நோலன் எனும் மேஜிஷியன்


க்ரிஸ்டோபர் நோலன்.

சமகால திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளுமை. 1990களின் இறுதியில் திரையுலகில் நுழைந்து பத்தே ஆண்டுகளில் திரைமொழியில் பல ஜாலங்கள்கள் நிகழ்த்திய அற்புதம். 1998ல் Followingல் ஆரம்பித்து Memanto, Insomnia, 3 Batman reboot series, Prestige, Inception, Interstellar, Dunkrik என 10 படங்களில் எதுவுமே தப்பு செய்யாத மிக நேர்த்தியான படங்களாக அமைந்திருக்கின்றன. BBC 21 ம் நுற்றாண்டின் 100 ஆகச்சிறந்த படங்கள் பட்டியலில் இவரது மெமண்டோ, டார்க் நைட், இன்செப்ஷன் என மூன்று படங்கள் இடம் பெற்றிருக்கிறது.

இதற்கிடையே ஹோவார்ட் ஹியூகோவுடைய பயோகிராபியை இவர் எடுக்க திட்டமிட்டு, மிகச் சிறந்த திரைக்கதையெல்லாம் எழுதிய பின்னர் அந்த வாய்ப்பு மார்ட்டின் ஸ்கார்சிசிக்கு சென்று ஏவியேட்டராக மாறியது. அந்த படமும் மிகச் சிறந்தது தான் என்றாலும் நோலனுடைய டிரீட்மெண்ட்டை காணமுடியாதது ஒருவகையில் இழப்பே.

நோலனுடைய தனித்தன்மை மனதின் விளையாட்டை காட்சிப்படுத்தும் வித்தை. மனவியல் சார்ந்த விஷயங்கள் அவரது ஹோம் கிரவுண்ட். எல்லா படங்களுமே மனித மனங்களின் பயம், குற்ற உணர்வு, சாத்தியப்படாத கற்பனைகள் ஆகியவற்றால் பின்னிப்பிணைந்திருக்கும்.

ஸ்டான்லி குப்ரிக்குப் பிறகு அவர் விட்ட இடத்தை நிரப்புவதற்கு இவரால் மட்டுமே முடியும். குப்ரிக் அளவுக்கு வெர்சடாலிட்டி நோலனிடம் இல்லை என்ற வாதம் நிறைய ரசிகர்களிடம் இருக்கிறது. அதனை சமீப கால டங்க்ரிக் போன்று வேறு ஜானர்களில் நோலன் முயற்சித்து தன்னை நிறுபிப்பதும் நடந்து தான் வருகிறது. இருந்தாலும், மேக்கிங்கிலும், திரைகதையின் ஆழத்திலும் குப்ரிக்கின் கையாளுகையை நோலனின் படைப்பிலும் பார்க்கமுடியும்.

நோலனுடைய எல்லா படைப்பிலும் ஹீரோவின் சிறு தவறு அல்லது கவனக்குறைவால் ஏற்படும் சுய குற்ற உணர்வு அதனைச் சார்ந்து அவனின் மனதுக்குள் எழும் போராட்டம், தீர்க்கும் விதம் என்ற இழை தவறாமல் இடம்பெறும். ஆனால் ஒவ்வொறு படத்திலும் அந்த தீம் தமக்கே உரிய தனித்தன்மையுடன் இயங்கும் வகையில் இருப்பது தான் மிகச் சிறப்பு.

மெமண்டோவில் ஹீரோவிற்கு குறுகிய கால ஞாபகமறதி நோய் இருக்கும். அது ஏற்படுத்தும் அழுத்தத்தை மறைக்க, தமக்கு தாமே தவறான தகவல்களை தனக்குள் உள்ளிட்டுக்கொண்டு வாழ்க்கையை சுவாரசியமாக்கப் பார்ப்பான்.
இன்சோம்னியாவில் சிறு கவனக்குறைவால் தன் சக துப்பறிவாளனை சுட நேர்ந்த குற்ற உணர்வு அல்பசினோவை கடைசி வரை தூங்க விடாது. மனதுக்குள் ஏற்படும் போராட்டம் கடைசி வரை தன்னுடைய அடிப்படை நேர்மையை விட்டுக்கொடுக்காமல் போராடுவது அற்புதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.

பேட்மேன் ரீபூட் சீரிஸ் முழுவதுமே ஹீரோவின் குற்ற உணர்ச்சி அல்லது பயம் சார்ந்து கட்டமைக்கப்பட்டதின் உச்சம். சிறு வயதில் தன்னால் தான் தனது பெற்றோர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற உணர்வு ப்ருஸ் வெய்னை ஆட்டுவிக்கும். வவ்வாலை பார்த்து பயப்படுவான். எது பயத்தை ஏற்படுத்துகிறதோ அதுவாகவே மாறி விடுவதே அதனை வெல்லும் வழி என்ற அழகாக உளவியல் தத்துவத்தை கட்டமைத்திருப்பார். கடைசி பாகத்தில் கூட பேனால் அடித்து துவைக்கப்பட்டு பாதாளக்கிணறில் வைக்கப்பட்டிருக்கும் போது வெளியேறும் போது வரை மரண பயம் மட்டுமே தப்பிக்க வழியை ஏற்படுத்தும் என்பதை வலிமையாக வெளிப்படுத்தியிருப்பார்.

டார்க் நைட் (2008) படத்தில் கட்டமைக்கப்பட்ட ஜோக்கர் என்ற எதிர் நாயகன் கதாபாத்திரம், உலக சினிமா கண்ட மிகச் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கக்கூடியது. சமூக உளவியலை முழுமையாக புரிந்து கொண்டு, பொதுஜனங்களின் நம்பிக்கையை தகர்த்து, பயத்தை ஏற்படுத்துவதின் மூலம் பெரிய பேரழிவை ஏற்படுத்த திட்டமிடும் அவனது அணுகுமுறை வேறெந்த படத்திலும் காணாதது.

த ப்ரிஸ்டீஜ்ல் தனது நண்பனின் மனைவி ஜீலியாவுடைய விபத்து மரணத்துக்கு தான் தான் காரணம் என்ற குற்ற உணர்வு, இன்செப்ஷனில் காப்பின் மனைவி அரியாட்னியின் விபத்து ஏற்படுத்தும் உளவியல் குழப்பம் என படத்தை அடுத்தடுத்து எடுத்து செல்ல உதவியிருக்கும்.

ஃபாலோயிங்கில் தான் செய்த கொலையை மறைக்க தன்னைப் போலவே இன்னொறுவனை மன ரீதியாக தயார் செய்வது விரிவாக சொல்லப்பட்டிருக்கும். நோலனுடைய முதல் டாகுமெண்டரியான டூடுல் பக் கூட ஒருவனின் ஆல்டர் ஈகோவுடனான போராட்டத்தை குறியீடாக கொண்டிருக்கும். இன்டர்ஸ்டெல்லர், டங்க்கிரிக்கில் கூட மனித மனம் சார்ந்த விளையாட்டை மிக அழகாக பின்னியிருப்பார் நோலன்.

இன்றைய தேதிக்கு நோலனுக்கு 47 வயது தான் ஆகிறது. சராசரியாக இரண்டு வருடத்துக்கு ஒரு படம் இயக்குகிறார். ஆக, இன்னும் அடுத்த 20 வருடங்களில் 10 படங்கள் எடுப்பார். வரும் காலங்களில் அவரது முதிர்ச்சியும், அனுபவமும் திரைத்துறையில் ஏற்படும் தொழில்நுட்ப மேம்பாடும் ஆகச்சிறந்த திரைப்படங்களை தரும் என்பதில் சந்தேகமில்லை. தற்சமயம், ஜேம்ஸ்பாண்ட் படத்தின் சீரிஸை அவர் இயக்குவதற்காக பேச்சு வார்த்தை நடந்து வருவதாக அறிகிறோம். ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தின் மனவியல் நோலன் வழியாக அடுத்த தளத்துக்கு செல்லும் என்பதே மிக உற்சாகமாய் இருக்கிறது.

மனித மனம் மிகச் சிக்கலானது. அதனைச் சார்ந்து படம் எடுப்பது கத்தி மேல் நடக்கும் வித்தை. கொஞ்சம் ஆழமாக போனால் படம் செம மொக்கையாகிவிடும். மேம்போக்காக சொன்னால் விஷயம் உள்ளுக்குள் போகாமல் நீர்த்து போய்விடும். பெருவாரியான மக்களையும் கவர வேண்டும் அதே சமயம் உள்ளடக்கத்திலும் எந்த சமரசமும் செய்துகொள்ளக் கூடாது என்ற அக்கறை நோலனை போன்ற சிலரால் மட்டும் தான் செயல்படுத்த முடிகிறது.

திரைப்படம் என்பது ஒரு கனவை ரசிகனின் விழிப்பு நிலையிலேயே விரித்து காண்பிப்பது. மாய உலகின் ஜாலங்களை சாத்தியமாக்குவது. நோலனுடைய தந்தை ஒரு ப்ரொபஷனல் மேஜிஷியன். திரையில் நமக்காக கனவுலகை க்ரியேட் செய்து ரசிகனை ஆஹாவென வியக்கவைப்பதால்  சந்தேகமே இல்லாமல் நோலன் மிகச்சிறந்த மேஜிஷியன்.

p

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s