நான் துண்டை உன்மீது போர்த்தியதில் எந்த செய்தியும் இல்லை.

உன்னுடைய மனம், மக்களின் திட்டுகளையும் கேலிகளையும் யோசித்துக்கொண்டிருந்தது, அதிலிருந்து திசைதிருப்ப துண்டினை உன் மேல் போர்த்தினேன். அதற்கு பிறகு நீ மக்களை மறந்துவிட்டு, துண்டினைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தாய்” என்றார்.

 

ஒரு காணொளி

தனிமை எப்பவும் கொடுமையானது. இதைப்பார்த்த பிறகு என் அப்பாவிம் மீதான என் அன்பு இன்னும் அதிகரித்தது.

 

ஒரு செய்தி

யார் இந்த அன்னா ஹசாரே?

முன்னால் ராணுவ வீரர். 1965 இந்திய-பாகிஸ்தான் போரில் பங்கெடுத்தவர், காந்தியவாதி.

என்ன பெரிசா செய்துவிட்டார்?

எல்லா நிலைகளிலும் பின்தங்கியிருந்த ராலேகான் சித்தி (அகமது நகர், மகராஷ்டிரா) கிராமத்தை தனிஆளாக பண்பிலும், பொருளாதாரத்திலும் இந்தியாவின் முன்னோடி கிராமமாக மாற்றிக்காட்டியவர்.

அதனால என்ன?

இப்போது, இந்த கிராமம் முழுமையான சுயசார்புத் தன்மையுடையதாக, மத்திய மாநில அரசின் உதவியில்லையென்றாலும் தன்தேவையை பூர்த்திசெய்துகொள்ளும் வகையில் மாறியுள்ளது. கிராமத்துக்கான மின்சக்தி கிராமத்திலேயே சூரிய, உயிர்ம, காற்று சக்திகளால் உற்பத்திசெய்யப்படுகிறது. 1975ல் வறுமைக்கோட்டுக்கு கீழிருந்த இந்த கிராமம் இப்போது, இந்தியாவின் பொருளாதார வளமிக்க கிராமமாக மாறியுள்ளது.

இதெல்லாம் சரி, இவரோட வாழ்க்கை, வசதிகள் பற்றி…

இந்த மாற்றத்துக்கு காரணமான இவர் தன்னுடைய வாழ்நாள் சேவைக்காக பத்ம பூஷன் விருது பெற்றுள்ளார். இன்றைக்கும், அந்த கிராமத்தில் உள்ள கோவிலுக்கு அருகே 10க்கு 10 இடவசதி கொண்ட ஒரு சிறு அறையில் தான் வாழ்ந்துவருகிறார்.

இப்ப எதுக்காக உண்ணாவிரதம் இருக்கார்?

நாட்டில் புரையோடிப்போயுள்ள ஊழலை ஒழிக்க சரியான சட்டக்கருவியை (ஜன லோக்பால் சட்டம்) ஏற்படுத்த போராடிக்கொண்டிருக்கிறார்

இந்த சட்டம் புதியதான ஒன்றா?

இல்லை. 1972லேயே அப்போதய சட்ட அமைச்சர் திரு.சாந்தி பூசனால் கொண்டுவர பரிசீலிக்கப்பட்டது. ஆனா, நமது மாண்புமிகுக்களும் உயர் அதிகாரிகளும் 40 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு பொதுசொத்தை ஆட்டையை போட்டு வருகின்றனர்

இவர் உண்ணாவிரதத்தின் மூலம் குறுகிய காலத்தில் இதை சட்டமாக்க அரசை நிர்பந்திப்பது சரியா?

இப்போதைக்கு அரசிடம் இவர் கேட்டுக்கொள்வது, இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்ற அறிக்கை வாயிலான உறுதிமொழியைத் தான். அடுத்து, இந்த சட்டவரைவை மேற்கொள்ள 50% அரசு அதிகாரிகளும் 50% மக்கள் அமைப்புப் பிரதிநிதிகளும் அடங்கிய ஒரு குழு அமைக்கப்படவேண்டும் என்பது.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் என்ன நிகழும்?

இதன் மூலம் தேர்தல் ஆணையம் போன்ற சுதந்திரத்தன்மையுடன் இயங்கும் மத்தியில் லோக்பால், மாநிலங்களில் லோக்அயுக்தா அமைப்புகள் ஏற்படுத்தப்படும். ஊழல் குற்றம் சாட்டப்படுபவர் எவ்வளவு பெரிய அதிகாரியாகவோ, எவ்வளவு பெரிய அரசியல்வாதியாகவோ இருந்தாலும் 1 வருடத்துக்குள் விசாரிக்கப்பட்டு 2 வருடங்களுக்குள் தீர்ப்பும் தண்டனையும் வழங்க சட்டபூர்வ வழி ஏற்படும்.

இந்த சட்டத்தால் மட்டுமே இந்தியா ஊழலற்ற தேசமாகிவிடுமா?

தகவல் பெறும் உரிமை சட்டம் போல இந்த சட்டமும் வெளிப்படையான நிர்வாகத்தை உண்டாக்க உதவும் ஒரு கருவி மட்டுமே. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் கண்டிப்பாக இப்போதைக்கு இருக்கும் ஊழல் விசாரணை முறைகள் இன்னும் மேம்படும். இதில் சந்தேகமே இல்லை.

அன்னா ஹசாரே மட்டுமே இதற்காக போராடுகிறாரா?

அவருடன் இப்போது, சமூக ஆர்வலர்களான பாபா ஆம்தே, சுவாமி அக்னிவேஷ், அர்விந் கெஜ்ரிவால், கிரண்பேடி போன்றவர்களும் இணைந்திருக்கிறார்கள். இன்னும் பல நல்ல உள்ளங்கள் இணைந்து போரட வந்துகொண்டிருக்கின்றன.

சரி, நான் என்ன செய்யமுடியும்?

இந்த விஷயத்தைப் பற்றி, நம் நண்பர்கள், உறவினர் வட்டத்தில் பேசலாம். இந்த செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். விருப்பமும் வாய்ப்பும் இருந்தால், நமது பகுதியில் இது பற்றிய விழிப்புணர்வை பிரசாரத்தை மேற்கொள்ளலாம். எதுவும் முடியாதென்றால், அன்னா ஹசாரேவின் உடல் நலம் மேம்பட பிரார்த்தனையாவது செய்யலாம்.

ஓ போடு…


ஓட்டுப் போடு; பிடிக்கலைன்னா 49-ஓ போடு..

(கார்டூன்:http://onegirlathousandwords.wordpress.com/)

போனமாதம், ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம். அதையொட்டி, எங்க ஊரில் நிறைய பேனர்கள் ரோட்டரி க்ளப் மூலமாக வைத்திருந்தனர். அவை எல்லாம் வாக்காளர்கள் தேர்தல்களில் வாக்களிப்பது கடமை என வலியுத்தியது. எல்லா சுவரொட்டிகளிலும் எங்கள் மாவட்ட ஆட்சியர், வாக்காளர்கள் நேர்மையாகவும் தவறாமலும் வாக்களிப்பதை வலியுருத்தினார். இதைப்பார்த்த என்னுடைய நண்பன் “வாக்காளர்களை காசு வாங்காம ஓட்டுப்போடச் சொல்வதற்கு முன் தப்பே செய்யாத நல்ல வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தச்சொல்லனும்” என்று அலுத்துக்கொண்டான். இன்று அரசியல் என்பது பணம் கொழிக்கும் வியாபாரமாக போய்விட்டதையும் அந்த ஊழல் நீரோட்டத்தில் சமீபகாலமாக வாக்காளர்களையும் கலக்கச்செய்யும் பழக்கமும் ஞாபகத்துக்கு வந்தது.

உலக அளவில் எல்லா நாடுகளும் இந்தியாவைப் பார்த்து வியப்பதற்கு அடிப்படை காரணம் நம்முடைய மக்களாட்சித் தன்மையில் பரப்பும் வீச்சும் தான். இந்தியாவில் மட்டும் தான் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் முதல் குடியரசுத் தலைவர் வரை 32 இலட்சத்துக்கும் மேற்பட்ட பதவிகள் வாக்காளர்களின் வோட்டுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படப்படுகிறது. இந்தத் தன்மையே நமது தேர்தல் முறையை மிக வலிமையானதாகவும் அதேசமயத்தில் சிக்கலானதாகவும் ஆக்கியுள்ளது.

நமது தேசத்தை ஜனநாயக தேசம் என்று சொல்வதற்கு இருக்கும் ஒரே காரணம், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நமது ஆட்சியாளர்களை நாம் மத்தியிலும் மாநிலத்திலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறோம் என்பது தான். இதோ, இப்போது நமது மாநிலத்திலும் தேர்தல் காலம் ஆரம்பித்துவிட்டது. கூட்டணி பேரங்கள் சீரும்சிறப்புமாக களைகட்டிவிட்டது. வரும் மே மாதம் சட்டசபை தேர்தல், ஜீன் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் என அடுத்த 4 மாதங்களில் இரண்டு முக்கிய தேர்தல்கள் நடைபெறவுள்ள இந்த காலக்கட்டத்தில் நேர்மையான தேர்தல் பற்றிய விவாதத்தை முன்னெடுத்துச் செல்வது அவசியமெனப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட இன்னும் நமது தேர்தல்களில் 100% வாக்கெடுப்பை உறுதிசெய்யமுடியவில்லை. எந்தத் தேர்தலிலும் சராசரியாக 70% சதவிகித வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கிறார்கள். அதில் 20% வாக்கு பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. அதாவது, மொத்த வாக்காளர்களில் 30%க்கும் குறைவான பெரும்பான்மை பெற்றவர் கையில் நம் நாட்டின் அடுத்த 5 ஆண்டையும் நமது வாழ்க்கையின் தலைவிதியையும் கொடுக்கிறோம். சாதாரண காய்கறிக்கடையில் கூட நாம் உண்ணும் காய்கறிகளை கீறிப்பார்த்து, முறுக்கிப்பார்த்து, உடைத்துப்பார்த்து, தட்டிப்பார்த்து, முடிந்த அளவுக்கு பேரம் பேசி வாங்கும் நாம், நாட்டின் போக்கினை தீர்மானிக்கும் வாக்குக்கு எந்த முயற்சியும் எடுக்காமல் உதாசினப்படுத்துகிறோம் அல்லது போகிறபோக்கில் எதோ ஒரு கட்சிக்கு ஓட்டளித்துவிட்டு நாடு கெட்டுப்போச்சு, ஊழல் ஊறிப்போச்சு என்று அங்கலாய்க்கிறோம்.

100% வாக்கினை உறுதி செய்யமுடியாததற்கு அரசு மற்றும் மக்கள் ஆகிய இருவரிடமும் தவறுகள் இருக்கின்றன. சோம்பேறித் தனத்தாலும் வாழ்வாதாரத்துக்காக வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்ததாலும் மக்களில் குறிப்பிடத்தகுந்த சதவீதத்தினர் தமது வாக்குரிமையை பயன்படுத்துவதில்லை. சமீபகாலங்களில் வாக்காளர்கள் தமது, விலைமதிக்கமுடியாத வாக்குரிமையை பணத்துக்காகவும் சலுகைகளுக்காகவும் விற்றுவரும் போக்கும் அதிகரித்துவருகிறது. இவை இரண்டுமே நமது ஜனநாயகத்தின் மீதிருக்கும் கரும்புள்ளிகளாகும். வாக்குரிமையில் அரசின் தவறுகளெனப் பார்த்தால் மூன்று விஷயங்கள் முக்கியமானவை. 1.வாக்காளர் பட்டியல் முழுமையானதாக, சரியானதாக எப்போதுமே இருந்ததில்லை. எல்லா சமயங்களிலும் இறந்தவர் பெயர் நீக்கப்படாமல் இருப்பது, ஒரு நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருப்பது, வாக்களிக்கும் வயதினை அடைந்திருந்தாலும் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் முக்கியமானவை. 2.வாக்களிக்கும் நடைமுறை வாக்காளருடைய கடமை என்று வலியுருத்தப்பட்டாலும் அதனை சட்டப்பூர்வ கட்டாயமாக்காமல் இருப்பதால் சோம்பல்தனத்தால் வாக்களிக்க விருப்பாதவர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்தவகையில் இருந்து வருகிறது. 3.மிக முக்கியமாக போட்டியிடும் வேட்பாளர்களில் யாருமே சரியான நபர்களாக இல்லை என்று வாக்காளர் கருதும் பட்சத்தில் அவர் நடுநிலை அல்லது எதிர் வாக்கினை பதிவு செய்யும் நடைமுறை இல்லாதிருப்பது இந்தியத் தேர்தல் முறையின் மிகப் பெரிய பலவீனமாக கருதப்படுகிறது.

“நிற்கின்ற வேட்பாளர்கள் எல்லாருமே தப்பானவர்கள் இவர்களுக்கு ஓட்டளிப்பதை விட, வீட்டில் உட்கார்ந்து டீவியில் தேர்தல்கால சிறப்பு நிகழ்ச்சிகளை பார்கலாம்” என்று தேர்தல் சமயத்தில் ஓட்டளிக்காத மக்கள் நிறையபேர் சொல்வார்கள். யோசித்துப்பார்த்தால் அது உண்மையாகத் தான் உள்ளது. எடுத்துக்காட்டாக, எங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருமே ஊழல் பேர்வழிகளாக இருக்கும் பட்சத்தில், அவர்களில் யார் குறைந்த ஊழல் செய்பவரோ அவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு தான் எனக்குள்ளதே தவிர, அவர்கள் அனைவரையும் நிராகரிக்கும் வாக்கினை பதிவு செய்யும் உரிமை எனக்கு தரப்படவில்லை. இந்த வாய்ப்பு நேர்மையான, நம்பகத்தன்மையுள்ள மக்களாட்சியை நிறுவுவதற்கு மிகவும் அவசியமானதாகும். சரியான நபரை தேர்தலில் நிறுத்தவில்லையென்றால் மக்கள் நிராகரிப்பார்கள் என்ற எண்ணம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டால் அவர்கள் மக்களின் ஓட்டினை பெறுவதற்கு சரியான நபர்களை தேர்தலில் நிறுத்தமுற்படுவார்கள். அதன் மூலம் ஒட்டுமொத்த ஜனநாயகத் தலைமைத்துவமும் அரசியல் முறைமையும் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் தற்போதிருக்கும் தேர்தல் நடைமுறையில் மறைமுகமாக இந்த நடுநிலை ஓட்டு தரப்பட்டுள்ளது. இந்திய அரசின் தேர்தல் நடத்தை விதிகள் 1961ன் 49-O விதிமுறையானது, ஒரு வாக்காளர் தமது வாக்கினை எந்த வேட்பாளருக்கும் பதிவு செய்யாமல் வாக்கெடுப்பில் பங்கெடுக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. துரதிருஷ்ட வசமாக இந்த விதிமுறைப் பற்றிய விழிப்புணர்வு வாக்காளர்களிடையே மிகக் குறைவாகவே உள்ளது. இந்த நடைமுறையின் படி, வாக்காளர் தம்முடைய அடையாள அட்டையை உறுதி செய்துகொண்ட பின்னர் வாக்களிக்க செல்வதற்கு முன், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாம் 49 ஓ விதிப்படி எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறவேண்டும். அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தும் அதிகாரி, இதற்கென தரப்பட்டுள்ள 17 A படிவத்தில் வாக்காளர் பெயர், முகவரி எழுதி வாக்காளருடைய கையொப்பம் அல்லது இடதுகை பெருவிரல் அச்சினை பெற்றுக்கொள்வார். இந்த முறையில், வாக்காளரானவர் தேர்தலில் பங்கெடுத்தது உறுதிசெய்யப்படும் அதே நேரத்தில் வாக்காளரின் விருப்பப்படி அவரது ஓட்டு எந்த வேட்பாளருக்கும் கிடைக்கப்படமாட்டது.

எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்த வேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் 49 ஓவின் கீழ் நம்முடைய ஓட்டைப் பதிவு செய்தால் நமது அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது. ஒருவேளை ஒரு குறிப்பிட்ட தொகுதியில் பதிவாகும் மொத்த ஓட்டுகளில் அதிகபட்ச ஓட்டுகள் 49ஓவின் கீழ் பதிவுசெய்யப்பட்டிருந்தால் அந்த தொகுதிக்கு மறு தேர்தல் நிகழ்த்தவும் வாய்ப்புள்ளது.

அதேநேரத்தில், அரசியல் சட்டப்படி நாம் தெரிவிக்கும் வாக்கு ரகசியமானது, யாருக்கும் தெரியவராது என்பது வாக்காளருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால் துரதிருஷ்டவசமாக 49 ஓவை ரகசியமாகப் பதிவு செய்யமுடியாமல் பொதுவில் தெரிவிக்கும் வகையில் வைத்திருப்பது வாக்காளருக்கு அளிக்கப்பட்டுள்ள இரகசியத்தன்மையையே கேலிக்குறியதாக ஆக்கிவிடுகிறது. அடிப்படையில் இந்த முறையானது சட்டப்படி தவறாகும். இதையும் ரகசிய வாக்காக அளிக்கும் விதத்தில் மின் வாக்கு இயந்திரத்தில் 49 ஓவுக்கு ஒரு தனி பொத்தானை வரும் தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி வாக்காளர்களின் நம்பகத்தன்மையையும் மக்களாட்சியின் உண்மையான மாண்பையும் உறுதிசெய்ய வேண்டும்.

தன்னார்வ அமைப்புகள், இணையதள பதிவர்கள், ஊடகங்கள் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவேண்டும். மின் வாக்கு எந்திரத்திலேயே 49 ஓவுக்கான பொத்தானை வைக்க வலியுருத்தும் அதே நேரத்தில், சுவரொட்டிகள் மூலமாகவும் விழிப்புணர்வு முகாம்கள் மூலமாகவும் மக்களிடையே இது போன்ற வாய்ப்பிருப்பது பிரபலப்படுத்தவேண்டும். அப்போது தான் ‘இனி நேர்மையான அரசியல், நல்ல வேட்பாளர்கள் இல்லாவிட்டால் மக்கள் ஆதரவு கிடைக்காது’ என்ற செய்தி அரசியல்வாதிகளின் பொட்டில் உறைக்கும். பூனைக்கு கட்டவேண்டிய மணி நம் கையில் உள்ளது. எப்போது கட்ட ஆரம்பிப்போம்?

குறிப்பு: பதிவர்கள் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தைப்பற்றியும் இந்த 49 O விதிமுறைப் பற்றியும் ஒரு பதிவாவது எழுதி, ஜனநாயகத்தை வலுப்படுத்துங்களேன்.

எந்திரன்: சாரி ஷங்கர்


வீட்டுக்காரம்மாவோட தொந்தரவு தாங்காமல் நேற்று மாலை எந்திரன் போகவேண்டியிருந்தது. எங்க ஊரில் எந்திரன் ஃபீவர் ஒரு வாரத்துக்குள்ளேயே குறைஞ்சிடுச்சு. ஈவினிங் ஷோ, 50ரூபாய்க்கே கோல்டன் மினியில் டிக்கட் கிடைத்தது. (ஆனா, 20 நாள் கழித்தும், நான் மகான் அல்ல படத்துக்கு 60 ரூபாய் கொடுத்துப் போனேன்.)

படத்தில் ஷங்கர், ரஜினி, ரத்தினவேலு மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் கடினமான உழைப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. தமிழக தொழில்நுட்ப கலைஞர்களின் திறமையை உலகுக்கு வெளிப்படுத்தியதில் நிச்சயம் எந்திரன் பாராட்டப்படவேண்டிய முயற்சி. ஆனால் ஒரு படத்தின் உன்னதத்தன்மையை அதில் செலுத்தப்பட்டுள்ள உழைப்பை மட்டும் வைத்து தீர்மானிக்கக்கூடாது. அந்த வகையில் இராவணனுக்குப் பிறகு இந்த படமும் ஏமாற்றம் தான்.

பொதுவாக ஷங்கர் படம் திரையில் முதல்முறை பார்க்கும் போது, மிகப்பெரிய காட்சிவிருந்தாக அமைந்திருக்கும். ரசிகனை எதையும் யோசிக்கச்செய்யாமல், அடுத்தடுத்த காட்சியின் பிரம்மாண்டத்தில் கரைந்து போகச்செய்யும். பின்னால் கொஞ்சம் சாவகாசமாக யோசிக்கும் போது, அந்த காட்சியமைப்புகளின் அபத்தமும் லாஜிக்கில்லாத தன்மையும் தெரியவரும். எந்திரன் படத்தில் வரும் சிந்தனையற்ற ரோபோக்களாக ரசிகர்கள் இருந்தால் ஷங்கர் படத்தை வியந்து ரசிக்கமுடியும்.

இந்த படத்திலும் இதே போக்கு வலிமையாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இப்ப படத்தின் ஆதார சிக்கலை எடுத்துக்கொள்வோம். வசீகரன் உருவாக்கிய ரோபோ, உணர்வுகளைப் பெறுகிறது. அதனைத்தொடர்ந்து வசீகரனின் காதலி மீது, காதல் கொள்கிறது. இதன் தீவிரத்தை அறிந்த வசீகரன், ஒரு கட்டத்தில் அதனை அக்குவேறு ஆணி வேராக பிரித்து குப்பையில் வீசிவிடுகிறான். அதன் பின் கதையின் போக்குக்கு இந்த நிகழ்வு ஆதாரமாக அமைகிறது. இதை திரைக்கதையில் நியாயப்படுத்துவதில் தான் படத்தின் கலைப்பூர்வமான வெற்றி அமைந்திருக்கிறது.

உண்மையில் 10 ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய ஒரு ரோபோவில், காதல் உணர்வு தோன்றி, தனக்கே ஆபத்தாகும் என்றால், அதற்கடுத்த காட்சியமைப்புகள் லாஜிக்காக

1.  தன்னுடைய காதலியின் மீதான மையலை, சகோதரி பாசமாக மாற்றும் கமேண்டை வசீகரன் சிட்டியின் உள்திணிப்பது

2.  முடியவில்லை என்றால், ஐஸ்வர்யா ஸ்கின்னுடன் இன்னொறு ரோபோவை உருவாக்கி ஜோடி சேர்ப்பது

3.  அதுவும் முடியவில்லை என்றால், மிக ஆபத்தான ரோபோ கருவியை கவனத்துடன் லேப்பிலேயே டிஸ்மேன்டில் செய்து, முழுமையாக செயலிழக்கச்செய்வது

ஆகிய 3 செயல்களுக்கான வாய்ப்புகள் தான் யதார்த்தத்தில் அமையும். இதை விட்டுவிட்டு, கட்டையால் கைகாலை உடைத்து, குப்பைத் தொட்டியில் குவிக்கும் அபத்தம், வசீகரன் என்ற கேரக்டரை பொறுப்பற்ற கேனைப்பையனாக ஆக்கிவிடுகிறது. அந்த ஸீனிலேயே, படத்தின் திரைக்கதை ஓசோன் ஓட்டையை விட பெரிய ஓட்டையுடன் வந்துவிடுகிறது.

அதே போல, சில சின்னச் சின்ன ஷாட்கள் காட்சிக்கட்டமைப்பை இல்லாஜிக்காக ஆக்கியிருப்பது படம் பார்க்கும் போதே தெரிந்தது.

ரயில் சண்டையின் போது, அடித்து வெளியே போடப்பட்ட ரோபோ, இல்லாத டிரான்ஸ்பார்மரில் கரண்ட் ஏற்றிக்கொண்டு, தண்டவாளத்தில் வேகமாக வரும்போது, ஒரு மாடு இருப்பதை பார்த்து, அடுத்த தண்டவாளத்துக்கு மாறும். அந்த நேரத்தில், ரோபோவுக்கு உணர்ச்சிகள் என்பது இல்லை என்றால், ஏன் மாட்டை காப்பாற்ற அடுத்த தண்டவாளத்துக்கு மாற முடியும்?

மனித உணர்ச்சிகள் பெற்றதன் அடையாளமாக, ரோபோ, பிரசவம் பார்க்கும் சீன் வைத்திருப்பார்கள். அந்த சீன் கூட, ரோபோவின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்குமே தவிர, அதில் மனித உணர்வை ரோபோ வெளிப்படுத்துவதாக காட்சியமைக்கப்பட்டிருக்காது. இந்த காட்சிக்கும்,  தீவிபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் காட்சிக்கும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை.

கடைசியில், பல வடிவங்களில் உருமாறும் பவர் ரேஞ்சர்ஸ், காட்டூன் நெட்வொர்க் காட்சியமைப்புகளில், அவ்வளவு பெரிய உருவம் கட்டமைக்கும் அளவுக்கு, அத்தனை ரோபோட் பிரதிகள், பரேட் காட்சியில் காட்டப்படவில்லை. கடைசியில், வசீகரன் இந்த பிரச்சனையை எப்படி அறிவுப்பூர்வமாக தீர்ப்பான் என்று எதிர்பார்த்தால், சும்மா பொட்டிய தட்டிவிட்டு, செயலிழக்கச்செய்கிறான். இதையெல்லாம் நாங்க, அம்புலிமாமா புத்தகத்திலேயே படிச்சாச்சு ஷங்கர். மகா மொக்கை.

கடைசியில் படத்தை எப்படா முடிப்பாய்ங்கன்னு ஆயிடுச்சி. அப்புறம், கால்மணி நேரத்து மேல ஓடும் படைப்பாளிகளின் பட்டியல், அதில் 70% பேர், வெளிநாட்டுக்காரர்கள் என்றால், நான் கூட காசு கொடுத்து, கேமரூனை அசிஸ்டண்ட்டா வைச்சி எதாவது ஒரு படத்தை எடுத்து, உலக சாதனை செஞ்சேன், தமிழனுக்கு வாழ்நாள் பெருமை கொடுத்தேன்னு சொல்லிக்கலாம் போலயிருக்கு.

சாரி ஷங்கர். சயின்ஸ் ஃபிக்ஷன்ன்னா ஏலியன்ஸ், கால எந்திரம், ரோபோடிக்ஸ் எனும் இந்த 3 வெரைய்டியை மாத்தி மாத்தி துவைச்சு காயப்போட்டு ஹாலிவுட்டில் எடுத்திட்டிருக்காங்க.(இன்செப்ஷன் விதிவிலக்கு) நீங்க கொஞ்சம் வேறமாதிரி யோசிச்சிருக்கலாம். சரி விடுங்க சட்டியில இருந்தா தானே அகப்பையில வரும். அப்புறம், எந்திரன்னு படத்தோட பெயரை தமிழில் வரிவிலக்குக்காக வைச்சிட்டு, படத்தில் எந்த ஒரு இடத்திலும் வசனத்தில் எந்திரன் என்று பயன்படுத்தவில்லையே? டைட்டிலை மக்கள் மனதில் ஸிங்க் பண்ண மட்டும் பாட்டில் பயன்படுத்தியிருக்கிறீர்கள். இது போன்ற, குறுக்குபுத்தி ரெட் சிப்பை, எப்ப உங்க மனதில் இருந்து மாற்றப்போகிறீர்கள்?

மற்றபடி, அடுத்தடுத்த காட்சிகள், உண்மைத்தமிழன் அண்ணாச்சியின் நீண்ட ஆய்வில் சொல்லியிருப்பது போல மகா மொக்கையாகவும், காலிப்பிளவரை படம் பார்ப்பவர் காதில் வைத்துவிடுவது போலவும் உள்ளது.

ஆனா, இந்த படத்திலும் ஊழலை ஒழிக்கறேன், நாட்டை திருத்துறேன்னு இறங்காம இருந்ததுக்கு ரொம்ப நன்றி.

ம.ம.உலகம்? 2


ஒருமுறை நாகர்கோவில் பக்கம் செல்லவேண்டியிருந்தது. வேலையை முடித்துக்கொண்டு திரும்பும்போது பஸ் நிலையம் பக்கத்தில் இருந்த ஒரு பழக்கடையை கவனித்தேன். விதவிதமான வாழைப்பழங்கள் மஞ்சள், பச்சை, சிவப்பு, குட்டை, நீளம் பல நிறங்களில் பல அளவுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டு ஆச்சரியமடைந்தேன். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து சென்னைப் பக்கம் மஞ்சள், பச்சை வாழைகளை மட்டுமே பார்த்து வந்த எனக்கு மட்டி, மொந்தன், நாடன், நேந்திரம், செவ்வாழை என எட்டு வகைகளுக்கும் மேல் தனித்தன்மையுடன் நீளும் பலவகை வாழைப்பழங்கள் மகிழ்ச்சியைக் கொடுத்தன.

உலகில் பலவகை தாவரங்களும் விலங்குகளும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்வது அந்த இடத்தின் வளத்தையும் ஆரோக்கியத்தையும் குறிக்கும். ஐரோப்பிய கண்டத்தில் பல 100க்கணக்கான ஏக்கர்களுக்கு ஒரே விதமான பெரணி வகைத் தாவரங்கள் நீண்டிருக்கும். ஆனால் இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் பலவித தாவரங்களும் விலங்குகளும் ஒரு சேர இருப்பதைக் காணமுடியும். அந்த வகையில் பல உயிரினங்களின் வாழ்வாதாரமாக நமது தேசம் விளங்கி வருகிறது. கர்நாடகாவின் கொல்லேகால் பகுதியில் 7 வகை நிறங்களுடைய மக்காச்சோளங்களை அந்தப்பகுதி விவசாயிகள் காலங்காலமாக பயிரிட்டு வருகின்றனர். நமக்கெல்லாம் மஞ்சள் நிற மக்காச்சோளத்தைத் தவிர வேறு மக்காச்சோள வகைகளை பார்தத்தில்லை. பல வண்ண மக்காச்சோளங்கள் நாட்டில் மற்றபகுதிகளில் அழிந்த நிலையிலும் கொல்லேகால் பகுதி விவசாயிகள் பாதுகாத்து வருவது முக்கியமானது.

அதேபோல் மைசூர் பக்கத்தில் சையதுகான் என்னும் விவசாயி தனது சொந்த முயற்சியால் திப்புசுல்தான் அவரது தாத்தாவிற்கு வீரப்பரிசாக வழங்கிய தோட்டத்தில் அவர் தாத்தா வைத்த 120 வகை மாம்பழ மரங்களை காலங்காலமாக காப்பாற்றி வருகிறார். அதில் பாதிக்கும் மேற்பட்ட வகைகளை உலகில் வேறு எங்கும் காணமுடியாது. இதே போல சிறப்பு குணம் கொண்ட சில வகைப் பயிர்கள் கண்ணுக்கு முன்னே அழிந்து வருகின்றன. குரங்கு சம்பா என்ற நெற்பயிர் வெள்ளத்திலும் உயிர்பிடித்து வாழக்கூடியது. களர்பாலை என்ற மற்றொரு நெற்பயிர் உப்பு நிலத்திலும் வளர்ந்து பயன்தரக்கூடியது. பூசணிக்காயின் ஒரு வகையான வைத்தியக்குன்னம், செயல்படாத சிறுநீரகங்களையும் சீர்செய்யும் மகத்துவம் கொண்டது. அதே போல் கருங்குருவை அரிசி யானைக்கால் நோயை குணப்படுத்தும் சக்தி கொண்டது. இது போல் பல அரிய வகை மூலிகைகள், சிறப்பு குணம் கொண்ட தாவரங்கள் மனிதனின் பேராசையால் உலகை விட்டே அழிந்து வருகின்றன.

புதுடெல்லியிலுள்ள தேசிய மரபணு பாதுகாப்பு மையமானது 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல்வகைகளின் ஜீன்களை பாதுகாத்து வருகிறது. ஒரு தாவரத்தின் பல வகைகளை பாதுகாப்பது 4 காரணங்களுக்காக முக்கியமானதாக விளங்குகிறது.

  1. ஒவ்வொறு உயிரும் இந்த உலகில் வாழ சமஉரிமை கொண்டுள்ளது. அதனை தற்காலிக இலாபத்துக்காக மனித இனம் அழிப்பது பாவச்செயல்.
  2. பலவகை உயிரினங்கள் இருக்கும் போது மனிதனின் உணவுப் பாதுகாப்பு உறுகி செய்யப்படுகிறது. இந்தோனேசியாவிலும் அமெரிக்காவிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் ஒரேவித பயிர் செய்த போது நோய் தாக்குதலினால் பெரும் பயிர்ச்சேதம் ஏற்பட்டு உணவுத் தட்டுப்பாடு உண்டானதை தவிர்க்க ஒரு குறிப்பிட்ட சூழலில் எல்லாவித பயிர்களையும் வளர்க்கலாம்.
  3. சரிவிகித உணவை மனிதனுக்குத் தர பலவித பயிர்களை பயிரிடுவதும் உண்பதும் அவசியம். இப்போதெல்லாம் நமது உணவு அரிசி, கோதுமை, உளுந்து என்ற அளவில் சுருங்கிவிட்டது. சாமை, சோளம், ராகி, கம்பு, வரகு போன்ற பலவித உணவு தானியங்களை இன்றைய தலைமுறை கண்ணால் கண்டது கூட கிடையாது. துரதிருஷ்டவசமாக கிராமங்களில் கூட மாற்று தானியப் பயிர்களை மக்கள் உண்பது குறைந்து வருகிறது. தமிழக அரசின் 1ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தை ஆரம்பித்த பிறகு மக்களின் சரிவிகித உணவு முறை தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு சர்வதேச ஆய்வில் இந்தியர்கள் ஒரே மாதிரியான உணவினை உட்கொள்வதால் அவர்களின் சராசரி உயரம் குறைந்துள்ளாக கண்டறிந்துள்ளனர்.
  4. ஒரு குறிப்பிட்ட பயிரின் நோய் எதிர்ப்பு சக்திக்கு மற்றொரு பயிர் வகையில் இருந்து விடை கிடைக்கும். எடுத்துக்காட்டாக கத்தரிக்காயைத் தாக்கும் பழப்பூச்சிக்கு மாற்றாக மரபணு மாற்ற கத்தரிக்காயை சந்தைப்படுத்துவதற்கு பதிலாக கத்தரிக்காயின் ஒரு வகையில் பழப்பூச்சிக்கு எதிரான எதிர்ப்புச்சக்தி இயல்பாகவே அமைந்திருப்பது அறிவியல் பூர்வமாக நிறுபிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நமது சூழ்நிலைக்கு உகந்த புதிய வகையினை உறுவாக்குவது எளிதாகப்படுகிறது.

இதையெல்லாம் பார்க்கும் போது கேயாஸ் தியரி ஒருவகையில் உண்மையோ என எண்ணவைக்கிறது. நாம் வெட்டும் ஒரு மரத்தால் வானத்தில் ஒரு நட்சத்திரம் உதிர்ந்து போவதற்கான வாய்ப்புள்ளதாக கேயாஸ் தியரி சொல்கிறது. பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களும் ஏதோ ஒருவகையில் தொடர்பு கொண்டிருப்பதாகவும் ஒன்றின் மீதான செயல் சங்கிலித்தொடர் போல பிரபஞ்சத்தின் மற்ற பொருட்களில் தாக்கத்தை விளைவிக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் உலகில் எல்லா உயிர்களின் வாழ்வு மனிதனின் நிம்மதிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதை உணரமுடிகிறது.

(தொடரும்)