மினி குடியரசு – எடவகா பஞ்சாயத்து: ஓர் அனுபவம்


“இது நம்முடைய கிராம சபை. இதில் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கும் யாருக்கோ நாம் ஏன் நேரம் ஒதுக்கவேண்டும்? அவர்கள் எப்படி நமது கிராமசபையில் கலந்துகொள்ளலாம்?” என்று எங்களைப் பார்த்து கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்திலிருக்கும் எடவகா பஞ்சாயத்தின் 19வது வார்டு கிராமசபை கூட்டத்தில் ஒரு பொது குடிமகன் கேள்வி எழுப்பியபோது கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன்.

கேரளத்தின் பஞ்சாயத்து அமைப்புகள் பற்றி எமது அகடமி மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக நான் அவர்களை எடவகா பஞ்சாயத்துக்கு பட்டறிவு பயணமாக கூட்டிச் சென்றிருந்தேன். அந்த பஞ்சாயத்தின் மூலமாக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை பார்வையிட்டு, மக்களின் மேம்பாட்டில் அடித்தள அரசின் பங்களிப்பை அறிந்துகொள்வது எங்கள் திட்டம்.

அந்த பஞ்சாயத்தின் தலைவர் திரு.பிரதீப் கேரளத்தின் குறிப்பிடத்தகுந்த பஞ்சாயத்து தலைவர்களில் ஒருவர். என்னுடைய நண்பரும் கூட. அந்த உரிமையில் நாங்கள் சென்றிருந்த அன்று நிகழவிருந்த 19ம் வார்டுக்கான கிராம சபையில் எங்களை பிரதானமாக பங்கெடுக்கவைத்தார். அன்று தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மீதான சமூகத் தணிக்கை நிகழ்த்த திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது தான் இந்த கட்டுரையின் துவக்கத்தில் எழுப்பப்பட்ட கேள்வி எழுந்தது. திரு.பிரதீப், அந்த குடிமகனுக்கு பதில் அளிக்கையில், “தமிழ்நாட்டில் இருந்து இவர்கள் நம்முடைய பஞ்சாயத்தின் விருந்தினர்களாக வந்திருக்கிறார்கள், இந்த மாணவர்கள் நமது பணிகளைப் பார்த்து கற்றுக்கொண்டு, அந்த படிப்பினையை இந்தியாவெங்கும் பரப்ப திட்டமிட்டுள்ளார்கள்” என்று நமது நிறுவனத்தின் தன்மையை விளக்கினார். பிறகு, “அவர்கள் விருந்தினர்கள் என்றால் தாராளமாக வரவேற்கிறோம். ஒரு பார்வையாளராக நமது கிராமசபையில் பங்கெடுக்கலாம்” என்று மகிழ்வுடன் அதே குடிமகன் எங்களின் வருகையை அங்கீகரித்தார்.

கேரளத்தின் மக்கள் சக்தி!

எனக்கு பெருமிதமாக இருந்தது. கேரளத்தின் அபரிமித வளர்ச்சிக்கு இதுதான் ஆணிவேர். விஷயமறிந்த மக்கள். தமது சந்தேகங்களை மற்றும் தேவைகளை துணிச்சலுடன் கேட்கும் கலாச்சாரம். இதனால் அங்குள்ள அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அதிகம் ஏமாற்றமுடியாது. மக்கள் கண்காணிக்கிறார்கள் என்ற உணர்வு இருப்பதாலேயே நல்ல பல செயல்கள் நிதமும் நடக்கின்றன. இந்தியாவின் மற்ற எந்த மாநிலத்தையும் விட கேரளா ஐந்து ஆண்டுகள் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வேறொரு சமயத்தில், அந்த பஞ்சாயத்தின் அலுவலர் ஒருவர், சராசரியாக ஒரு நாளைக்கு அந்த பஞ்சாயத்தில் மூன்றிலிருந்து ஐந்து விண்ணப்பங்கள் தகவல் கேட்கும் சட்டத்தின் கீழ் தகவல் கேட்கப்படுகிறது என்று சொன்னபோது உண்மையான மக்களாட்சி இப்படித்தான் இருக்கும் என்ற புரிதல் எங்களுக்கு ஏற்பட்டது.

கேரளாவில் பஞ்சாயத்துகளுக்கு அதிகபட்ச அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு பாராளுமன்ற / சட்டமன்ற உறுப்பினருக்கு சராசரியாக ஆண்டுக்கு இரண்டு கோடிகள் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்பட்டு வரும் நிலையில் கேரளத்தின் பஞ்சாயத்துகளுக்கு மேம்பாட்டு பணிகளுக்காக சராசரியாக ஆண்டுக்கு ஆறு கோடி ரூபாய் நிதி தரப்படுவது அதிகாரப்பரவலின் உச்சம் எனலாம். கல்வி, சுகாதாரம், நல்வாழ்வு, ஊரக வளர்ச்சி என ஏறக்குறைய எல்லா வளர்ச்சி அமைப்புகளின் மொத்த நிர்வாகமும் கேரள பஞ்சாயத்து அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நாங்கள் சென்றிருந்த முப்பதாயிரத்து சொச்சம் மக்கள்தொகையுள்ள எடவகா பஞ்சாயத்து அலுவலகத்தில் சுமார் 15 முழு நேர அலுவலர்கள். அலுவலகம் முழுமையும் கணினி மயமாக்கப்பட்டு ஒரு கார்பரேட் அலுவலகம் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மகளிர் நலத்துக்கான பொருளாதார சுதந்திர திட்டம்:

எங்கள் பயணத்தின் அங்கமாக பஞ்சாயத்தால் செயல்படுத்தப்படும் இரண்டு சிறப்புத் திட்டங்களை பார்வையிட்டோம். அங்குள்ள பழங்குடியின பெண்களை சுய உதவிக்குழுக்களாக ஒருமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்துக்காக குடைகள் தயார் செய்யும் சிறுஉற்பத்தி கூடத்தை பஞ்சாயத்து ஏற்படுத்தி தந்திருக்கிறது. இதன் மூலம் 50 பெண்கள் அவர்கள் இருக்கும் இடத்திலேயே வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள். குமரப்பாவின் சப்சிடியாரிட்டி பொருளாதாரக் கொள்கையின் படி, உள்ளுர் பயன்பாட்டுக்கான பொருள்களை அவர்களே உற்பத்தி செய்வதால், அவர்களின் பண சுழற்சி அவர்கள் அளவிலேயே கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் வெளிச்சந்தையை சார்ந்திருக்கும் தன்மை குறைந்து தன்னிறைவு சுலபமாக எட்டமுடியும். அடுத்த கட்டமாக இந்த பஞ்சாயத்தில் மற்ற எல்லா வித நுகர்வுப் பொருட்களுக்கான உற்பத்தியையும் இவர்களே தயார் செய்ய முயற்சிகள் எடுக்குமாறு கூறியுள்ளோம்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்:  

அடிப்படையில் எனக்கு தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பெரிய நம்பிக்கை இல்லை. தமிழ்நாட்டில் அது செயல்படும் விதத்தைப் பார்த்து, சோம்பேறிகளையும் ஊழலையும் பெரிய அளவில் உற்பத்திசெய்யும் திட்டமாகத் தான் நான் புரிந்துகொண்டுள்ளேன். ஆனால் எடவகா பஞ்சாயத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மக்களின் தேவையை அறிந்து அதனை ஒட்டி செயல்படுவது மிகப்பெரிய ஆறுதல். இந்த பஞ்சாயத்தானது மாவட்ட அளவில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டதை சிறப்பாக நடத்தியதற்காக நடப்பு ஆண்டில் விருது பெற்றுள்ளது.

இவர்கள் இந்த திட்டத்தின் மூலம் வார்டுக்கு ஒரு தாவர  நாற்றாங்கால் என 19 நாற்றாங்கால்களை ஏற்படுத்தியுள்ளனர். இதில் சராசரியாக ஒரு பருவத்துக்கு 25000 நாற்றுகள் தயார்செய்யப்பட்டு ஒரு நாற்று ஒரு ரூபாய் என்ற விகிதத்தில் விவசாயிகளுக்கு விற்கப்படுகிறது. இதில் சுவாரசியமான அம்சம், இந்த நாற்றாங்கால் பண்ணையில் பணிபுரிவோர் கட்டாயம் வயதானவராகவோ, நலிவுற்ற பிரிவினராகவோ இருக்கவேண்டும் என்பது தான். நாற்றாங்கால் வேலை ஒப்புமை ரீதியில் குறைந்த உடலுழைப்பு உள்ளது. இதில் நலிவுற்ற பிரிவினருக்கும் மட்டும் வேலை தரப்படுவதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. அவர்களும் கண்ணியமான வாழ்க்கை வாழ வழி ஏற்படுகிறது. அதே சமயம், உழைக்கும் சக்தி உள்ளவர்களின் உழைப்பும் தேவையில்லாமல் இது போன்ற திட்டங்களில் வீணடிக்கப்படுவதில்லை. தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகளுக்கு பெரிய எதிரியாய் உருவெடுத்திருக்கும் இத்திட்டம், பஞ்சாயத்து அமைப்பின் சரியான அணுகுமுறையால் விவசாயத்துக்கு உறுதுணையாகவும், நலிவுற்றப் பிரிவினரின் நலம் காக்கும் திட்டமாகவும் மாறியிருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

வனச்சூழல் மீதான அக்கறை மற்றும் பாதுகாப்பு:

கேரளத்தின் வயநாடு பகுதி இயற்கை எழில் கொஞ்சும் அற்புதமான பகுதி. ஆரோக்கியமான சுற்றுச்சூழலால் இங்கு வாழ்பவர்களின் சராசரி ஆயுட்காலம் நம்மை விட நிச்சயம் பத்து வருடம் அதிகமாகத் தான் இருக்கும். இத்தகைய சூழலை பாதுகாக்க பஞ்சாயத்து அமைப்புகள், இயற்கை வளங்களை போற்றிப் பாதுகாத்து வருவதும், வியாபாரத்துக்காக இயற்கையை அழித்து கட்டிடக்காடுகளை ஏற்படுத்தாததும் மகிழ்ச்சி தருகிறது. இந்த பஞ்சாயத்தை ஒட்டியிருக்கும் கருவா தீவினை காண்பதற்காக காத்திருந்தோம். ஆற்றினால் ஏற்படுத்தப்பட்டத் தீவு அது. கட்டுமரத்தில் தான் அந்த தீவுக்கு செல்லவேண்டியிருக்கும். நாங்கள் சென்ற சமயத்தில் அந்த தீவினில் யானை கூட்டம் இறங்கியிருப்பதால் எங்களுக்கான பயண அனுமதி மறுக்கப்பட்டது. ஏமாற்றத்துடன் திரும்பினாலும், வன மிருகங்களை கம்பி வேலிக்குள் அடைத்து அந்த இடத்தில் பத்து விடுதிகள் கட்டி, சுற்றுலாத் தளம் என்ற பெயரில் இயற்கையை சிறை பிடித்து வியாபாரம் நடத்தாமல், இயல்பான சூழலில் மக்களும் மற்ற விலங்குகளும் வாழ வழிசெய்திருப்பது, கேரளத்தில் மக்களுக்கு மட்டுமில்லை, எல்லா உயிரினங்களுக்கும் பூரண சுதந்திரம் இருக்கிறது என்று பூரிப்படைய தோன்றியது.

கரைந்து போகும் பெண் குழந்தைகள்


சில மாதங்களுக்கு முன் திருவண்ணாமலை பகுதியில் அலுவல் ரீதியாக ஒரு மருத்துவரிடம் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பற்றி பேசிக்கொண்டிருந்த போது, இன்னமும் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படும் அவலம் மறைமுகமாக நடந்து வருவதாக குறிப்பிட்டார். அரசு, கர்ப்பகாலத்தில் கருவிலிருக்கும் குழந்தைகள் ஆணா பெண்ணா என்பதை அறிய சட்டபூர்வ தடை செய்து, அவ்வாறு கருவின் பாலினத்தை வெளிப்படுத்தும் ஸ்கேனிங் மையங்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று அறிவித்திருக்கிறது. ஆனாலும் நகரத்தைத் தாண்டி உட்பகுதியில் உள்ள  மையங்கள் இவற்றை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும் கிராமங்களில் இருந்து வரும் ஏழைக்குடும்பங்கள் தங்களது வறுமையை முன்வைத்து ஸ்கேன் மூலம் குழந்தையின் பாலினத்தை அறிந்து பெண் குழந்தையாயிருந்தால் அதனை கருவிலேயே அழிப்பது நிகழ்கிறது என்றும் கவலைபட்டார். அது எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், அப்போது நான் அதை அவ்வளவு சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் சமீபத்தில் 2011 ம் ஆண்டின் சென்செஸ் கணக்கெடுப்பின் முதற்கட்ட புள்ளிவிவரங்களைப் பார்த்தபோது அந்த ஆபத்து நடந்திருக்குமென்று ஊகிக்கமுடிகிறது. அவர் சொன்ன அந்த பயங்கரத்தின் விளைவு புள்ளிவிவரங்களாக வெளிப்பட்டிருந்தது. தமிழ்நாட்டளவில் 14 மாவட்டங்களில் 2001ம் ஆண்டு இருந்ததை விட ஆறு வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகளின் எண்ணிக்கை இப்போது குறைந்துள்ளது. குறிப்பாக கடலுர், அரியலுர், பெரம்பலுர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் முன்னெப்போதும் விட ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் சராசரியாக 1000க்கு 25 என்ற அளவில் குறைந்துள்ளது.

தமிழ்நாடளவில் மொத்த மக்கள்தொகையின் பாலின விகிதம் 1000ம் ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற நிலையில் இருந்தாலும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அளவில் 1000 ஆண்களுக்கு 946 பெண்கள் என்றுள்ளது கவலைக்குறியது. பெண் சிசுவதை அதிகம் இருப்பதாக கருதப்படும் தர்மபுரி, சேலம், தேனி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரளவுக்கு பெண்குழந்தை விகிதம் கடந்த பத்து ஆண்டுகளில் அதிகரித்திருந்தாலும் அங்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மாநில சராசரிக்கும் குறைவாகவே இருக்கின்றன.

இந்தியாவில் 2001 ம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்சஸ் அறிக்கைப்படி, குழந்தைகள் அளவில் பாலின விகிதம் 927 ஆக இருந்ததது. அது இப்போது 10 புள்ளிகள் குறைந்து இப்போது 917 ஆக பிரதிபளிக்கிறது. இந்த புள்ளிவிவரம், கடந்த 60 ஆண்டுகளாக இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு எடுக்கப்பட்ட எல்லா சென்சஸ் புள்ளிவிவரங்களிலும் பதிவாகிய மிகக்குறைந்த அளவு என்பது மிகவும் வேதனை தரக்கூடிய விஷயம். இதன்மூலம், இந்திய சமூகத்தில் முன்னெப்போதையும் விட இந்த காலகட்டத்தில் பெண்குழந்தைகள் பெரிய ஆபத்தை சந்தித்து வருகிறார்கள் என்றே புரிந்து கொள்ளமுடிகிறது.

இதன்படி, இந்தியாவில் பிறக்கும் 1000 ஆண் குழந்தைகளுக்கு 83 பெண் குழந்தைகள் காணாமல் போகிறார்கள் என்று புரிந்துகொள்ளலாம். ஒரு பெண் குழந்தைக்கு அடிப்படையான பிறப்புக்கான உரிமை மறுக்கப்பட்டுவருவது மிகக்கொடுமையான செய்தி. பொதுவாக இயற்கையின் நியதி படி, 1000 ஆண் குழந்தைகளுக்கு 1036 பெண் குழந்தைகள் பிறப்பதாக அறிவியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளில் அதிகபட்ச பெண்குழந்தை பிறப்பு துத்துக்குடியில் 970ஆகவும் நீலகிரியில் 982ஆகவும் இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் தமிழ்நாட்டில் பெண்குழந்தைக்கான முழுபாதுகாப்பு உறுதிசெய்யப்படவில்லை என்று தெரியவருகிறது.

1997களில் சராசரியாக தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் ஒரு மாதத்துக்கு 160 பெண் குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்று ஓர் ஆய்வறிக்கை சொல்கிறது. தற்போது இந்த விகிதம் குறைந்திருந்தாலும் பெண் சிசுவுக்கு முழுமையான பாதுகாப்பு ஏற்படவில்லை. தற்போதய மருத்துவத்துறை தொழில்நுட்ப ரீதியில் பெரிதும் வளர்ந்திருப்பதால் பெண் குழந்தை பிறந்த பிறகு இறக்கும் விகிதம் குறைந்து, கருவிலேயே அழிக்கும் போக்கு அதிகமாகியிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ஒருவகையில் இதனை வெறும் சமூகப்பிரச்சனை மட்டுமாக எடுத்துக்கொள்ளமுடியாது. பேறுகாலத்தின் நான்காவது மாதத்தில் கருவின் பாலினம் கண்டறியப்பட்டு கருச்சிதைவு நிகழ்த்துதல் தாயின் உயிருக்குக் கூட ஆபத்தாக அமையும் என மருத்துவர்கள் எச்சறிக்கிறார்கள்.

வறுமை மற்றும் சமூக கட்டமைப்புகள் இதற்கு காரணமாக சொல்லப்பட்டாலும் மிக முக்கியமான காரணமாக கருதப்படுவது, விதிமீறலாக நிகழும் செலக்டிவ் அபார்ஷனும் முன்னேற்றப்படவேண்டிய பேறு கால கவனிப்பும் தான். எப்படி பார்த்தாலும் உயிர் கொண்ட ஒரு சிசுவிற்கு தன் வாழ்க்கையை முழுமையாக வாழ சகல உரிமையும் இருக்கிறது. அதனை பாலினக்காரணங்களுகாக கரைப்பது பாவம். இது மூன்று வித உரிமை மீறலாக கருத்தப்படவேண்டும். 1.மனித உரிமை மீறல், 2. குழந்தை உரிமை மீறல், 3. பெண்ணுரிமை மீறல். இந்த நிலைக்கு அரசாங்கமும் பொறுப்பெடுக்கவேண்டும். முதலமைச்சராக, ஜனாதிபதியாக பெண்கள் இருப்பது மட்டும் பாலின சமத்துவத்துக்கான குறியீடாகாது. இந்தியா உலக அளவில் வல்லரசாவது ஒரு பக்கம் இருக்கட்டும், முதலில் நமது பூமியில் பூக்கும் ஒவ்வொறு பெண்குழந்தையும் முழுமையாக, ஆரோக்கியத்துடன் மலரவழி செய்யட்டும்.

இந்திய அளவில் தனிநபர் வருமானம் மிக அதிகம் இருக்கும் மாநிலங்களான பஞ்சாப் (846), ஹரியானா (830) ஆகிய மாநிலங்களில் தான் பெண் குழந்தை பாலின விகிதம் மிகக்குறைவாக இருக்கிறது. அதே போல வளர்ச்சி அடையாத, பிரச்சனைகள் மிகுந்த மாநிலங்களாக கருதப்படும் மிசோரம் (971), மேகாலயா (970) ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் அதிக பாலின விகிதத்தை கொண்ட முதல் இரண்டு மாநிலங்களாக நிலைபெற்றுள்ளன. இந்த புள்ளிவிவரம், வளர்ச்சி என்பது வெறும் ரிசர்வ் வங்கி அச்சடிக்கும் காகிதம் மட்டும் தானா அல்லது சமநிலைச்சமுதாயமா என்ற அடிப்படை கேள்வியை நம்முன் வைக்கிறது.

இதன் தாக்கம் அடுத்த 20 ஆண்டுகளில் தெரியவரும். பாலினம் சமநிலையில் இல்லாத சமூகம் நிச்சயம் நொண்டியடிக்கும். அப்போது நாம் செய்த தவறு தெரியவரும். கலர் டீவி, மிக்ஸியை விட பெண் குழந்தைகள் முக்கியம் என்று உணர ஆரம்பிப்போம்.

குறிப்பு: மேலுமதிக விவரங்களுக்கு: http://www.census.tn.nic.in/whatsnew/ppt_total2011.pdf

டீ பிரேக் 1


[டீ பிரேக் என்பது, ஒரு தொகுப்புப் பதிவு.

எனக்குத் தெரிந்த, படித்த பல சின்னச்சின்ன விஷயங்கள் பற்றி

உங்களுடன் பகிர்ந்து கொள்ள கிடைத்த வாய்ப்பு.

வாரம் ஒருமுறை எழுதலாம் என்றிருக்கிறேன். பார்க்கலாம். ]

 

ஒரு கதை…

புத்தரும் அவருடைய சீடரும் ஒரு ஊரைத் தாண்டி சென்றுகொண்டிருந்தனர். அந்த ஊரில் உள்ளவர்கள் புத்தரை கண்டபடி திட்டிக்கொண்டிருந்தனர். அவரை அசிங்கப்படுத்தினர். ஆனால் புத்தர் எந்த எதிர்வினையும் செய்யாமல் அமைதியாக சென்றுகொண்டிருந்தார். அவருடைய சீடருக்கு இது அடங்காத கோபத்தை ஏற்படுத்தியது. அவர் மக்களை பார்த்து பதிலுக்குத் திட்டினார். புத்தரிடம், ”ஏன் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள், தப்பான மக்களை ஏன் சகித்துக்கொள்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே வந்தான். புத்தர் பதிலேதும் சொல்லாமல், அமைதியாக அந்த சீடனைப்பார்த்து, சிறு புன்முறுவலுடன் தன் உடலில் இருந்த மேல்துண்டை அந்த சீடனுக்கு போர்த்திவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

இப்போது, மேல்துண்டை தன் மீது புத்தர் ஏன் போர்த்தினார் என்ற குழப்பம் சீடனை ஆக்ரமித்தது. அதிலிருந்து புத்தர் என்ன செய்தியைச் சொல்கிறார் என யோசிக்க ஆரம்பித்தான். யோசித்துக்கொண்டே இருந்தான். அன்று இரவு உறக்கம் கூட அவனுக்கு வரவில்லை. நேராக புத்தரிடம் சென்று இது பற்றிக் கேட்டான். புத்தர், “நான் துண்டை உன்மீது போர்த்தியதில் எந்த செய்தியும் இல்லை.

உன்னுடைய மனம், மக்களின் திட்டுகளையும் கேலிகளையும் யோசித்துக்கொண்டிருந்தது, அதிலிருந்து திசைதிருப்ப துண்டினை உன் மேல் போர்த்தினேன். அதற்கு பிறகு நீ மக்களை மறந்துவிட்டு, துண்டினைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தாய்” என்றார்.

 

ஒரு காணொளி

தனிமை எப்பவும் கொடுமையானது. இதைப்பார்த்த பிறகு என் அப்பாவிம் மீதான என் அன்பு இன்னும் அதிகரித்தது.

 

ஒரு செய்தி

யார் இந்த அன்னா ஹசாரே?

முன்னால் ராணுவ வீரர். 1965 இந்திய-பாகிஸ்தான் போரில் பங்கெடுத்தவர், காந்தியவாதி.

என்ன பெரிசா செய்துவிட்டார்?

எல்லா நிலைகளிலும் பின்தங்கியிருந்த ராலேகான் சித்தி (அகமது நகர், மகராஷ்டிரா) கிராமத்தை தனிஆளாக பண்பிலும், பொருளாதாரத்திலும் இந்தியாவின் முன்னோடி கிராமமாக மாற்றிக்காட்டியவர்.

அதனால என்ன?

இப்போது, இந்த கிராமம் முழுமையான சுயசார்புத் தன்மையுடையதாக, மத்திய மாநில அரசின் உதவியில்லையென்றாலும் தன்தேவையை பூர்த்திசெய்துகொள்ளும் வகையில் மாறியுள்ளது. கிராமத்துக்கான மின்சக்தி கிராமத்திலேயே சூரிய, உயிர்ம, காற்று சக்திகளால் உற்பத்திசெய்யப்படுகிறது. 1975ல் வறுமைக்கோட்டுக்கு கீழிருந்த இந்த கிராமம் இப்போது, இந்தியாவின் பொருளாதார வளமிக்க கிராமமாக மாறியுள்ளது.

இதெல்லாம் சரி, இவரோட வாழ்க்கை, வசதிகள் பற்றி…

இந்த மாற்றத்துக்கு காரணமான இவர் தன்னுடைய வாழ்நாள் சேவைக்காக பத்ம பூஷன் விருது பெற்றுள்ளார். இன்றைக்கும், அந்த கிராமத்தில் உள்ள கோவிலுக்கு அருகே 10க்கு 10 இடவசதி கொண்ட ஒரு சிறு அறையில் தான் வாழ்ந்துவருகிறார்.

இப்ப எதுக்காக உண்ணாவிரதம் இருக்கார்?

நாட்டில் புரையோடிப்போயுள்ள ஊழலை ஒழிக்க சரியான சட்டக்கருவியை (ஜன லோக்பால் சட்டம்) ஏற்படுத்த போராடிக்கொண்டிருக்கிறார்

இந்த சட்டம் புதியதான ஒன்றா?

இல்லை. 1972லேயே அப்போதய சட்ட அமைச்சர் திரு.சாந்தி பூசனால் கொண்டுவர பரிசீலிக்கப்பட்டது. ஆனா, நமது மாண்புமிகுக்களும் உயர் அதிகாரிகளும் 40 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு பொதுசொத்தை ஆட்டையை போட்டு வருகின்றனர்

இவர் உண்ணாவிரதத்தின் மூலம் குறுகிய காலத்தில் இதை சட்டமாக்க அரசை நிர்பந்திப்பது சரியா?

இப்போதைக்கு அரசிடம் இவர் கேட்டுக்கொள்வது, இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்ற அறிக்கை வாயிலான உறுதிமொழியைத் தான். அடுத்து, இந்த சட்டவரைவை மேற்கொள்ள 50% அரசு அதிகாரிகளும் 50% மக்கள் அமைப்புப் பிரதிநிதிகளும் அடங்கிய ஒரு குழு அமைக்கப்படவேண்டும் என்பது.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் என்ன நிகழும்?

இதன் மூலம் தேர்தல் ஆணையம் போன்ற சுதந்திரத்தன்மையுடன் இயங்கும் மத்தியில் லோக்பால், மாநிலங்களில் லோக்அயுக்தா அமைப்புகள் ஏற்படுத்தப்படும். ஊழல் குற்றம் சாட்டப்படுபவர் எவ்வளவு பெரிய அதிகாரியாகவோ, எவ்வளவு பெரிய அரசியல்வாதியாகவோ இருந்தாலும் 1 வருடத்துக்குள் விசாரிக்கப்பட்டு 2 வருடங்களுக்குள் தீர்ப்பும் தண்டனையும் வழங்க சட்டபூர்வ வழி ஏற்படும்.

இந்த சட்டத்தால் மட்டுமே இந்தியா ஊழலற்ற தேசமாகிவிடுமா?

தகவல் பெறும் உரிமை சட்டம் போல இந்த சட்டமும் வெளிப்படையான நிர்வாகத்தை உண்டாக்க உதவும் ஒரு கருவி மட்டுமே. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் கண்டிப்பாக இப்போதைக்கு இருக்கும் ஊழல் விசாரணை முறைகள் இன்னும் மேம்படும். இதில் சந்தேகமே இல்லை.

அன்னா ஹசாரே மட்டுமே இதற்காக போராடுகிறாரா?

அவருடன் இப்போது, சமூக ஆர்வலர்களான பாபா ஆம்தே, சுவாமி அக்னிவேஷ், அர்விந் கெஜ்ரிவால், கிரண்பேடி போன்றவர்களும் இணைந்திருக்கிறார்கள். இன்னும் பல நல்ல உள்ளங்கள் இணைந்து போரட வந்துகொண்டிருக்கின்றன.

சரி, நான் என்ன செய்யமுடியும்?

இந்த விஷயத்தைப் பற்றி, நம் நண்பர்கள், உறவினர் வட்டத்தில் பேசலாம். இந்த செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். விருப்பமும் வாய்ப்பும் இருந்தால், நமது பகுதியில் இது பற்றிய விழிப்புணர்வை பிரசாரத்தை மேற்கொள்ளலாம். எதுவும் முடியாதென்றால், அன்னா ஹசாரேவின் உடல் நலம் மேம்பட பிரார்த்தனையாவது செய்யலாம்.

ஓ போடு…


ஓட்டுப் போடு; பிடிக்கலைன்னா 49-ஓ போடு..

(கார்டூன்:http://onegirlathousandwords.wordpress.com/)

போனமாதம், ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம். அதையொட்டி, எங்க ஊரில் நிறைய பேனர்கள் ரோட்டரி க்ளப் மூலமாக வைத்திருந்தனர். அவை எல்லாம் வாக்காளர்கள் தேர்தல்களில் வாக்களிப்பது கடமை என வலியுத்தியது. எல்லா சுவரொட்டிகளிலும் எங்கள் மாவட்ட ஆட்சியர், வாக்காளர்கள் நேர்மையாகவும் தவறாமலும் வாக்களிப்பதை வலியுருத்தினார். இதைப்பார்த்த என்னுடைய நண்பன் “வாக்காளர்களை காசு வாங்காம ஓட்டுப்போடச் சொல்வதற்கு முன் தப்பே செய்யாத நல்ல வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தச்சொல்லனும்” என்று அலுத்துக்கொண்டான். இன்று அரசியல் என்பது பணம் கொழிக்கும் வியாபாரமாக போய்விட்டதையும் அந்த ஊழல் நீரோட்டத்தில் சமீபகாலமாக வாக்காளர்களையும் கலக்கச்செய்யும் பழக்கமும் ஞாபகத்துக்கு வந்தது.

உலக அளவில் எல்லா நாடுகளும் இந்தியாவைப் பார்த்து வியப்பதற்கு அடிப்படை காரணம் நம்முடைய மக்களாட்சித் தன்மையில் பரப்பும் வீச்சும் தான். இந்தியாவில் மட்டும் தான் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் முதல் குடியரசுத் தலைவர் வரை 32 இலட்சத்துக்கும் மேற்பட்ட பதவிகள் வாக்காளர்களின் வோட்டுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படப்படுகிறது. இந்தத் தன்மையே நமது தேர்தல் முறையை மிக வலிமையானதாகவும் அதேசமயத்தில் சிக்கலானதாகவும் ஆக்கியுள்ளது.

நமது தேசத்தை ஜனநாயக தேசம் என்று சொல்வதற்கு இருக்கும் ஒரே காரணம், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நமது ஆட்சியாளர்களை நாம் மத்தியிலும் மாநிலத்திலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறோம் என்பது தான். இதோ, இப்போது நமது மாநிலத்திலும் தேர்தல் காலம் ஆரம்பித்துவிட்டது. கூட்டணி பேரங்கள் சீரும்சிறப்புமாக களைகட்டிவிட்டது. வரும் மே மாதம் சட்டசபை தேர்தல், ஜீன் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் என அடுத்த 4 மாதங்களில் இரண்டு முக்கிய தேர்தல்கள் நடைபெறவுள்ள இந்த காலக்கட்டத்தில் நேர்மையான தேர்தல் பற்றிய விவாதத்தை முன்னெடுத்துச் செல்வது அவசியமெனப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட இன்னும் நமது தேர்தல்களில் 100% வாக்கெடுப்பை உறுதிசெய்யமுடியவில்லை. எந்தத் தேர்தலிலும் சராசரியாக 70% சதவிகித வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கிறார்கள். அதில் 20% வாக்கு பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. அதாவது, மொத்த வாக்காளர்களில் 30%க்கும் குறைவான பெரும்பான்மை பெற்றவர் கையில் நம் நாட்டின் அடுத்த 5 ஆண்டையும் நமது வாழ்க்கையின் தலைவிதியையும் கொடுக்கிறோம். சாதாரண காய்கறிக்கடையில் கூட நாம் உண்ணும் காய்கறிகளை கீறிப்பார்த்து, முறுக்கிப்பார்த்து, உடைத்துப்பார்த்து, தட்டிப்பார்த்து, முடிந்த அளவுக்கு பேரம் பேசி வாங்கும் நாம், நாட்டின் போக்கினை தீர்மானிக்கும் வாக்குக்கு எந்த முயற்சியும் எடுக்காமல் உதாசினப்படுத்துகிறோம் அல்லது போகிறபோக்கில் எதோ ஒரு கட்சிக்கு ஓட்டளித்துவிட்டு நாடு கெட்டுப்போச்சு, ஊழல் ஊறிப்போச்சு என்று அங்கலாய்க்கிறோம்.

100% வாக்கினை உறுதி செய்யமுடியாததற்கு அரசு மற்றும் மக்கள் ஆகிய இருவரிடமும் தவறுகள் இருக்கின்றன. சோம்பேறித் தனத்தாலும் வாழ்வாதாரத்துக்காக வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்ததாலும் மக்களில் குறிப்பிடத்தகுந்த சதவீதத்தினர் தமது வாக்குரிமையை பயன்படுத்துவதில்லை. சமீபகாலங்களில் வாக்காளர்கள் தமது, விலைமதிக்கமுடியாத வாக்குரிமையை பணத்துக்காகவும் சலுகைகளுக்காகவும் விற்றுவரும் போக்கும் அதிகரித்துவருகிறது. இவை இரண்டுமே நமது ஜனநாயகத்தின் மீதிருக்கும் கரும்புள்ளிகளாகும். வாக்குரிமையில் அரசின் தவறுகளெனப் பார்த்தால் மூன்று விஷயங்கள் முக்கியமானவை. 1.வாக்காளர் பட்டியல் முழுமையானதாக, சரியானதாக எப்போதுமே இருந்ததில்லை. எல்லா சமயங்களிலும் இறந்தவர் பெயர் நீக்கப்படாமல் இருப்பது, ஒரு நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருப்பது, வாக்களிக்கும் வயதினை அடைந்திருந்தாலும் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் முக்கியமானவை. 2.வாக்களிக்கும் நடைமுறை வாக்காளருடைய கடமை என்று வலியுருத்தப்பட்டாலும் அதனை சட்டப்பூர்வ கட்டாயமாக்காமல் இருப்பதால் சோம்பல்தனத்தால் வாக்களிக்க விருப்பாதவர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்தவகையில் இருந்து வருகிறது. 3.மிக முக்கியமாக போட்டியிடும் வேட்பாளர்களில் யாருமே சரியான நபர்களாக இல்லை என்று வாக்காளர் கருதும் பட்சத்தில் அவர் நடுநிலை அல்லது எதிர் வாக்கினை பதிவு செய்யும் நடைமுறை இல்லாதிருப்பது இந்தியத் தேர்தல் முறையின் மிகப் பெரிய பலவீனமாக கருதப்படுகிறது.

“நிற்கின்ற வேட்பாளர்கள் எல்லாருமே தப்பானவர்கள் இவர்களுக்கு ஓட்டளிப்பதை விட, வீட்டில் உட்கார்ந்து டீவியில் தேர்தல்கால சிறப்பு நிகழ்ச்சிகளை பார்கலாம்” என்று தேர்தல் சமயத்தில் ஓட்டளிக்காத மக்கள் நிறையபேர் சொல்வார்கள். யோசித்துப்பார்த்தால் அது உண்மையாகத் தான் உள்ளது. எடுத்துக்காட்டாக, எங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருமே ஊழல் பேர்வழிகளாக இருக்கும் பட்சத்தில், அவர்களில் யார் குறைந்த ஊழல் செய்பவரோ அவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு தான் எனக்குள்ளதே தவிர, அவர்கள் அனைவரையும் நிராகரிக்கும் வாக்கினை பதிவு செய்யும் உரிமை எனக்கு தரப்படவில்லை. இந்த வாய்ப்பு நேர்மையான, நம்பகத்தன்மையுள்ள மக்களாட்சியை நிறுவுவதற்கு மிகவும் அவசியமானதாகும். சரியான நபரை தேர்தலில் நிறுத்தவில்லையென்றால் மக்கள் நிராகரிப்பார்கள் என்ற எண்ணம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டால் அவர்கள் மக்களின் ஓட்டினை பெறுவதற்கு சரியான நபர்களை தேர்தலில் நிறுத்தமுற்படுவார்கள். அதன் மூலம் ஒட்டுமொத்த ஜனநாயகத் தலைமைத்துவமும் அரசியல் முறைமையும் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் தற்போதிருக்கும் தேர்தல் நடைமுறையில் மறைமுகமாக இந்த நடுநிலை ஓட்டு தரப்பட்டுள்ளது. இந்திய அரசின் தேர்தல் நடத்தை விதிகள் 1961ன் 49-O விதிமுறையானது, ஒரு வாக்காளர் தமது வாக்கினை எந்த வேட்பாளருக்கும் பதிவு செய்யாமல் வாக்கெடுப்பில் பங்கெடுக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. துரதிருஷ்ட வசமாக இந்த விதிமுறைப் பற்றிய விழிப்புணர்வு வாக்காளர்களிடையே மிகக் குறைவாகவே உள்ளது. இந்த நடைமுறையின் படி, வாக்காளர் தம்முடைய அடையாள அட்டையை உறுதி செய்துகொண்ட பின்னர் வாக்களிக்க செல்வதற்கு முன், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாம் 49 ஓ விதிப்படி எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறவேண்டும். அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தும் அதிகாரி, இதற்கென தரப்பட்டுள்ள 17 A படிவத்தில் வாக்காளர் பெயர், முகவரி எழுதி வாக்காளருடைய கையொப்பம் அல்லது இடதுகை பெருவிரல் அச்சினை பெற்றுக்கொள்வார். இந்த முறையில், வாக்காளரானவர் தேர்தலில் பங்கெடுத்தது உறுதிசெய்யப்படும் அதே நேரத்தில் வாக்காளரின் விருப்பப்படி அவரது ஓட்டு எந்த வேட்பாளருக்கும் கிடைக்கப்படமாட்டது.

எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்த வேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் 49 ஓவின் கீழ் நம்முடைய ஓட்டைப் பதிவு செய்தால் நமது அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது. ஒருவேளை ஒரு குறிப்பிட்ட தொகுதியில் பதிவாகும் மொத்த ஓட்டுகளில் அதிகபட்ச ஓட்டுகள் 49ஓவின் கீழ் பதிவுசெய்யப்பட்டிருந்தால் அந்த தொகுதிக்கு மறு தேர்தல் நிகழ்த்தவும் வாய்ப்புள்ளது.

அதேநேரத்தில், அரசியல் சட்டப்படி நாம் தெரிவிக்கும் வாக்கு ரகசியமானது, யாருக்கும் தெரியவராது என்பது வாக்காளருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால் துரதிருஷ்டவசமாக 49 ஓவை ரகசியமாகப் பதிவு செய்யமுடியாமல் பொதுவில் தெரிவிக்கும் வகையில் வைத்திருப்பது வாக்காளருக்கு அளிக்கப்பட்டுள்ள இரகசியத்தன்மையையே கேலிக்குறியதாக ஆக்கிவிடுகிறது. அடிப்படையில் இந்த முறையானது சட்டப்படி தவறாகும். இதையும் ரகசிய வாக்காக அளிக்கும் விதத்தில் மின் வாக்கு இயந்திரத்தில் 49 ஓவுக்கு ஒரு தனி பொத்தானை வரும் தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி வாக்காளர்களின் நம்பகத்தன்மையையும் மக்களாட்சியின் உண்மையான மாண்பையும் உறுதிசெய்ய வேண்டும்.

தன்னார்வ அமைப்புகள், இணையதள பதிவர்கள், ஊடகங்கள் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவேண்டும். மின் வாக்கு எந்திரத்திலேயே 49 ஓவுக்கான பொத்தானை வைக்க வலியுருத்தும் அதே நேரத்தில், சுவரொட்டிகள் மூலமாகவும் விழிப்புணர்வு முகாம்கள் மூலமாகவும் மக்களிடையே இது போன்ற வாய்ப்பிருப்பது பிரபலப்படுத்தவேண்டும். அப்போது தான் ‘இனி நேர்மையான அரசியல், நல்ல வேட்பாளர்கள் இல்லாவிட்டால் மக்கள் ஆதரவு கிடைக்காது’ என்ற செய்தி அரசியல்வாதிகளின் பொட்டில் உறைக்கும். பூனைக்கு கட்டவேண்டிய மணி நம் கையில் உள்ளது. எப்போது கட்ட ஆரம்பிப்போம்?

குறிப்பு: பதிவர்கள் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தைப்பற்றியும் இந்த 49 O விதிமுறைப் பற்றியும் ஒரு பதிவாவது எழுதி, ஜனநாயகத்தை வலுப்படுத்துங்களேன்.

ச்சே…


வழக்கமான பயணத்தில் ஒருமுறை கல்லுரி மாணவன் ஒருவரை சந்தித்தேன். அவர் போட்டிருந்த டீசட்டை எனது கவனத்தை கவர்ந்த்து. டீசட்டையில் சே-குவேரா. என்னுடைய ஆதர்சம். உற்சாகமாகி, “தம்பி உன்னுடைய சட்டையில் இருப்பவர் யாரென்று தெரியுமா” என்று கேட்டேன். அவர், “யா… அமேரிக்காவின் பிரபல பாப் பாடகர், பேரு… இருங்க சொல்றேன்” என்று ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தான். என் தலையில் இடியே விழுந்தது. இன்றைய இளைஞர்களின் சிக்கலே இதுதான். அவர்களுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. தவறாக தெரிந்துகொள்வதும், அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதும் விரக்தியை தருகிறது. நான், “நீங்க சொல்ற அந்த பாப்பாடகர் பேரு சே-குவேரா, டைம் கிடைக்கறப்போ கூகிள்ல தேடிப்பாருங்க” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

நேற்று அவருடைய 83வது பிறந்த நாள். சாதாரண மருத்துவரை சமூகம் போராளியாக்கிய சரித்திரம் அவர். அவரைப் பற்றி சில நாட்களுக்கு முன் நண்பர், சகபதிவர் வினாயகம் முருகன், “ஒரு பயணம் – இரண்டு நண்பர்கள்” என்ற தலைப்பில் (http://nvmonline.blogspot.com/2010/06/blog-post_11.html) பதிவெழுதினார். ரசித்துப் படித்தேன். அதேபோல் நண்பர் செந்திலுடைய முகப்புப் படம் சே வைத் தாங்கியிருக்கும். பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சியாய் இருக்கும். அவரைப் பற்றி நேற்று அவரது பிறந்தநாளின் போது எதாவது எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால், சகபதிவர்கள் யாராவது என்னைவிட விரிவாகவும் ஆழமாகவும் எழுதுவார்கள், படித்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். எனக்கு தெரிந்து யாரும் எழுதியதாக தெரியவில்லை.

சே என்றால் தோழர் என்று பொருள்.  எளிமையானவர்கள் எல்லாருக்கும் நண்பனாக விளங்கியவர். கம்யூனிச தோழர்களின் கடவுள். அவரது ஆண்மையான உடல்மொழியும் அலட்சியமான பார்வையும் பிரம்மிப்பானது. வழக்கம் போல நாம் அவரது கொள்கைகளை மறந்து விட்டு, அவரின் படத்தை மட்டும் சந்தைப்படுத்தி வருகிறோம். (இப்போ, அமெரிக்காவில் கூட இவரது படம் போட்ட பொருட்கள் நல்லா விக்குதாம்)

சே வை நினைக்கும் போதெல்லாம் எனக்கு பகத்சிங் நினைவுக்கு வரும். பகத், சேவுக்கு கொஞ்சம் மூத்தவர். அவர் கொல்லப்படாமல் இருந்தால் சேவுடைய காலத்தில் வாழ்ந்திருப்பார். ஒரு வேளை, சே, இந்தியாவுக்கு வந்திருக்கலாம். ஒருவேளை நடந்திருந்தால் நமது இந்தியாவின் வரலாறு மாறியிருக்கும். ஆனால் வரலாற்றின் எல்லாச்சுவடுகளிலும் இது போன்ற மாவீரர்கள் தாம் கொண்ட கொள்கைக்காக, அராஜகத்துக்கு எதிராக போராடி கருணையில்லாமல் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

“என்னுடைய துப்பாக்கியை வேரொறுவர் எடுத்து அநீதிக்கு எதிராக போராடுவார்கள் என்றால் நான் கொல்லப்படுவதை பற்றி கவனம் செலுத்தமாட்டேன்” சே சொன்ன வார்த்தைகளுக்கு இன்றும் உயிர் இருக்கத் தான் செய்கிறது.

சல்யூட் டூ சே…

நம்ம ஊர் – 25


  1. கோயிலுக்கு ஒரு டியூப் லைட்ட தானமாக் கொடுத்தாக் கூட டியூப் லைட்டோட பாதி இடத்தில் நம்ம குலம் கோத்திரத்தை பதிக்கிற இனம்.
  2. காய்கறி கடையில 10 ரூபாய்க்கு 2 ரூபாய் குறைக்கச் சொல்லி பேரம் பேசுவோம். மெக்டொனால்ட்ல கொடுத்த பில்லுக்கு மேல 10 ரூபாய் டிப்ஸ் வைப்போம்.
  3. கார் லோன் வட்டி 5%க்கும் கல்விக்கான லோன் வட்டி 12%க்கும் கிடைக்கும்.
  4. ஓசியில சோப்பு டப்பா குடுக்கறாங்கன்னா, தேவையே இல்லைன்னா கூட ஆயிரக்கணக்கில் செலவு பண்ணுவாங்க.
  5. சாப்பிடுற அரிசி கிலோ 40ரூபாய்க்கும் பேசர  செல்போன் சிம் இலவசமாகவும் கிடைக்கும்.
  6. தமிழன் தமிழ்ன்னு வாய்கிழிய பேசினாலும் நார்த், சவுத், ஈஸ்ட் வெஸ்ட் என எல்லா திசையிலும் தமிழன ரவுண்டு கட்டி அடிச்சாலும் ஸ்டடியா இருக்கறவங்க.
  7. சச்சினும் தீபிகா படுகோனும் விளம்பரத்துல வந்து பினாயிலை வாங்கிக் குடிக்கச் சொன்னாக்கூட அதுக்கும் தயாரா இருப்போம்.
  8. நம்ம நிலத்துல விளையற வெளிய விளைச்சலை வித்துட்டு கடைக்கு போய் அரிசி வாங்கி சாப்பிடுற ஜென்மம்.
  9. கால்ல மாட்டுற செருப்பை AC ஷோரூமில் விப்பாங்க. சாப்பிடுற காய்கறிகளை தெருவோரத்தில் விப்பாங்க.
  10. 50 ரூபா சினிமா டிக்கட்ட பிளாக்ல 100ரூபாய்க்கு வாங்கி ஊழலை ஒழிக்கப் போறாடும் கதாநாயகன் கதைக்கு விசிலடிக்கும் ரசனைக்காரர்கள்.
  11. ஆர்டர் பண்ணா பிஸ்ஸா, ஆம்புலன்ஸ் போலிஸை விட சீக்கிரமா வந்து சேறும்.
  12. செயற்கை வாசம் உள்ள லெமன் குளிர்பானத்தை குடித்து, இயற்கையான லெமன் சாற்றை சாமான்கள் துலக்கப் பயன்படுத்துவார்கள்.
  13. எங்க ஊரு கவர்ன்மெண்ட் ஸ்கூல் வாத்தியார்கள் அவங்களோட பசங்களை மட்டும் பிரைவேட் ஸ்கூலில் படிக்க வைப்பாரு.
  14. பள்ளிக்கூடம், மருத்துவமனைகளை தனியார் நடத்த, அரசாங்கம் சாராய கடை நடத்தும்.
  15. கவிதை படிக்கறவங்களை விட கவிதை எழுதுறவங்க அதிகமா இருப்பாங்க.
  16. தேர்தல் சமயத்துல ஓட்டுக்கு துட்டு கொடுத்து பல 100 கோடிகள் செலவு பண்ணி மக்கள் சேவைக்காக மட்டுமே ஆட்சி பிடிக்கும் புண்ணியவான்கள் இருக்கும் தேசம்.
  17. ஒரு லிட்டர் கோக், பெப்ஸி, ஒரு லிட்டர் பாலைவிட அதிகமான விலைக்கு விக்கும்.
  18. புது பேண்ட் 300 ரூபான்னா, அங்கங்க கிழிச்சு விக்கற ஜீன்ஸ் பேண்ட் 1000 ரூபா.
  19. இங்கிலிஷ் பேசத் தெரிந்தா அறிவுஜீவி, இந்தி பேசத் தெரிந்தா தமிழ் துரோகி.
  20. 100 ரூபா லஞ்சம் வாங்கினா புழல், 100 கோடி ஊழல் பண்ணா குஜால்.
  21. மின்சாரத் தடையை அதிகாரி அறிவிப்பார். தடை நீக்கத்தை அமைச்சர் அறிவிப்பார்.
  22. உடலும் மனமும் ஒத்துழைக்காதுன்னு பியூனுக்குக் கூட 60 வயசுல பணி ஓய்வு கொடுத்துடுவாங்க. 60 வயசுக்கு மேல இருக்கறவங்க அமைச்சரா நம்மை ஆளுவாங்க.
  23. இந்திய கிரிக்கட் டீம், சர்வதேச போட்டிகளில் நாயடி வாங்கி டப்பா கிழிஞ்சாலும் அடுத்த ஐ.பி.எல் வந்தா சாமி கும்பிட்டு டீவி முன்னாடி சரண்டர் ஆகிடுவாங்க
  24. தெருக்குழாய் உடஞ்சிருந்தா 100 ரூபாய் செலவு பண்ணி பஞ்சாயத்து தலைவரையோ, கார்பரேஷனையோ திட்டி கம்ப்ளெய்ட் பண்ணுவாங்க. இன்டர்நெட்டுக்குப் போய் பிளாக் எழுதுவாங்க. 40 ரூபாய் செலவு செஞ்சு அதை சரிபண்ணயிருக்க மாட்டாங்க.  
  25. டீக்கடை பேப்பரில் குழந்தை தொழிலாளர் பற்றி படித்து, “குழந்தை தொழிலாளர்களை வேலை வாங்குபவர்களை நடுத்தெருவில் உதைக்கவேண்டும்” என்று பேசிக்கொண்டே “டேய் சின்னப்பையா, ரெண்டு டீ கொடுடா” ன்னு ஆர்டர் செய்வாங்க.

பெண்கள் இடஒதுக்கீடு: வரமா., சாபமா?


கொஞ்ச நாளைக்கு முன் ஜனதா கட்சியைச் சேர்ந்த சரத்யாதவ் பாரளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு குறித்த விவாதத்தின் போது, “இப்போதிருக்கும் இதே நிலையில் இந்த சட்டத்தை நிறைவேற்ற இந்த அரசு முயற்சிக்குமானால் அதனை முறியடிக்கும் பெரும்பான்மை எங்களுக்கு இல்லையென்றாலும் நான் இதே பாரளுமன்றத்தில், இந்த சட்டத்தை எதிர்த்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்வேன்” என்றார். இதைப் படித்தவுடன் எனக்கு நாட்டின் ஆணாதிக்க மனோபாவம், அதன் போக்கு பற்றிய அடங்காக்கோபம் ஏற்பட்டது.

பிறகு தொடர்ச்சியாக இந்த விஷயத்தை ஆழ்ந்து கவனித்தபோது பெண்கள் இடஒதுக்கீடு பற்றிய மறுபக்கம் எனக்கு புரியவந்தது. பாராளுமன்றத்தில் 13 வருடங்களாக இடஒதுக்கீடு மசோதா முன்வைக்கப்பட்டாலும் இப்போது தான் அதை நிறைவேற்றும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதனை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டாடி வருகிறது. உண்மையில் இச்சட்டத்தை எதிர்த்த லாலு, முலாயம், மாயாவதி, சரத்யாதவ் போன்றவர்கள் வைத்த, பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கான உள்ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையில் ஞாயம் இல்லாமல் இல்லை. அது சில மறைமுக காரணங்களுக்காக, இம்மசோதாவை எதிர்க்கவேண்டும் என்ற காரணத்துக்காக கையாண்ட தந்திரம் எனக்கொண்டாலும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு அவசியம் என்பதை மறுப்பதிற்கில்லை.

இன்றைய சூழலில் எந்தவிதமான பெண்கள் அரசியலுக்கு வருகிறார்கள்?

1.அரசியல் குடும்பத்தை சேர்ந்த தலைவரின் மனைவி (சோனியாகாந்தி), தலைவரின் வாரிசுகள் (கனிமொழி)

2.மாஜி நடிகைகள் (ஜெயலலிதா, ஜெயப்பிதா, விஜயசாந்தி,மற்றும் பலர்)

3.மேட்டுக்குடி ஜமீன் குடும்பத்தினர் (கீதா ஜீவன், வசுந்தரா, பிரதிபா பாட்டில்)

இந்த 3 வகையிலிருக்கும் பெண்களின் வாழ்க்கை முறையும், கள்ளிக்காட்டிலும் அடுப்பறையிலும் ஓயாமல் வேலைசெய்து பல சிக்கல்களுடன் வாழ்க்கையை நடத்திச்செல்லும் சராசரி இந்திய குடும்பப்பெண்ணின் வாழ்க்கை முறையும் ஒன்றா? மம்தாபானர்ஜி, மாயவதி போன்ற பெண் தலைவர்கள் அடித்தளத்திலிருந்து மேலுக்கு வந்திருந்தாலும் அவர்களின் அரசியல் தந்திரங்கள் எல்லா உள்லடி வித்தைகளையும் உள்ளடக்கியுள்ளது. அதனால் அவர்களை சாதாரண இந்தியப்பெண்ணின் படிமமாக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

உண்மையில் இடஒதுக்கீட்டின் அடிப்படைத்தத்துவம் பின்தங்கிய, பிரச்சனையை நிதம் சந்திக்கின்ற சமுகம் அதிகாரத்துக்கு வருதலும் அதன் வாயிலாக அவர்களின் தேவைகளை தேசிய அளவில் கொண்டுசெல்வதும் ஆகும். இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்த இடஒதுக்கீட்டால் எந்தவித அதிகாரப் பின்புலமும் கவர்ச்சியும் இல்லாத சாதாரண இந்தியப் பெண் அதிகாரம் பெறமுடியுமா?

கடந்த 10 ஆண்டுகளாக உள்ஒதுக்கீடு வேண்டும் என்ற இதே காரணத்தை காட்டித்தான் இச்சட்டத்தை நிறைவேற்றாமல் இருந்தனர். இப்போதும் அவசரம் அவசரமாக முதலாளித்துவ நெருக்கடிகளுக்கிடையில் இச்சட்டம் உள்ஒதுக்கீடு இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது காங்கிரஸின் ஆதிக்க மனோபாவ வெளிப்பாடு.

சட்டத்தில் ஒரே ஒரு வரியை சேர்க்க மறுத்து அடம்பிடித்து உள்ஒதுக்கீடு இல்லாமல் நிறைவேற்றிய காங்கிரஸின் போலி ஜனநாயகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இனி உலக மாநாடுகளில், தேர்தல் சமயங்களில் நாங்கள் ஒரு பெண்ணை ஜனாதிபதி ஆக்கியுள்ளோம், ஒரு பெண்ணை மக்களவை சபாநாயகர் ஆக்கியுள்ளோம், பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்துள்ளோம் என்று பெருமை பேசும். ஆனால் அவர்கள் குறிப்பிடும் பெண்கள், வீட்டிலும் சமுகத்திலும் பலவித அடக்குமுறைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் உள்ளாகும் சராசரி இந்தியப் பெண்களின் பிரதிகள் இல்லை என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்?

இச்சட்டம் பற்றி தமக்காக பாராட்டு விழாக்களுக்கிடையில் கருணாநிதி, “முதலில் சட்டம் நிறைவேறட்டும் பிறகு இடஒதுக்கீடு பற்றி யோசிக்கலாம். கருத்து வேறுபாடு வரும்போது பெரும்பான்மையோர் கருத்து எதுவோ அதனை சார்ந்திருப்பதே நல்ல மக்களாட்சி” என்று பச்சோந்தித்தனமான விளக்கத்தை படித்தபோது, அவர் ஓய்வு பெறப்போகிறாறோ இல்லையோ அவரது சிந்தனை எப்போதோ ஓய்வு பெற்றுவிட்டது என்று தான் எண்ணத் தோன்றியது.

அதிகார வர்க பெண்கள் ஆட்சிக்கு வந்தபின் தமக்கு ஆப்பு வைத்துக்கொள்ளும் வகையில் உள்ஒதுக்கீடுக்கு நிச்சயம் ஆதரவளிக்கமாட்டார்கள். அதேபோல் பெரும்பான்மை கருத்தைச் சார்ந்து இயங்குவது தான் மக்களாட்சி என்றால், சமீபத்தில் இலங்கைப் பிரச்சனையில் பெரும்பான்மை தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராக இயங்கிய கருணாநிதியை என்ன செய்ய?

பஞ்சாயத்து அமைப்புகளில் 10 வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கான இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு விட்டது. தற்போதய நடப்பு பாராளுமன்றக் கூட்டத்தில் பஞ்சாயத்து அமைப்புகளின் 33 சதவீத இடஒதுக்கீட்டை 50 அதிகரிக்கச்செய்யும் மசோதா வைக்கப்பட்டுள்ளது. ஒரு வகையில் பஞ்சாயத்து அமைப்புகளின் இடஒதுக்கீடு பாராட்டத்தக்கது. அதன் முதல் வடிவத்திலேயே உள்ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினர் உரிமையுடன் அதிகாரம் பெற வாய்ப்பேற்பட்டுள்ளது. அதேசமயத்தில்10 ஆண்டுகளுக்குப் பிறகும் பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்கள் சுதந்திரத்துடன் செயல்படுகிறார்களா என்று பார்த்தோமானால் வேதனை தான் மிஞ்சும். 99% இடங்களில் பொறுப்பிலிருக்கும் பெண்களின் பினாமியாக அவர்களது கணவன்களோ நெருங்கிய உறவினர்களோ தான் செயல்பட்டு வருகின்றனர்.

கட்சிக்கோ நாட்டுக்கோ என்ன சாதனை செய்து மதுரை மாநகர மேயராக தேன்மொழி தேர்ந்தெடுக்கப்பட்டார்? அவரது கணவர் கோபிநாதன் அதிகாரமையத்துக்கு விசுவாசமாக இருப்பார் என்ற ஒரே அளவுகோலில் தானே அவரது மனைவி ஆட்சிக்கு வந்தார்? இதே போல் சென்ற ஆட்சியின் போது ஊராட்சி தலைவர்களாக இருந்து மிகச்சிறந்த முன்னுதாரணப் பணிகளைச் செய்துவந்த நாலுகோட்டை ஊராட்சி, ஓடந்துறை ஊராட்சி, குத்தம்பாக்கம் ஊராட்சி ஆண் தலைவர்கள் இம்முறை அவ்வூராட்சிகள் பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு மாற்றப்பட்டதால் அவர்களின் மனைவியையோ நெருங்கிய பெண் உறவினரையோ தலைவர் பதவியில் பெயருக்கு அமர்த்தி, தாமே செயல்பட்டு வருவது என்ன ஜனநாயக முறை?

ஆக 10 ஆண்டுகளுக்குப் பிறகும் சட்டப்பூர்வ உள்ஒதுக்கீடு அளிக்கப்பட்டபிறகும் அதிக அதிகாரமும் பணப்புழக்கமும் இல்லாத பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களின் ஒதுக்கீடு எதையும் பெரிதாக சாதிக்காத நிலையில், அரைவேக்காட்டுத்தனமாக பெண் அரசியல் வாரிசுகளும் மாஜி நடிகைகளும் அம்பானி, பிர்லா குடும்ப பெண்களும் இன்னும் வலிமையுடன் சட்டசபைக்கும் பாராளுமன்றத்துக்கும் செல்லவதற்கு வழிவகுக்கும் இந்த பெண்கள் இடஒதுக்கீட்டால் சாதாரண பெண்கள் பூரிப்படைவதற்கு எந்த காரணமும் இல்லை என்றேபடுகிறது.

எது எப்படியோ இந்த புதிய சட்டத்தால் மார்கெட் போன நடிகைகளுக்கும் அமைச்சர்களின் வாரிசுகள், பேத்திகளுக்கும் பெரிய டிமாண்ட் ஏற்படும். தோரயமாக 800 இடங்கள் உள்ள பாராளுமன்றத்தில் 250 பெண்கள் பொறுப்பேற்பதால், பாரளுமன்றத்தில் விடுப்பு எடுக்கும் ஆண் உறுப்பினர் எண்ணிக்கை குறையும். சட்டசபைகள் வண்ணமயமாக இருப்பதால் நேரடி ஒளிபரப்புக்கு தனியார் தொலைக்காட்சிகள் போட்டிப் போடும். வருங்காலத்தில் “மானாட மயிலாட” போன்ற நிகழ்ச்சிகள் கூட சட்டசபைகளில் நடத்தப்படலாம்.

வாழ்க பெண்ணியம்!

பெருங்கனவின் சிறு துளி…


காலத்தைவிட காலம் வேகமாக நகர்கிற இச்சூழலில், நமது வாழ்க்கைக்கான வெளிச்சத்தைத் தரும் அனுபவங்கள் மூன்றாவது உலகத்திலிருந்து வருவதில்லை. நம்மைச்சுற்றி நிகழும் ஒவ்வொறு நிகழ்வும் ஏதோ ஒருவகையில் நமக்கான செய்தியைத் தாங்கித்தான் வருகின்றன. சென்ற வாரம் ஒரு மாலைப்பொழுதில், ஒரு பேக்கரி கடையில் இனிப்புகளை வாங்கிக்கொண்டிருந்தேன். கடையின் ஓரத்தில் பூச்சிகளைக் கொல்லும் மின்சார விளக்கு பொருத்தப்பட்டிருந்தது. இதற்கு முன் அக்கருவியை பல முறை, பல இடங்களில் பார்த்திருந்தாலும் அன்று அது என் கவனத்தைக் கவர்ந்தது. நான் அதனை கவனித்துக்கொண்டிருந்ததைக் கவனித்த கடைகாரர், “இந்த விளக்கு ரொம்ப நல்லா வேலை செய்யுது சார். முன்னாடி பூச்சித் தொல்லை தாங்கமுடியாது” என்றார். மனிதர்கள் தமது சுகவாழ்க்கைக்காக மற்ற உயிரினங்களின் இருப்பை கேள்விக்குறியாக்குவது என்ன நியாயம் என்று தெரியவில்லை. பூமியில் இருக்கும் உயிரினங்களில், மனிதன் மட்டுமே உலகத்துக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக்கொள்ளாமல், தனக்கு ஏற்றார்போல் உலகத்தை மாற்ற நினைக்கிறான். இந்த மனநிலை தான் நமது எல்லாப்பிரச்சனைக்கும் அடிப்படைப்புள்ளி.

உலகமெல்லாம் வலிமையுள்ளவனின் பெருங்கருணையினால் மட்டுமே சிறுபான்மை மக்களின் வாழ்க்கை நீடித்திருக்கும் நிலை பெரும்பாவம். இலங்கையில் சிறுபான்மை தமிழரின் வாழ்க்கை மீது வலிமையும் அதிகாரமுள்ள சிங்களவர் முடிவுகளெடுப்பதும் அவர்கள் மீதான வன்கொடுமையும் இந்தியாவுக்கு கீழே சிறு கண்ணீர்த்துளியாய் அமைந்திருக்கும் இலங்கைத் தீவின் உயிர்ச்சமநிலைக்கு விரோதமானது. முற்றிய இலவம்பஞ்சு வெடிக்கும் போது, காற்றின் போக்கில் பரவிச்செல்லும் பஞ்சினைப் போல இலங்கையின் தமிழ் மைந்தர்கள் உலகமெலாம் அகதிகளாக விரட்டப்பட்டது அயோக்கியத்தனம்.

நான் பணிபுரியும் திருவாலங்காடு வட்டார களஞ்சியத்தின் வட்டார செயற்குழு உறுப்பினரில் பத்மினி என்பவர் இலங்கை அகதி. அற்புதமான பெண்மணி. தாமே முன்வந்து வட்டாரப்பணிகளில் ஈடுபடுத்திக்கொள்பவர். அவர் சார்ந்திருக்கும் பகுதிக்கு இணையாளர் கிடைக்கவில்லை. கடந்த 6 மாதங்களாக, இவர் எந்த எதிர்பார்ப்புமின்றி அந்தப் பகுதியை சேர்ந்த குழுக்களின் கூட்டங்களை தாமே முன்வந்து நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் சிதறியுள்ள அவரது பிற உறவினர்களை சந்திக்க அடிக்கடி வெளியூர் சென்று வருவார். அவரது குடும்பம் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறு குடிலமைத்து வாழ்ந்து வந்தாலும், இதுவரை அவர்களுக்கு நிலஉரிமை வழங்கப்படவில்லை. “மரங்கள் ஓய்வை விரும்பினாலும்; காற்று சும்மா இருப்பதில்லை” என்பதைப்போல், அவருக்கு நமது தேசம் அமைதி தராவிட்டாலும், தொந்தரவு செய்யத் தவறுவதில்லை. தற்போது அவர் இருக்கும் இடத்திலிருந்து அவரது குடும்பத்தை அப்புறப்படுத்த உள்ளூர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவர் குடும்பம் யாரிடம் உதவிகேட்டு நின்றாலும், இரண்டாம்தர குடிமகனாக நடத்தப்படுகின்றனர். இலங்கைத்தமிழர் நம்மைச்சுற்றி விதைகளாக விழுந்து கிடந்தாலும், இன்னும் நமது மண்ணில் வேர்பிடிக்க முடியாத சூழல் வேதனைக்குறியது.

திருவாலங்காடு, பொது நேர்மை பற்றிய மிகச்சிறந்த நிகழ்வைத் தாங்கியுள்ள அற்புதமான கிராமம். 600 ஆண்டுகளுக்கு முன்னால் அடைக்கலம் தேடிவந்த ஒருவனின் உயிருக்கு திருவாலங்காட்டைச் சேர்ந்த பழையனூர் கிராம மக்கள் உத்திரவாதம் கொடுத்தனர். ஆனால் அடைக்கலமாய் வந்தவரின் உயிரைக் காக்கமுடியாமல் போனதால் ஊரிலுள்ள 64 குடும்பங்களின் தலைவர்கள் ஒன்று கூடி பொது இடத்தில் தீ வைத்து அனைவரும் தமது உயிரை மாய்த்துக்கொண்டனர். அவர்கள் தீ வைத்துக் கொண்ட இடம், நீலிக்கோவில் ஆகியவற்றின் படிமங்களைத் தேடி நானும் தங்கபாண்டியனும் சென்ற போது பெய்த பெருமழையும் கடுங்காற்றும் இன்று நினைவுக்கு வருகிறது. யாரோ முகமறியாத நபருக்கு ஊரே உயிரைக் கொடுத்த பண்பு நீர்த்துப்போய் வருவது பாரம்பரியத்தின் மீதான கரையாகும்.